Saturday, March 31, 2012

Petrol- பெட்ரோல்


உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?

அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!!

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.

அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்..

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்


சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்… (கண்டிப்பாக படிக்கவும் !!!)


1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.


2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.


3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.


4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.


5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.


6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.


7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.


8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.


9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.


10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.


இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்..

Thursday, March 15, 2012

பேசாமல் நாம்



 பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம்
 வயதானால் வழுக்கை விழாது
 நகரத்தில் நமக்காகவே சிறப்புப் பேருந்துகள் இயங்கும்
 தினமும் முகச்சவரம் செய்யவேண்டியதில்லை
 சட்டங்கள் நமக்காகச் சாய்ந்திருக்கும்
 எப்பொழுதும் நம் செல்பேசி பயன்பாட்டிலேயே இருக்கும்
 சடங்கானால் சீர் செய்து ஊர் கூடிக் கொண்டாடுவார்கள்
 நாற்பது பேர் ப்ரொபோஸ் செய்வார்கள்
 கல்யாணம், மருதாணி, நலங்கு, பட்டுப்புடவை, வளைகாப்பு என அநேக தருணங்களில் நாயகியாகி அமர்ந்திருக்கலாம்
 கணவனுக்கு எதிராகப் புகார் கொடுக்கலாம்
 மூத்த இலக்கியவாதி திருவனந்தபுர விடுதி முகட்டுக்கு நம்மை அழைத்துப்போய் கடல் பார் என்று காட்டுவார்
 இந்தக் காட்சி உனக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும் என்பார்
 முகப்புத்தகத்தில் எவனையும் கவிழ்க்கலாம்
 எவனாவது ஒருவன் நமக்கு தாஜ்மஹால் கட்டுவான்
 கிழவியாயிருந்தாலும் ஒருவன் அருநெல்லிக்கனி தருவான்
 ஒன்பதாம் வகுப்பே படித்திருந்தாலும் கல்லூரிக்குப் பேச அழைப்பார்கள்
 மதுரையை எரிக்கலாம்
 கூந்தல் வாசம் குறித்து ஐயமெழுப்பி ஆண்டவனையே அலைக்கழிக்கலாம்
 நமக்கு நல்ல அடிமைகள் வாய்ப்பார்கள்
 டென்னிஸ் ஆடினால் உலகமே கவனிக்கும்
 அரச விவகார அதிகாரியானால் பத்திரிகைகள் பின்னாலேயே ஓடிவரும்
 நம் வலைப்பூவில் நிறைய வண்டுகள் திரியும்
 திடீரென்று நம் புத்தகம் எஸ்கிமோக்களின் மொழியில் பெயர்க்கப்படும்
 யார் அமைச்சராக வேண்டும் என்பதை நாம் முடிவு செய்யலாம்
 பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம், இல்லையா


பேசாமல் நாமும் ஆணாகவே பிறந்திருக்கலாம்
வயதானால் கருப்பை பிரச்சனை வராது
நகரப் பேருந்துகளில் ஈனப்பிறவிகளிடம் இடிபட வேண்டியது இருக்காது
மாதமொரு முறை அடிவயிற்று வலி தாங்க வேண்டியதில்லை
சட்டங்கள் இருந்தும் குற்றங்களுக்கு ஆளாகமலிருக்கலாம்
முக்கியத்துவ பட்டியலில் குடும்பத்தை பின் தள்ளி எப்பொழுதும் நம் தோழர்கள் முதலிடம் வகிப்பார்கள்
சடங்கானால் ,சத்தமில்லாமல் இருப்பதை விட்டு,அலங்கார பொருளாக ஊர் முன் நிற்காமல் இருக்கலாம்
காதலை ஏற்காவிட்டால் ஆசிட் வீச்சு வாங்காமல் இருக்கலாம்
கல்யாணம், நகை, பட்டுப்புடவை, வளைகாப்பு ஆகியவற்றை நினைத்து கருக்கலைப்பு செய்யாமல் இருப்பார்கள்
‘கணவனுக்கு கட்டுப்பட்டு போ’ என்ற அம்மாவின் அறிவுரை கேட்காமல் இருந்திருக்கலாம்
அன்புக்கணவன் மூணாருக்கு அழைத்து போய், கொலை செய்ய மாட்டான்
அந்தரங்காமாக எடுத்த புகைப்படத்தை முகப்புத்தகத்தில் போட்டதற்கு தற்கொலை செய்யாமல் இருக்கலாம்
மூன்றாவது மனைவியாய் வாக்கப்பட்டு, பதின்நாங்காவது பிள்ளை பெறும் போது இறந்து, தாஜ்மஹால் பெற தேவை இல்லை
மனைவியையும் எதிரியிடம் பந்தயப் பொருளாக வைக்கலாம்
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, ஆசிரியரின் இச்சை பார்வைக்கு ஆளாக வேண்டாம்
கணவனை இழந்தால் மதுரையை எரிக்க வேண்டி இருக்கும்
ஆண்டவனே ஆனாலும் பதி சந்தேகப்படுவான்
நமக்கு நல்ல அடிமைகள் வாய்ப்பார்கள்
குட்டைப் பாவாடைக்காக இல்லாமல் திறமைக்காக டென்னிஸில் புகழ் பெறலாம்
பத்திரிகைகளிடமிருந்து தப்பிக்க உயிரை விலைக் கொடுக்க வேண்டாம்
வலைப்பூவில்கூட தேனைத் தேடி, வண்டுகள் திரியாமல் இருக்கும்
திடீரென்று நாம் துணிக்கடையில் உடை மாற்றியதை இணையதளத்தில் பார்க்க வேண்டாம்
யார் ஆண்டாலும் 33%-காக போராட வேண்டாம்
பேசாமல் நாமும் ஆணாகவே பிறந்திருக்கலாம் இல்லையா!!!

Tuesday, March 13, 2012

ஒரு காதல் கதை- இறுதிப் பகுதி

ஒரு காதல் கதை- இறுதிப் பகுதி


வீடும் நெருங்கிக் கொண்டு இருந்தது. எதாவது ஒரு சந்தினில் அல்லது கடையினில் மறைந்து நின்று என்னை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பாள் என்ற எனது எண்ணமும் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியுடனும் கரைந்துக் கொண்டு இருந்தது.
“அம்மா …. அண்ணன் வந்திரிச்சி…”.
என்னை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த எனது தங்கை மகிழ்ச்சியுடன் என்னை நோக்கி வந்து கொண்டு இருந்தாள். அவளின் பின்னாடியே வீட்டினுள் இருந்து அம்மாவும் அப்பாவும் புன்னகையுடன் வந்தனர். கூடவே சில உறவினர்களும். அவர்களுள் அவள் இல்லை.
ஒரு வேளை வீட்டினில் அவள் இருக்க கூடும் என்ற எனது கடைசி நம்பிக்கையும் சிதைந்து போனது.
அவள் என்னை காண வரவில்லை.
சோகம் தான். இருந்தும் ஏனோ மனம் நிலை குழையவில்லை. எதிரினில் என்னை நோக்கி பாசத்துடன் வரும் தங்கையின் புன்னகை, ஒரு வருடம் பெற்ற பிள்ளையை காணாது இருந்து விட்டு பாசத்துடன் என்னை நோக்கி வந்து கொண்டு இருக்கும் எனது பெற்றோரின் புன்னகை… என்னை புன்னகைக்க தூண்டிக் கொண்டு இருந்தன. நானும் என்னை அறியாது புன்னகைத்துக் கொண்டு இருந்தேன். பாதி மனது ஒருத்தியை தேடிக் கொண்டு இருந்தது. மற்றோர் பாதியோ துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்தது. சிறிது இடைவெளிக்கு பின்னால் மீண்டும் என்னுடைய வாழ்க்கைக்கு திரும்பி இருக்கின்றேன்.” இது என் உலகம். இங்கு எனக்கு தீங்கு எதுவும் நேராது.” என்று எண்ணியவாறு வீட்டினுள் செல்லத் தொடங்கினேன். என் தோட்டத்து மலர்கள் மலர்ந்து புன்னகைத்துக் கொண்டு இருந்தன. உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டேன். அவள் நன்றாகத் தான் இருக்கின்றாள். என்னை விட்டு வேறு எங்கு சென்று விடுவாள். வரட்டும். அவளைப் பார்த்துக் கொள்கிறேன்!!!
ஊர்க்கதைகள் அனைத்தும் பேசி விட்டு உறவினர்கள் அனைவரும் சென்ற பின்னும் கூட அவளின் சுவடு தெரியவில்லை. சரி சிறிது நேரம் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு பின் அவள் வீட்டிற்க்கு நாமே போகலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கையில்,
“என்ன சக்தி… யாரையோ தேடுற மாதிரி இருக்கு?… குமாரயா!!!” என்று ஆரம்பித்து வைத்தாள் பிரியா.
திரும்பி அவளை முறைத்தேன்.
“நான் யார தேடுறேன்னு உனக்குத் தெரியும்… நானே உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன்… எங்கடி அவ… நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன்… அவளைக் காணோமே?” என்றேன்.
“எனக்கும் தெரியல சக்தி.. நேத்து வரைக்கும் இங்க தான் சுத்திக்கிட்டு இருந்தாங்க… ஒரு வேளை நீ ஊருக்கு வரது தெரிஞ்சி இருக்குமோ?… ஐயோ தொல்லை வருதேனு நெனச்சி தப்பிச்சி இருக்கலாம்… அவுங்க புத்திசாலினு நான் அப்பவே சொன்னேன்ல″ என்றாள் நக்கலாய்.
“உன்னை… ” என்று நான் அவளுக்கு பதில் கூறத் தொடங்கும் போது வாசலில் அவளின் தந்தையின் குரல் கேட்டது.
“சண்முகம்!!!”.
விரைவாகச் சென்று சன்னலின் வழியாக எட்டிப் பார்த்தேன். அவள் அவளது பெற்றோர் உடன் நின்று கொண்டு இருந்தாள். கோவிலுக்கு சென்று வந்து இருந்தனர் போல் இருந்தது. ஒரு வருடத்திற்கு முன் எப்படி இருந்தாளோ அதை விட மேலும் அழகு கூடி இருந்தாள். அவளிடம் நான் கேட்க நினைத்த கேள்விகளுள் “நாளுக்கொரு தரம் அழகைக் கூட்டிக் கொண்டே போகின்றாயே… அதை எப்படி என்று சொல்கின்றாயா?” என்ற இந்த கேள்வியையும் சேர்த்துக் கொண்டேன்.
“ஏன்டா முருகா… நீ முன்னமே வருவேனு நெனச்சேன்… ஏண்டா இவ்வளவு நேரம்… சரி சரி உள்ள வா” என்று எனது தந்தை அவர்களை வீட்டினுள் அழைத்து வந்தார். ஓடிச் சென்று நானும் அவர்களை வரவேற்க வேண்டும் போல் இருந்தது, இருந்தும் “அவசரப்பட்டு காரியத்த கெடுத்துடாத சக்தி… பொறுமையா இரு.. கூப்பிடுவாங்க!!” என்ற எனது மனசாட்சியின் கூற்றுக்கு மரியாதை கொடுத்து எனது அறையின் உள்ளே இருந்தேன்.
“அது இல்லடா சண்முகம்… இன்னிக்குனு பார்த்து பக்கத்து ஊர்ல இருக்குற கோவிலுக்கு போயிட்டு வரணும்னு என் பொண்ணு ஒரே அடம்பிடிச்சிச்சி… அதான் போயிட்டு வர தாமதம் ஆயிடிச்சி.. சரி சக்தி வந்துட்டான்ல″ என்றவாறே அவளின் தந்தை எனது வீட்டினுள் வந்தார். அவளும் தொடர்ந்து உள்ளே வந்தாள்.
“கேட்டியா சக்தி… கோவிலுக்கு போயிட்டு வந்து இருக்காங்களாம்… “ஆண்டவா என்னை காப்பாத்துனு வேண்டிட்டு வந்து இருப்பாங்க போல″ என்றாள் பிரியா.
“அடி…” என்று நான் அவளை அடிக்க போகும் முன் வேகமாக ஓடி,
“வாங்கக்கா..” என்றவாறு அவளின் அருகே போய் நின்றுக் கொண்டாள்.
“டேய் சக்தி… இங்கவா.. உன்ன பார்க்க முருகன் அண்ணாச்சி வந்து இருக்காங்க” என்று அழைப்பு விடுத்தார் அம்மா. அந்த அழைப்புக்காகத்தான் காத்துக் கொண்டு இருந்தவன், இயல்பாய் அவர்களை பார்க்க வருவதைப் போல்
“வாங்க மாமா… வாங்க அத்தை… நல்லா இருக்கீங்களா?…” என்று கூறியவாறே அறைக்குள் நுழைந்தேன். வேண்டும் என்றே அவளைப் பார்க்காது கவனத்தை அவளின் பெற்றோர்களின் மீது வைப்பதை போன்று நடித்துக் கொண்டு நின்றேன்.
“நாங்க நல்லா இருக்கோம்பா… நீ எப்படி இருக்க… படிப்பெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா” என்றார் அவளின் தந்தை.
“எனக்கென்ன மாமா… நல்லா இருக்கேன்… எல்லாம் நல்ல படியா முடிந்தது!!!” என்றேன் ஒரு புன்னகையுடன். அவள் மௌனமாய் நின்று கொண்டு எங்களையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“நல்லதுப்பா… எப்படியோ கடைசில ஊர் பக்கம் வந்துட்ட… சரி.. எதாவது புதுசா சொல்லிக் குடுத்தானுங்களா அந்த ஊர்ல… விவசாய புரட்சி அது இதுனு எதாவது பண்ணிக்கிட்டு இருப்பானுங்களே… அப்படி ஏதாவது இருந்தா சொல்லு… நம்மளும் முயற்சி பண்ணிப் பார்ப்போம்…” என்றார்.
“புரட்சியா!!!” சிரித்தேன். “மாமா… அவன் விவரமாத்தான் இருக்கான். அவன் புரட்சினு, பூச்சிக் கொல்லி, உரம் அது இதுனு கண்டுபிடிச்சி நம்மளுக்கு கொடுத்துட்டு போயிட்டான். அங்க அவன் இத எல்லாம் அதிகமா பயன்படுத்துரதே இல்ல… நம்ம ஒரு காலத்துல பண்ணிக்கிட்டு இருந்த விவசாய முறையத் தான் அவன் புரட்சினு இப்போ பண்ணிக்கிட்டு இருக்கான்… நம்ம ஆளுங்க தான் வெளிநாட்டுக்காரன் எத சொன்னாலும் தலைய ஆட்டிருவோமே… அதான் இன்னும் அவன் தூக்கி போட்ட முறையையே இன்னும் பயன் படுத்திக்கிட்டு இருக்கோம்” என்றேன்.
“என்ன சக்தி சொல்ற” என்றார் ஆச்சர்யமாய்.
“ஆமாம் மாமா… இப்போ எல்லாம் அவன் நம்ம பண்ணிக்கிட்டு இருந்த இயற்கை விவசாய முறையைத் தான் அதிகமா பயன் படுத்த ஆரம்பிச்சி இருக்கான்… நாம தான் இன்னும் அவன் சொன்னதையே கேட்டுக் கிட்டு இருக்கோம்” என்றேன்.
“அப்படினா…” என்று அவளின் தந்தை தொடங்கும் போது இந்த உரையாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதை போல்,
“அண்ணே!!! இன்னிக்கு தான் புள்ள ஊரில இருந்து வந்துருக்கு… நீங்க இந்த கேள்வி எல்லாம் அப்புறம் கேட்டுக்கலாமே… கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும் அவன்” என்றார் என் அம்மா.
“அதுவும் சரிதான்… நம்ம அப்புறம் பேசலாம் சக்தி.. நீ போயி ஓய்வு எடுத்துக்கோ… நாங்களும் கிளம்புறோம்… கோவில்ல இருந்து நேரா உங்க வீட்டுக்குத் தான் வந்தோம்… நாங்களும் போயிட்டு அப்புறமா வறோம்” என்று கூறியாவாறு அவளின் தந்தையும் கிளம்ப ஆரம்பித்தார்.
“சரிமா … அப்படியே நானும் வெளியே போயிட்டு சீக்கிரமா வர பார்க்கிறேன்…” என்று கூறி விட்டு நானும் வேகமாக வெளியே கிளம்பத் தயார் ஆனேன்.
“டே… நீ எங்கடா போற?”
“போகும் போதே எங்க போறேன்னு கேக்குறீயேம்மா!!! வெளிநாட்டுல இருந்து நீங்க வந்தீங்களா…இல்ல நான் வந்தேனா… எல்லாத்தையும் மறந்துட்டிங்களே…” என்று விளையாட்டாய் அம்மாவை கிண்டல் அடித்து விட்டு ” சும்மா ஊர சுத்திப் பார்த்துட்டு வந்துடுறேன்மா… ரொம்ப நாள் ஆச்சில… எவனாவது வந்து தேடுனானுங்கன்னா ஏரிக்கரை பக்கம் இருப்பேன்னு சொல்லுங்க.. சீக்கீரம் வந்துருவேன்” என்று சொல்லி வெளியே கிளம்பினேன். நான் சொன்னது நிச்சயம் அவளின் காதிலேயும் விழுந்து இருக்கும் என்று நம்பியவாறு ஏரியை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
போலக் … போலக் … போலக்….
நான் எறிந்த கல் ஏரி நீரினில் மூன்று முறை குதித்து எழுந்து விட்டு நான்காவது முறை நீரினுள் மூழ்கியது. நான் எதிர்ப்பார்ததைப் போலவே ஏரிக்கரை யாரும் இன்றி அமைதியாய் இருந்தது. சூரியன் மறையும் நேரம். குளிர் தென்றல் என்னிடம் பல கதைகள் பேசிக் கொண்டு இருக்க, அவள் வருவாள் என நான் காத்து இருக்க தொடங்கி 20 நிமிடங்கள் கழிந்து இருந்தன.
தூரத்தில் எங்கோ கேட்ட கொலுசுச் சத்தம அவள் வருகையை எனக்கு முன் கூட்டியே அறிவிக்க நான் தயாரானேன்.
சில கேள்விகளுக்கு அவள் பதில் சொல்ல வேண்டி இருக்கின்றது.
சிறிது நேரத்தில் அவளும் ஏரிக்கரைக்கு வந்து சேர்ந்தாள். ஏனோ முகம் வாடி போய் இருந்தது.
சொல்லாமலே அவள் ஏதோ பிரச்சனையில் இருப்பதை உணர்ந்தேன்.
“ஏய் என்னாச்சி?” என்றேன்.
பதில் வரவில்லை.
“எதாவது பிரச்சனையா…?” தொடர்ந்தேன்.
“இல்லை…” என்றாள்.
பெண்கள் இல்லை என்றால் ஏதோ இருக்கின்றது என்று அர்த்தம். நிச்சயப் படுத்திக் கொண்டேன். அவள் ஏதோ பிரச்சனையில் தான் இருகின்றாள்.
” சரி… ஏன் என்னைப் பார்க்க முன்னாடியே வரல″ என்றேன்.
மீண்டும் பதில் எதுவும் வரவில்லை.
“இங்க பாரு… நீ என்ன நினைகிறேன்னு எனக்கு தெரியல்ல.. ஆனா அது என்னனு சொன்னாத் தான் நான் எதாவது சொல்ல முடியும்…உனக்கு எப்போ சொல்லனும்னு தோணுதோ அப்போ சொல்லு… நான் கட்டாயப்படுத்தல… சரியா” என்று கூறி விட்டு மீண்டும் ஏரியைநோக்கித் திரும்பினேன்.
அவளின் மௌனத்தை கலைக்குமே என்று எண்ணி கையில் இருந்த கல்லை நீரில் எறியாது கையிலையே வைத்துக் கொண்டு ஏரியை கண்டு கொண்டு நின்றேன்.
“நீங்க என்ன இன்னும் காதலிக்கிறீங்களா?”
சிறிது நேர மௌனத்திற்கு பின் அவள் பேசி இருந்தாள். ஆச்சர்யத்தோடு திரும்பினேன்.
“இன்னும் காதலிக்கிறீங்களாவா?”… புரியவில்லை.
“என்ன கேக்குற” என்றேன்.
“சொல்லுங்க… என்ன இன்னும் காதலிக்கிறீங்களா?” என்றாள் மீண்டும்.
“இன்னுமாவா!!! நான் உன்னை காதலிப்பதை எப்ப நிறுத்தினேன் … அதைத் தொடர்வதற்கு… என்ன ஆச்சி மலர்… ஏன் இந்த கேள்வி” என்றேன்.
மௌனத்தை கலைத்தாள்.
“என்னோட தோழிங்க தான் சொன்னங்க….” ஆரம்பித்தாள்.
ஒ! பிரச்சனை அப்படி வருதா என்று நினைத்தவாறே,
“என்ன சொன்னார்கள்” என்றேன்.
“நீங்க வெளிநாட்டுக்கு போனதுக்கு அப்புறம் எனக்கு ஒரு கடிதாசி கூட போடலைல.. உங்க வீட்டுக்கு எழுதுன கடிதத்துல கூட என்னை பத்தி கேக்கல… அத பத்தி என்னோட தோழிங்க கிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போது தான் அவளுக சொன்னாளுக… வெளிநாட்டுப் பொண்ணுங்க எல்லாம் அழகா இருப்பாங்கலாம். அந்த நாடுங்க எல்லாம் வளமான நாடுங்களாம். அங்க போன யாரும் திரும்பி இங்க வர மாட்டங்களாம். அங்கயே யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவாங்களாம்.” என்றாள்.
“ஒ! அதுனால நானும் உன்ன மறந்துட்டு அங்கயே யாரையாவது காதலிச்சிருப்பேன்னு நினைச்சியாக்கும் !” என்றேன் புன்னகையை அடக்கிக் கொண்டு.
ஆம் என்பதைப் போல் தலையாட்டினாள்.
“அடி அப்பாவி!!! அப்படி யாரையாவது நான் கூட்டிகிட்டு வந்து நின்று இருந்தேன்னா எங்க அம்மாவே என்ன ஊர் முழுக்க துரத்தி துரத்தி அடிச்சி இருப்பாங்க என்கிறத மறந்துவிட்டியேடி” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு “உன் தோழிங்க சொன்னது உண்மை தான்” என்றேன்.
அதிர்ச்சியாய் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன…”
“ஆம்… அந்த நாட்டுப் பெண்கள் அழகாக இருப்பார்கள். உன் தோழிகள் சரியாகத்தான் அதை சொல்லி இருகின்றார்கள்.” என்றேன்.
மௌனம். அவள் பேசவில்லை.
“ஆனால், உன்ன போல ஒரு பொண்ணு அங்க கிடையாதுன்னு அவங்களுக்கு தெரியாது. அவங்கள சொல்லி தப்பு இல்லை. அவங்க அந்த நாட்டுக்கு எல்லாம் போனது கிடையாது. நான் சொல்றேன், அங்க பொண்ணுங்க அழகா இருப்பாங்க. ஆனா நம்ம ஊரு பொண்ணுங்க அளவுக்கு அழகா இருக்க மாட்டாங்க. அதுவும் உன்ன போல ஒரு பொண்ண உலகத்துல வேறு எங்கயும் யாரும் பார்த்து இருக்க முடியாது. இத தெரிஞ்சிக்கோ ” என்றேன்.
சிறிது புன்னகைத்தாள்.
“அப்புறம் வளமான நாடுன்னு சொன்னாங்களோ… வளம் நாட்டுக்கு நாடு வேறுபடும். அவனுங்க பொன்னையும் எண்ணையையும் வைச்சி வளமான நாடுன்னு சொல்லுவானுங்க. ஆனா என் கணக்கே வேற. நான் என்னையும் உன்னையும் வைச்சே வளமான நாட்டை முடிவு செய்றேன். உனக்கு ஒரு உண்மை தெரியுமா, இன்னிக்கு நான் பேருந்து நிறுத்தத்துல இருந்து எங்க வீடு வரைக்கும் உன்ன தான் தேடிக்கிட்டே வந்தேன். கூட வேற யாரும் வரல. ஆனாலும் நான் தனியா இல்லை. நம்மள சுத்தி முழுதும் இருந்தும், நமக்குள்ளேயும் இருந்தும், கண்ணுக்கு தெரியாத கடவுள போல தான் நீயும் இருந்த. எனக்குள்ளேயும், நான் வந்த பாதை முழுதும் நினைவுகளாவும். என் கண்ணுக்கு தான் நீ தெரியல. ஆனா நீ என் கூடத் தான் இருந்த. அப்படி பார்க்கும் போது எனக்கு சந்தோசத்த குடுக்குற இந்த ஊர் தான் என்னைப் பொறுத்த வரைக்கும் உலகத்திலேயே வளமான ஊர். புரிஞ்சதா!!” தொடர்ந்தேன்.
அவள் கண் கலங்கி இருந்தது. இருந்தும் முகத்தில் சிறு புன்னகை அரும்பிக் கொண்டு இருந்தது.
“ம்ம்ம்…. அப்புறம் ஏன் கடிதம் எதுவுமே போடல″ என்றாள்.
சிரித்தேன்.
“எப்படி… எங்க வீட்டுக்கு எழுதுற கடிதத்துல, அப்புறம் அம்மா, உங்க மருமக எப்படி இருக்கானு கேக்க சொல்றியா… இல்ல உங்க வீட்டுக்கு தனியா ஒரு கடிதத்தை போட்டு, என்னடா இதுன்னு உங்க அப்பாவ யோசிக்க வைக்க சொல்றியா… நான் என்னவோ, சரி நம்ம ஆளு தான.. ஒரு வருஷம் தான … புரிஞ்சிப்பானு நெனச்சேன்… எனக்கு மட்டும் உன் கூட பேசணும்னு ஆசை இல்லைன்னு நெனச்சியா?” என்று முடித்தேன்.
மீண்டும் மௌனம்.
அவளே ஆரம்பித்தாள்.
“மன்னிச்சிகோங்க… அவளுக சொன்னதை நான் கேட்டு குழம்பிட்டேன்” என்றாள்.
“அடி பைத்தியம்! உன்ன மன்னிக்கிறதுக்காக நான் இங்க வரல.. உன்ன காதலிக்கிறதுக்காகவே வந்து இருக்கேன்” என்று கூறி அவளின் கைப் பிடித்தேன்.
என் தோளில் மெதுவாய் சாய்ந்தாள்.
“நான் உங்களை காதலிக்கின்றேன். இறுதி வரைக்கும் என்னை இப்படியே காதலிக்க வேண்டும்” என்றாள் வெட்கத்துடன்.
“வேற வேல என்ன இருக்கு அத விட முக்கியமா” என்றேன் புன்னகைத்தவாறு.
“நல்லவேளை… நான் கணக்குல கொஞ்சம் சுமாரா இருந்தேன். இல்லைனா நீ எப்படி எனக்கு சொல்லிக்குடுக்க வந்து இருப்ப… நான் எப்படி உன்கிட்ட பேசி இருப்பேன். சில நேரம் இந்த நாள் வரைக்கும் கூட உன்கிட்ட பேசாம இருந்திருப்பேன்… நன்றி எங்க அம்மாவுக்குத் தான் சொல்லணும்… அவங்க மட்டும் உன்ன எனக்கு சொல்லிக் குடுக்க சொல்லலைனா…” என்று தொடர்ந்தேன்.
தோள் மீது சாய்ந்து இருந்தவள் திடீர் என்று நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.
பின் புன்னகைத்தாள்.
“நீங்க யோசிச்சே பார்க்கலையா” என்றாள்.
எனக்கு புரியவில்லை.
“என்ன யோசிக்கணும்?” என்றேன்.
மீண்டும் புன்னகைத்தாள்.
“எனக்கு கணக்கு நல்லா வரும்னு உங்க அம்மாகிட்ட யார் சொல்லி இருப்பானு நீங்க யோசிச்சிக் கூட பார்க்கலையா… இல்ல நான் உங்களுக்கு சொல்லித் தந்தா நீங்க தேர்ச்சி ஆகலாம்னும் யார் சொல்லி இருப்பாங்கனும் யோசிச்சிப் பாக்கல சரியா” என்றாள்.
சிறிது யோசித்தேன். மெதுவாய் பொறி தட்டியது.
“நீயா!!”
சிரித்தாள். ஆம் என்பது போல் தலை ஆட்டினாள்.
“அடி பாவி… இத ஏன் மொதலையே சொல்லல″ என்றேன்.
“ம்ம்ம் … எனக்கு உங்கள பிடிக்கும். ஆனா உங்களுக்கு என்னைப் பிடிக்குமானுத் தெரியல… அதான் சொல்லல″ என்றாள்.
“சரி… அப்புறம் ஏன் நான் உன்ன பிடிச்சி இருக்குனு சொன்னதுக்கு அப்புறமும் நீ என்ன பிடிச்சி இருக்குனு சொல்லல″ தொடர்ந்தேன்.
சிரித்தாள்… ” சும்மா தான்!!!” என்றுக் கூறி என் நெஞ்சத்தில் சாய்ந்து கொண்டாள்.
“சும்மாவா சொன்னார்கள் பெண்களை புரிந்து கொள்ள முடியாது என்று” என்று எண்ணிக் கொண்டே தொடங்கினேன் ” சரி!! நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா” என்றேன்.
“ம்ம்ம்!!!” என்றாள்.
“நிமிடத்திற்கு நிமிடம் நீ அழகாகிக் கொண்டே போகின்றாயே … அது எப்படி” என்றேன்.
நாணத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். கூடுதலாய் ஒரு நிமிடம் கூட ஆகவில்லை ஆனால் அவள் அழகைக் கூட்டி இருந்தாள். “ஒ! என் கேள்வி தவறோ… வினாடிக்கு ஒரு முறை அல்லவா இவள் அழகை கூட்டிக் கொண்டே போகிறாள்” என்று எண்ணிக் கொண்டு இருக்கும் போதே
“அது ரகசியம்… சொல்ல முடியாது… சரி நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்” என்றாள்.
“என்ன கேள்வி” என்றேன்.
“உண்மையிலேயே வெளிநாட்டிற்கு போய் என்ன கற்றுக்கொண்டீர்கள்?” என்றாள்.
புன்னகைத்தேன்.
“உன்னை எவ்வளவு காதலிக்கின்றேன் என்பதை கற்றுக் கொண்டேன்” என்றேன்.
மீண்டும் வெட்கம். பின் மீண்டும் பதில்.
“ஐயோ… இதுக்கு வெளிநாட்டுக்கு போயி தான் கத்துக்கணுமா … நான் இங்கயே தான கத்துகிட்டேன், உங்கள எவ்வளவு காதலிக்கிறேன்னு” என்றாள்.
“சரி தான். ஆண்கள் எளிதானவர்கள் அவர்களை பற்றி இங்கேயே அறிந்து கொள்ளலாம். ஆனால் நீயோ புத்திசாலி உன்னைப் பற்றி அங்கே போயி தான கத்துக்க முடியும்” என்றேன்.
“நான் புத்திசாலி எல்லாம் இல்லை…” என்றாள்.
“ஆம் … நீ புத்திசாலியான முட்டாள்” என்றேன்.
“அப்போ நீங்க?” என்றாள் குறும்பாய்.
“நானும் அதே தான். காதலில் அனைவரும் புத்திசாலியான முட்டாள்கள் தான்” என்றேன்.
மீண்டும் ஒரு புன்னகையோடு என் நெஞ்சினில் சாய்ந்தாள். அவளை பாதுகாப்பாய் அணைக்க கையில் இருந்த கல் தடையாய் இருந்ததால் கல்லை தண்ணீரில் எறிந்து விட்டு அவளை அணைத்தேன்.
அவளுக்கு என் இதயம் சொல்லிக் கொண்டு இருக்கும் சேதிக்கு தடங்கலாய் சத்தம போடக் கூடாது என்று சத்தம இடாது நீரினுள் சென்றது அநதக் கல்.
அவள் என் இதயம் அவள் பேர் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தாள்.
நானோ என் உலகத்துக்குள் மீண்டும் வந்ததை மகிழ்ச்சியுடன் எண்ணிக் கொண்டு இருந்தேன்.
தூரத்தில் கதிரவனோ மறைந்து கொண்டு இருந்தான்.


முற்றும்.

Saturday, March 10, 2012

நல்ல மனிதனாக வாழ வழிகள்

நல்ல மனிதனாக வாழ வழிகள்

மிகவும் மதிப்புக்குரியவர்கள் ................தாய்,தந்தை
மிகமிக நல்ல நாள் .....................................இன்று
மிகப்பெரிய வெகுமதி ..............................மன்னிப்பு
மிகவும் வேண்டியது ................................பணிவு
மிகவும் வேண்டாதது ..............................வெறுப்பு
மிக பெரிய தேவை ...................................நம்பிக்கை
மிகக்கொடிய நோய் ................................பேராசை
மிகவும் சுலபமானது ..............................குற்றம் காணல்
தரமற்ற குணம் .........................................பொறாமை
நம்பக்கூடாதது .........................................வதந்தி
ஆபத்தை ஏற்படுத்துவது .....................அதிக பேச்சு
செய்யக்கூடாதது ...................................நம்பிக்கை துரோகம்
செய்யக்கூடியது ....................................உதவி
விளக்க வேண்டியது ............................சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி.......................................உழைப்பு
நழுவவிடக்கூடாதது ...........................வாய்ப்பு
பிரியக்கூடாதது .....................................நட்பு
மறக்கக்கூடாதது ..................................நன்றி
ஓவ்வொரு நிமிடமும் இருக்க வேண்டியது ..இறை பயம்

Wednesday, March 07, 2012

ஒரு காதல் கதை-2


ஊரை நெருங்குவதற்குள் மழை மீண்டும் தூற ஆரம்பித்தது. மழையில் நனையாது இருக்க வழியில் இருந்த ஆலமரத்திற்கு அடியில் ஒதுங்கினேன்.
அது வரை ஒன்றாக வந்த சாலை இரண்டாக பிரியும் முக்கியமான இடத்தில் நின்று கொண்டு இருந்தது அந்த மரம். பிரிந்த வழிகளுள் ஒரு வழி அவளின் வீட்டை நோக்கியும், மற்றொன்று என் வீட்டை நோக்கியும் சென்று கொண்டு இருந்தன.
சிறு வயதில் மரத்தில் செதுக்கி விளையாடிய பெயர்களை வளர்ந்த பின் பார்க்கும் போது அந்த சிறு வயது ஞாபகங்கள் எல்லாம் சற்று நெஞ்சத்தில் எட்டிப் பார்த்து விட்டு போகும் அல்லவா… அது போல தான் என்னுள் அப்பொழுது சில பழைய ஞாபகங்கள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன.
நானும் செதுக்கி இருந்தேன் அந்த ஆலமரத்தில்… பெயர்களை அல்ல… சில நிமிடங்களை!!! அவளிடம் நான் என் காதலை முதலில் சொன்ன நிமிடங்களை!!!
எப்படி கடந்தன என்று தெரியாது ஆனால் அவள் எனக்கு அறிமுகமாகி ஐந்து மாதங்கள் கடந்து இருந்தன. தங்கைக்கு தோழியாய் , அம்மாவிடம் சமத்து பெண்ணாய் , அப்பாவிற்கு விவரமான பெண்ணாய் என என் வீட்டில் உள்ள அனைவரிடமும் படிப்படியாய் நெருங்கி இருந்தாள், என்னைத் தவிர. வீட்டில் உள்ள அனைவரிடமும் வார்த்தைகளால் பேசிச் செல்கின்றவள் என்னிடம் மட்டும் இன்னும் புன்னகையால் பேசிக் கொண்டு இருந்தாள். நானோ மௌனத்தால்.
என் கல்லூரிக்கு சற்று முன்னால் இருக்கும் ஒரு மகளிர் கல்லூரியில் தான் அவள் அவளது பட்டப்படிப்பிற்கு சேர்ந்து இருந்தாள். கல்லூரி வழியாக எங்கள் ஊருக்கு செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அரை மணி நேரத்திற்கு ஒரு வண்டி என்ற விகிதம் தான் இருக்கும். எனவே கல்லூரி முடிந்து நானும் அவளும் அநேகமாக ஒரே பேருந்தில் தான் செல்வோம். வீட்டில் தான் பேச முடியவில்லை சரி எப்படியாவது பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீடு செல்லும் முன் அவளிடம் பேசி விடலாம் என்றால் என்னுடைய என்ணத்திற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருந்தார்கள் அவளின் தோழிகள்.
நாம் காதலிக்கும் பெண்களிடம் இந்த ஒரு பிரச்சனை தான். தனியாக வெளியே தென்படவே மாட்டார்கள். சுற்றியும் எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
சில நண்பர்களின் கூற்றுப் படி “மச்சான்! அவகிட்ட காதல சொல்றது கூட பிரச்சனை இல்லடா… ஆனா அவளை தனியாக பேசணும்னு கூப்பிடும் போது சுத்தி இருக்கிறவங்க எல்லாம் சிரிக்கிறாங்க டா. அங்க தான்டா பிரச்சனையே. சிரிக்கிறாங்க ஆனா எதுக்கு சிரிக்கிறாங்கனு தெரியலடா”
காதலைச் சொல்வதை விட, அவளின் கூட்டத்தில் இருந்து தனியாக அவளை பேச அழைப்பது தான் சிரமமான காரியம் என்பது மட்டும் நன்றாக புரிந்து இருந்தது. எனவே அவள் எப்போது தனியாக இருப்பாள் என்று எதிர் பார்த்தே காலத்தை நகர்த்திக் கொண்டு இருந்தேன்.
என் நேரமும் ஒரு நாள் வந்தது. எப்பொழுதும் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் தோழிகளுடன் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்து விடுபவள் அன்று தோழிகளை முன்னே செல்லச் சொல்லி விட்டு தனியே ஊருக்குள் செல்லும் வழியின் அருகே நின்று கொண்டு இருந்தாள். ஒன்றும் புரியாமல் நானும் பேருந்தில் இருந்து இறங்கி ஊரை நோக்கி செல்ல ஆரம்பித்தேன். “பேசுடா முட்டாள்” என்று என்னுடைய நெஞ்சம் திட்டிக் கொண்டு இருந்த போதும் ஏனோ என்னுடைய கால்கள் அவளின் அருகே செல்லாது விலகிச் சென்று கொண்டு இருந்தன.
“ஒரு நிமிசம்…”
அழைத்து இருந்தாள். நெஞ்சம் துடிப்பதை ஒரு கணம் நிறுத்தியது. என்னைத் தான் அழைத்து இருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொள்ள சுற்றியும் பார்த்தேன். என்னை தவிர வேறு யாருமில்லை. என்னைத் தான் அழைத்து இருந்தாள்.
திரும்பினேன்.
“என்னையா கூப்பிட்டீங்க” என்றேன்.
“ஆமாம்… உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும் …. பேசலாமா” என்றாள் சற்று தயக்கத்துடன்.
இதயம் பற்றி எரிந்துக் கொண்டு இருந்தது அதைப் பொருட்படுத்தாது
“சொல்லுங்க… என்ன விஷயம்!” என்றேன்
“தப்பா எடுத்துக்காதீங்க… உங்களுக்கு கணக்குப் பாடம் கொஞ்சம் நல்லா வராதாமே?” என்றாள்.
இதயம் மீண்டும் ஒரு முறை துடிப்பதை நிறுத்தியது. இம்முறை அதிர்ச்சியால். நிச்சயம் இந்த கேள்வியை நான் எதிர் பார்த்து இருக்கவில்லை.
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லையே… யார் சொன்னாங்க?” என்றேன்.
“உங்க அம்மா தான் சொன்னாங்க….”
இது வரையிலும் படிப்பை பொருத்தவரை என் மானத்தை அப்பா தான் வாங்குவார். இப்போ அம்மாவும் களம் இறங்கி விட்டார்களோ என்று எண்ணிக் கொண்டு இருக்கும் போதே தொடர்ந்தாள்
“இல்லை … எனக்கு கணக்கு கொஞ்சம் நல்லா வரும்… இது உங்களுக்கு கடைசி வருசமாம்… இந்த ஒரு பாடத்துல தான் நீங்க ரெண்டு வருசமா தேர்ச்சி ஆகாம இருக்கீங்களாம்… அதுனால என்னை உங்களுக்கு கொஞ்சம் சொல்லித் தர முடியுமானு உங்க அம்மா கேட்டுக்கிட்டாங்க… நானும் சரினு சொல்லிட்டேன்… ஆனா உங்களுக்கு பிரச்சனை இல்லைனா மட்டும் தான்… வேண்டாம்ணு நினைச்சீங்கனா வேண்டாம்” என்று கூறி முடித்தாள்.
அவசரப்பட்டு அம்மாவை சந்தேகப்பட்டு விட்டாயேடா மடையா என்று உள்ளுக்குள் என்னைத் திட்டி விட்டு “சரி சொல்லு … சரி சொல்லு” என்று உள்ளுக்குள் கூச்சல் இட்டுக் கொண்டு இருந்த இதயத்தை கட்டுப்படுத்திக் கொண்டு வெளியில் இயல்பாய்
“ஓ! அப்படியா… எனக்கு கணக்கு வராதுன்னு எல்லாம் ஒண்ணும் இல்லை… நல்லாத் தான் பண்ணுவேன். ஆனா எனக்கு எடுத்த வாத்தியார் சரி இல்லை.. அதான் இப்படி… கொஞ்ச கணக்குல மட்டும் சந்தேகங்கள் இருக்கு.. மற்றத எல்லாம் நான் கிட்டத்தட்டப் படிச்சிட்டேன்..” என்றேன்.
“ஓ!! அப்படினா நீங்களே படிச்சிடுவீங்கனு உங்க அம்மாக்கிட்ட சொல்லிடட்டுமா?” என்றாள்.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. நம்ம முட்டாள்னு நெனச்சிடக் கூடாதுணு கொஞ்சம் படிச்சி இருக்கேன்னு சொன்னா இவ நம்மள அறிவாளினுல நெனச்சிட்டா என்று உள்ளுக்குள் பதறியவாறு
“இல்ல இல்ல… நான் அப்படி சொல்ல வரல… கொஞ்சம் சந்தேகம் இருக்குனு சொன்னேன்ல… உங்களுக்கு வேற வேலை இல்லைனா… கொஞ்சம் சொல்லித் தந்தீங்கன்னா நல்லா இருக்கும்” என்றேன்.
சிரித்தாள்.
“சரி அப்படி என்றாள் நாம் நாளையில் இருந்து படிப்பதை தொடங்குவோம். சாயங்காலம் 6:30 மணி உங்களுக்கு சரியா இருக்குமா” என்றாள்.
“எனக்கு பிரச்சனை இல்லை. எப்ப வைத்தாலும் எனக்கு சரி தான்” என்றேன்.
“அப்படினா சரி. நாளைக்கு சந்திப்போம். கவலைப்படாதீங்க.. இந்த தடவ நீங்க அந்த பாடத்துல தேர்ச்சி ஆயிடுவீங்க… அதுக்கு நான் பொறுப்பு” என்று புன்னகைத்தவாறே கிளம்ப ஆரம்பித்தாள்.
நானும் அவள் பின் அமைதியாய் நடக்க ஆரம்பித்தேன்.
ஏனோ இதயம் மட்டும் துள்ளிக் குதித்துக் கொண்டே அவளின் முன்னால் ஓடிக் கொண்டு இருந்தது.
அடுத்த நாளில் இருந்து வகுப்புகள் ஆரம்பித்தன. அவளோ கண்ணும் கருத்துமாய் எனக்கு கற்பித்துக் கொண்டு இருந்தாள். நானோ “என்ன… அவ சொல்லிக் குடுத்து நீ படிக்கப் போறீயா?… அப்படினா இந்த வருசமும் கணக்கு போச்சா சக்தி” என்ற என்னுடைய தங்கையின் வாக்கை உண்மையாக்குவதைப் போல் கணக்கை அல்லாது அவளைக் கற்றுக் கொண்டு இருந்தேன். அவள் வகுப்பு எடுக்கும் நேரங்களில் அவளிடம் பேசியதை தவிர வேறு எதையும் நான் கற்றுக் கொள்ளவில்லை.இருந்தும் அந்த தடவை எழுதிய தேர்வு முடிவுகள் வந்த பொழுது நான் கணக்கில் தேர்ச்சி பெற்று இருந்தேன். தங்கைக்கோ ஆச்சரியம். அம்மாவிற்கோ சந்தோசம். வீட்டில் அவளை தலையில் தூக்கி வைத்து ஆடாத ஒரு குறை தான்.�
அவளுக்கோ பெருமிதம்.
என்னை கண்டுக்கொள்ளத் தான் யாருமில்லை. அது சரி, யாருக்குத் தெரியும், அவள் வகுப்பு எடுத்த நேரங்களில் பாடத்தை கவனிக்காது விட்டுவிட்டு, ஐயோ நாம் தேர்ச்சி ஆகவில்லை என்றால் ஒருவேளை நாம் ஒழுங்காக சொல்லிக் குடுக்கவில்லையோ என்று அவள் மனம் வருந்துவாளே என்றெண்ணி தேர்விற்கு முன்னால் இரு தினங்கள் தூங்காமல் கண் விழித்துப் படித்தது.
தேர்வு முடிவுகள் வெளிவந்த அடுத்த நாள். வழக்கம் போல் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தேன். அவளும் அவள் தோழிகளோடு முன்னே சென்று கொண்டு இருந்தாள். திடீரென்று அவள் அவளது தோழிகளிடம் எதையோ சொல்லி விட்டு என்னை நோக்கி வர ஆரம்பித்தாள். என்ன என்று நான் யோசிக்க ஆரம்பிக்கும் முன்னால் என் அருகே வந்து இருந்தாள்.
“நன்றி…!” என்றாள்.
குழப்பம். நியாயப்படி நான் தான் அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால் அவள் சொல்லி இருந்தாள்.
“எதுக்கு நன்றி நீங்க சொல்றீங்க…. நான் தான சொல்லணும்?..” என்றேன்
“இல்ல… நீங்க நான் சொல்லிக் கொடுக்கும் போது என்ன படீச்சீங்கனு எனக்குத் தெரியும்… இருந்தும் நீங்க ரொம்ப கடினமா முயற்சிப் பண்ணி தேர்வுல தேர்ச்சியாகிட்டீங்க… உங்களால எனக்கு நல்ல பெயர்… அதான் நன்றி சொல்லலாம்னு பார்த்தேன்” என்றாள்.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. “என்ன படீச்சீங்கனு எனக்குத் தெரியுமா” என்னை கவனித்துக் கொண்டா இருந்தாள் அவள்…
“ஐயோ அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க. நீங்க நல்லா சொல்லித் தந்தீங்க… அதான் காரணம்” என்றேன்.
புன்னகைத்தாள்.
“உண்மையிலையேங்க… நீங்க நல்லாத் தான் சொல்லித் தந்தீங்க” என்றேன்
“தெரியும்!! இருந்தும் நன்றி… சரி நான் கிளம்புறேன். எனக்கு நேரமாச்சி” என்று கூறி புன்னகைத்துவிட்டு அவளின் தோழிகளை நோக்கி நகர ஆரம்பித்தாள்.
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் அது வரையில் என்னிடம் அதிகம் பேசாத அவள் அன்றில் இருந்து என்னிடம் இயல்பாய் பேசுவதற்கு ஆரம்பித்து இருந்தாள்.
மெதுவாய் நகர்ந்த காலங்களில் எங்களுக்குள் இருந்த இடைவெளி குறையத் தொடங்கியது. அவளின் நட்பு வட்டாரத்தில் நானும் இணைந்து இருந்தேன். பல தோழிகள் மத்தியில் ஒரே தோழனாய் நான். சிறிது சிறிதாய் அந்த வட்டாரமும் சுருங்கத் தொடங்கியது. அவளின் தோழிகள் நடக்கும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் நானும் அவளும் மெதுவாய் தனிமையில் நடந்து செல்லும் காலங்களும் வந்தன. என்னைப் பற்றி அவளும் அவளைப் பற்றி நானும் நன்கு அறிந்து கொண்ட காலம். சில நேரங்களில் பயணிக்கும் தொலைவு முழுவதும் மௌனமாய் கடந்து இருப்போம். மௌனமாய் காதலைத் தான் பேசி இருப்போம். ஆனால் வார்த்தைகளில் அதை மொழி பெயர்க்க வார்த்தைகள் தான் சிக்கவில்லை… இருவருக்கும்.
எனக்கோ என்னுடைய கல்லூரி படிப்பு முடிவிற்கு வரும் தருணம் நெருங்கிக் கொண்டு இருந்தது. மேற்படிப்பிற்காக விண்ணப்பித்து இருந்த வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் இருந்தும் சாதகமாக செய்தி வந்து இருந்தது. அநேகமாக படிப்பு முடிந்தவுடன் வெளிநாட்டிற்கு செல்வதைப் போல் நேரமும் அமைந்து இருந்தது. அனைத்தும் சரி.
ஆனால் அவளிடம் என்னுடைய காதலை சொல்லாது செல்ல எனக்கு மனமில்லை. கடந்த நான்கு மாதங்களில் என்னுள் ஒரு பகுதியாகவே மாறி விட்ட அவளிடம் என் காதலைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கேற்ப ஒரு தருணமும் வந்தது.
அன்றும் அது ஒரு மழைக்காலம்!!!
இருவரும் வழக்கம் போல் கல்லூரி முடிந்து நடந்து வந்து கொண்டு இருக்கும் போது மழைத் தூற ஆரம்பித்தது. இன்னும் வீட்டிற்கு செல்ல தூரம் இருந்ததால் இருவரும் அங்கு ஒரு அரணாய் நின்று கொண்டு இருந்த ஆலமரத்தின் அடியில் ஒதுங்கினோம்.தனியாய் அவள். என் துணையாய் மழை.
காதலை சொல்ல அருமையான சந்தர்ப்பம் தான். இருந்தும் வார்த்தைகள் பதுங்கின. இலையின் மேல் படர்ந்து இருக்கும் சிறிய நீர்த்துளியானது எப்படி மண் சேர இன்னும் தன்னுள் நீரை சேமித்து கொண்டு இருக்குமோ, அதே போல் நானும் என் காதலைச் சொல்ல என் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டு இருந்த வார்த்தைகளை சேர்த்துக் கொண்டு இருந்தேன். அவளோ என்னுடைய போராட்டங்களை சிறிதும் அறியாதவளாய் மழையை ரசித்துக் கொண்டு இருந்தாள்.
“மலர்…” தைரியத்தை சேமித்துக் கொண்டு அவளை அழைத்தேன்.
“ம்ம்ம்… என்ன” என்றாள் மழையைப் பார்த்துக் கொண்டே
“நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்… ”
“ம்ம்ம்”
“அது… எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சி இருக்கு… ”
திரும்பி என்னை ஒரு கணம் பார்த்தாள். பின் மீண்டும் திரும்பிக் கொண்டாள்.
“உனக்கும் என்னைப் பிடிச்சி இருக்கா… பிடிக்கலைனா இப்பவே பிடிக்கலைனு சொல்லிடாத… உனக்கு எப்போ பிடிக்குதோ அப்ப வந்து பிடிச்சி இருக்குனு சொல்லு… அது போதும்… என்ன சொல்ற” என்று முடித்தேன் ஒரு வழியாய்.
சிரித்தாள்.
“நான் கொஞ்சம் யோசிக்கணும்… யோசிச்சிட்டு சொல்றேன்” என்றாள் சாதாரணமாய்.
“நான் கொஞ்ச நாள்ல வெளிநாடு போக வேண்டி இருக்கும்… அதுக்குள்ள சொல்லுவியா?” என்றேன்
“தெரியலை… ஆனா சொல்லுவேன்… சரி நான் கிளம்புறேன். மழை நிக்கப் போகுது” என்று கூறி அவளின் வீட்டை நோக்கி கிளம்பினாள்.
“கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” என்பார்கள். நான் என் கடமையை செய்துவிட்டேன். ஆனாலும் பலனை எதிர்பார்த்தே நகர ஆரம்பித்தேன் என் வீட்டை நோக்கி.
அதற்கப்புறம் கழிந்த நாட்கள் எல்லாம் எப்பொழுதும் போலவே கழிந்தன. என்னுடைய கல்லூரி படிப்பு முடிந்து நான் வெளிநாட்டிற்க்கு செல்லும் அந்த நாளும் வந்தது. ஆனால் அவளுடைய பதில் மட்டும் இன்னும் என்னை காக்க வைத்துக் கொண்டு இருந்தது. ஒரு விதமான சோகத்தில் என்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டு இருந்தேன்.
“ஏன்டா உன்ன நாங்களா வெளிநாட்டுக்கு படிக்க போனு சொன்னோம்… நீயா தான ஏதோ உதவித்தொகை கிடச்சி இருக்கு … படிச்சா நல்லதுனு சொன்ன… அப்புறம் கிளம்புற நேரம் இப்படி முகத்தை தூக்கி வச்சி இருந்தா நல்லா வா இருக்கு” என்றவாறு என் பொருட்களை எடுத்து வைக்க உதவிக் கொண்டு இருந்தார் அம்மா.
“பிரியா…!”
வாசலின் அவளின் குரல்.
“யாரு மலரா… பிரியா அவங்க அப்பாவோட இவனுக்கு வண்டி பிடிக்கிறததுக்கு போய் இருக்காமா… நீ உள்ள வா” என்று பதில் அளித்தார் அம்மா.
“ஓ அப்படியா அத்தை… சும்மா தான் வந்தேன்… வீட்டுல பலகாரம் பண்ணினோம்.. அதத் தான் குடுத்துட்டு போலாம்னு வந்தேன்…” என்றாள்
நல்ல நேரத்தில தான் வந்து இருக்க… இவன் இன்னிக்கு ஊருக்கு கிளம்புறான் … சாப்பிடறதுக்கு அதிகமா எதையுமே கொடுத்து விடலையேனு நெனசிக்கிட்டு இருந்தேன்… ஆமாம்… வீட்ல எதாவது வீஷேசமா?”
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல அத்தை. சும்மா பண்ணனும்னு தோணிச்சி அதான் பண்ணேன்” என்றாள் ஒரு ஒரப்பார்வையை என் மீது படர விட்டவாரே.
“சரி அத்தை… அப்படினா நான் கிளம்புறேன். நீங்க வேலையா இருப்பீங்க.. நான் பிறகு வர்றேன்” என்றவாறு திரும்பிக் கிளம்ப ஆரம்பித்தாள்.
“கொஞ்சம் நில்லுமா … இது என்ன தலைக்கு பூ வைக்காம வந்து இருக்க போல இருக்கு… ஒரே நிமிசம் இரு … இதோ வந்துடறேன்” என்று கூறி அவளை நிறுத்தி விட்டு வீட்டினுள் சென்றார்.
இது வரை இந்த தருணத்திற்காக காத்து இருந்தவள் போல் என்னைப் பார்த்து புன்னகைத்தாள். இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஆனால் காதலிக்கின்றாளா இல்லையா என்பதை மட்டும் சொல்ல மாட்டாள் என்று சலித்துக் கொண்டு என்னுடைய பொருட்களை சரி பார்க்க ஆரம்பிப்பது போல் நடிக்க ஆரம்பித்தேன்.
எப்பொழுதும் புன்னகைத்துக் கொண்டு இருக்கும் முகம் சற்று வாடி தான் போய் விட்டது.
சரி போதும் என முடிவு செய்து விட்டு, அவளுக்காக வெளியில் காத்து இருப்பதாக சைகை காட்டி விட்டு “அம்மா … நான் என்னுடைய நண்பன் குமார பார்த்துட்டு வந்துடுறேன்.. சீக்கிரம் வந்துருவேன்” என்று கூறி வெளியில் கிளம்பினேன்.
வீட்டுக்கு வெளியில் யாரோ சூடிய பின் அவசரம் அவசரமாக கழட்டி எறிந்து இருந்த மல்லிகை பூக்கள் என் வீட்டு ரோஜா செடியை அலங்கரித்துக் கொண்டு இருந்தன.
ரோஜாவின் மேல் மல்லிகையா… நிச்சயம் அவளாகத்தான் இருக்கும்!
திரும்பி வீட்டினுள் பார்த்தேன். என் அன்னை அவளுக்கு பூவை சூடிக் கொண்டு இருந்தார்கள். அவளோ வெட்கத்துடன் என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு நின்றாள்.
சிறிது புன்னகையுடன் நான் அவளிடம் காதலை சொன்ன அந்த ஆல மரத்தின் அடியில் அவளுக்காக காத்து இருக்க சென்றேன். என்னை அதிக நேரம் காக்க வைக்கவில்லை. 5 நிமிடத்தில் வந்து சேர்ந்து இருந்தாள். ஒரு வேலை இவ்வளவு நாட்கள் காக்க வைத்ததே போதும் என எண்ணி விட்டாள் போல…
“நான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறேன்…” தொடங்கினேன்.
“தெரியும்…”
“இன்னும் ஒரு வருசத்துக்கு வர மாட்டேன்..”
“ம்ம்ம்..”
“இப்பயாவது உன்னுடைய முடிவ நான் தெரிஞ்சிக்கலாமா…?” என்றேன்.
சிறிது நேரம் அவள் பதில் எதுவும் பேசவில்லை… அப்புறம் ஆரம்பித்தாள்
“வெளிநாடு ரொம்ப அழகா இருக்கும்னு கேள்வி பட்டு இருக்கேன்… நம்ம ஊரு மாதிரி எல்லாம் அங்க இருக்காதாம்…”
“நான் என்ன கேட்டேன்… நீ என்ன…” என்று நான் ஆரம்பித்து முடிப்பதற்குள் தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.
“அத எல்லாம் பார்த்து அங்கேயே ரொம்ப நாள் இருந்துராதீங்க… இங்க நிறைய பேரு காத்துக்கிட்டு இருக்கோம்…” என்றாள்.
“இன்னும் நான்… ” என்று நான் ஆரம்பிப்பதற்குள்… மெதுவாய் என் கிட்டே வந்து
“காத்துக்கிட்டு இருப்பேன் … ஒரு வருசம் தான் சரியா… வந்துடனும்” என்று கூறி விட்டு அவளின் வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினாள்.
புன்னகைத்தேன்..
“கண்டிப்பா… வந்துடுவேன்…” என்று மனதுக்குள் கூறிவிட்டு நானும் என் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினேன். ” ஏன்டா சிரிச்சிகிட்டே இருக்க” என்று வீட்டில் எல்லோரும் கேட்டும் கூட ஏனோ இதயம் சிரிப்பதை நிறுத்த மாட்டேன் என்றது.
அன்று தான் நான் அவளை கடைசியாக கண்டது. இதோ அதற்கு அப்புறம் இன்று தான் சொந்த ஊருக்கே திரும்ப வருகின்றேன். அன்று அவள் புன்னகையோடு ஓடி மறைந்தது என் கண்ணுக்குள் இன்றும் அப்படியே நிற்கின்றது. நாளுக்கு நாள் ஏதோ ஒரு மாற்றத்தால் மாறிக் கொண்டு இருக்கும் நகரத்திற்கு மாறாய் மாற்றம் ஏதும் இன்றி நான் செல்லும் போது எப்படி இருந்ததோ அப்படியே தான் இன்றும் இருந்தது என் ஊர். அந்த மரம். நான் கொடுத்த வாக்கு. எல்லாம் அப்படியே தான் இருந்தன.
ஒரு வருடம் என்று நான் கொடுத்த வாக்கின் படி நான் வந்து விட்டேன்.
காத்துஇருப்பேன் என்று சொன்ன என்னவள் எங்கே?…
வழி எங்கும் தேடியபடியே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்

Tuesday, March 06, 2012

யாதுமாகி நிற்பவள் பெண்!




யாதுமாகி நிற்பவள் பெண்!

பெண் என்பவள் சக்தியின் அம்சம். உலகின் இயக்திற்கு தேவையான சக்தியை அளிக்கும் சர்வ வல்லமை படைத்தவளாக பெண் இருக்கின்றாள். 101 வது மகளிர் தினம் கொண்டாட உள்ள இந்த வேளை மங்கையரின் சக்தியை தெரிந்து கொள்வோம். 


உலகில் இனப்பெருக்கம் என்பது அத்தியவசியமானது. அது இல்லையேல் உலகமே ஸ்தம்பித்து விடும். இதற்கு பெரும் பங்கு வகிப்பது பெண்மணிகள்தான். கருவை உருவாக்குவதோடு ஆண்களின் கடமை முடிந்து விடுகிறது. பத்துமாதம் கருவை சுமந்து குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்வது வரை பெண்கள் சக்தியின் அம்சமாக இருந்து வலிகளை தாங்கிக் கொள்கின்றனர். 

ஆண் குழந்தையை விட பெண் குழந்தைகள் தான் வளர்ச்சியில் முதன்மையாக உள்ளனர். குப்புறப்படுப்பது,சிரிப்பது ,தவழ்வது,நடப்பது,பேசுவது எல்லாம் முந்திக்கொண்டு செய்கின்றனர் என்பது விஞ்ஞான உண்மை.

சாதனை பெண்மணிகள்

அறிவை வளர்க்கும் புனித இடமான கல்விக்கூடங்களில் பெரும்பான்மையினர் பெண்கள்தான். ஏனெனில் அவர்களுக்குத்தான் பொறுமை அதிகம் என்று கல்வி நிர்வாகத்தினரால் தேர்ந்தெடுத்து வெற்றியும் பெறுகின்றனர். 

செவிலியர்கள்,மருத்துவர்கள்,விமானப்பணிப்பெண்கள்..இப்படி அநேகர் சிரித்த முகத்துடன் வலம் வருவதில் பெண்களே அதிகம்.

மடக்கும் பெண்மணிகள் 

ரகசியமாக குரலை தாழ்த்தி கிசுகிசுப்பது முதல், மற்றவர்களின் கவனத்தைக் கவர உச்சஸ்தாயியில் பேசுவதிலாகட்டும் இவர்களுக்கு நிகரில்லை. ஒரே கேள்வியை பலவித கோணத்தில் அலுக்காமல் கேட்டு உண்மையை அறியும் வல்லமை இவர்களுக்கே உண்டு. 

கிரகிக்கும் தன்மை அதிகம் 

பெண்கள் அதீத பார்வைத்திறன் கொண்டவர்கள். எந்த ஒரு கூட்டமான இடத்துக்கு சென்றாலும் தெரிந்தவர் தலை இவர்களது கண்களுக்கு சட்டென சிக்கிவிடும். அதேபோல் பெண்கள் கூர்மையான கவனிக்கும் தன்மை கொண்டவர்கள். முணுமுணுக்கும் ஆண்களிடம் இருந்து வார்த்தைகளை கவனித்து கரெக்டாக பாயிண்ட் அறிந்து கொள்வார்கள்.

மோப்ப சக்தி 
மோப்ப உணர்விலும் இவர்களை அடித்துக்கொள்ள வாய்ப்பில்லை.ஒரு உணவகத்திற்கு சென்றால் உணவுப்பொருளை மோப்பம் செய்தே இன்னென்ன சமையல் பொருட்கள் சேர்த்து செய்த உணவுப்பண்டம் இது கண்டு பிடித்து சொல்வது முதல் எதிர் பிளாட்டில் இருந்து வரும் வாசனை,கீழ் பிளாட்டில் இருந்து வரும் சமையல் வாசனையை நுகர்ந்து எளிதில் இன்னவகை உணவு என்று கண்டுபிடிக்கும் தகுதி இவர்களுக்கே உரித்தானது.

கற்பூர புத்தி
எதையும் சட்டுன்னு புரிந்து கொள்ளும் கற்பூரப்புத்தி பெண்களுக்கு மட்டுமே உண்டு என்பது கண்கூடான உண்மை. வீட்டில் அலமாரிகளில் மலை போன்று குவித்து பொருட்கள் இருந்தாலும் கண்பார்த்ததும் கையால் எடுக்கும் திறமை பெண்களைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெண்களால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும் என்பது திண்ணமான உண்மை. போனை எடுத்தால் அது அனலாக கொதிக்கும் வரை பேசித்தீர்ப்பதில் சூராதிசூரர்கள்.

தோழமை உணர்வு

பெண்கள் யாருடனும் சட்டென்று பழகிவிடுவார்கள். அதிக தோழமை உணர்வு பெண்களுக்கு மட்டுமே உரித்தானது. 
பிறந்த வீட்டு உறவினர்களையும், புகுந்த வீட்டு உறவினர்களையும் பேலன்ஸ் செய்து ,சமாளித்து வாழ்வியலை அழகாக்குவதும் இவர்களே.
பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டிருந்தாலும் கமுக்கமாக சேமிப்பில் செம கில்லாடிகள் இவர்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

நினைவாற்றல் அதிகம்
கடுகளவேணும் ஒரு சிறு பொருளைப்பார்த்தாலும் அது என்ன வென்று அடையாளம் கண்டு பிடிப்பதில் இருந்து மண்டையில் அது பற்றி ஏற்றிக்கொள்வது,மனசில் அது பற்றி படிக்கறது,பிரிதொரு சமயத்தில் அது எங்கே எப்படி,எவ்வளவுக்கு கிடைக்கும் என்பதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் ஞானச்செல்விகள் இவர்கள். ஒருத்தர் தெரிந்த மொழியில் பேசி புரியா விட்டாலும் புரிந்த மாதிரி காட்டிக்கொள்வது முதல், புரியாதவர்களுக்கு புரியும் வரை அலுப்பு சலிப்பில்லாமல் திரும்பத்திரும்ப சொல்லி புரிய வைப்பதில் புண்ணியர்களும் இவர்களே.

இப்படி இயற்கையும் விஞ்ஞானமும்,சுற்றுப்புறமும்  பெண்களுக்கு தன்னிகரில்லாத ஆற்றலை தந்திருப்பதால்தான் பெண்களால் அனைத்துமாகி நிற்க முடிகிறது. 

வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை தாண்டி சாதிக்க முடிகிறது.

Monday, March 05, 2012

ஒரு காதல் கதை-1


மழைத் தூறி விட்டு நின்றிருந்தது.
ஒரு வருடம் வெளிநாட்டில் படித்து முடித்து வரும் என்னை காண ஆவலுடன் இரு கண்கள் பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கிடக்கும் என்று எண்ணியே வந்தவனுக்கு காலியாய் வரவேற்பு அளித்தது எங்கள் ஊர் பயணியர் நிழற்க்கூடம்.
அவள் வரவில்லை.
மழை வந்து இருந்தது.
ஏமாற்றம் தான். நிச்சயம் வருவாள் என எதிர் பார்த்து இருந்தேன்.
ஒரு வேளைச் செய்தி போய் சேர்ந்து இருக்காதோ?… இல்லையே அன்று ஒரு நாள் வெளிநாட்டில் எனக்கு உடம்பு சரியில்லை என்ற செய்தியை அறிந்து கொண்டு என் அன்னையின் கடிதத்தோடு வேறு யாரும் அறியாமல் சில வரிகளையும் ஒரு முத்தத்தையும் சேர்த்து அனுப்பியவளுக்கு நான் ஊருக்கு வருவதா தெரியாது போய் இருக்கும் என்று குழம்பியவாறு எனது பெட்டியை எடுத்துக்கொண்டு வயல்களின் வழியாக எனது ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
ஒரு ஆண்டுக்கு மேலாக நகரத்தின் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து விட்டு, திடீரென்று சிறு வயது முதல் என்னை கண்டு வளர்த்த சூழலின் நடுவே நிற்பதை உணர்ந்த போது புரியாது ஒரு புன்னகை அதுவாக அரும்பியது.
இங்கு நான் அந்நியன் அல்ல. இது என் ஊர்.
“யாரு … நம்ம கனி மகனா?” என்றார் வழியில் ஒரு பாட்டி.
“ஆமாம் பாட்டி. நல்லா இருக்கீங்களா?” என்றேன் ஒரு புன்னகையுடன். டில்லிக்கே ராஜா ஆனாலும் எங்க ஊர்ல எல்லாருக்கும் நான் எங்க அம்மாவோட பையன் தான்.
“எனக்கென்னபா நல்லா இருக்கேன். நீ சீமையிலே இருக்கிறதாவுலே சொன்னாங்க … எப்ப வந்த” என்றார் அவர்.
“இன்னிக்கு தான் பாட்டி. இப்ப தான் ஊருக்குள்ள வறேன்” என்றேன்.
“சரி சரி… விரைவா வீட்டுக்கு போயி சேரு… ரொம்ப நாள் கழிச்சி உன்ன பார்க்க போற சந்தோசத்திலே உங்க அம்மா ஊரையே ரெண்டு பண்ணிக்கிட்டு இருக்கா” என்று கூறி அவர் அவர் வழியில் நடந்து செல்ல ஆரம்பித்தார்.
நானும் புன்னகையோடு தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தேன்.
சிறிது தூரத்தில் அய்யனாரின் கோவில் கண்ணுக்கு புலப்பட்டது.
அய்யனார் – எங்க ஊர் காவல் தெய்வம். அந்த கோவில், அதை சுற்றியுள்ள இடங்கள் அவற்றை பார்க்கும் போது என்னை அறியாது ஒரு ஞாபகம் என்னை உரசிக் கொண்டு போனது.நம்ம வாழ்க்கைலே ஏதோ ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை நினைக்கும் போது ஏன்னு தெரியாமலையே ஒரு புன்னகை வரும் தெரியுமா, நம்மள அறியாமலையே யாரைப் பார்த்தாலும் புன்னகைக்கத் தோணும். சினிமா வசனம் மாதிரி சொல்லணும்னா ஒரு பட்டாம்பூச்சி மனசுக்குள்ள பறக்கிற மாதிரி இருக்கும். நானும் அப்படி தான் உணர்ந்தேன்.
ஆம், இரண்டு வருடங்களுக்கு முன் இங்கு தான் நான் அவளை முதன் முதலில் சந்தித்தேன்.
அது ஒரு திருவிழாக் காலம்.
நான் தேவதைகளில் நம்பிக்கைக் கொள்ள ஆரம்பித்து இருக்காத ஒரு காலம்.
எப்பொழுதும் போல் தான் அன்றும் விடிந்திருந்தது.
“திருவிழா அன்னிக்கும் இன்னும் எழுந்திரிக்காம தூங்கிக்கிட்டு இருக்கான் பாரு… இவன… டேய் சக்தி..”
அடுப்பாங்கடையில் இருந்து வந்த அம்மாவின் சத்தம் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்த என்னை எழுப்பி விட்டது.
எழுந்து மணியைப் பார்த்தேன்.
’6:50′ என காட்டியது அறைக் கடிகாரம்.
“காலங்காத்தாலையே ஏன்மா…” என்று சலித்துக் கொண்டே கோவிலுக்கு போக தயாராக கிளம்பினேன்.என்றும் நண்பர்களோடு ஊர் சுற்றித் திரிய சுதந்திரம் இருந்த எனக்கு, திருவிழாக்கள் அன்று மட்டும் ஒரு செல்லத்தடை, குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று விட்டு அப்புறம் எங்கு வேண்டுமானாலும் போய்கொள் என்பதே அது. அதற்கு ஏற்றார்ப் போல் நண்பர்களின் அழைப்பை எல்லாம் தவிர்த்து குடும்பத்தோடு கோவிலுக்கு செல்ல கிளம்பினேன்.
ஊர்த் திருவிழா என்பதால் ஊரெங்கும் அலங்காரங்கள் களை கட்டிக் கொண்டு இருந்தன. என்றும் அமைதியாக இருக்கும் எங்கள் ஊர் தெருக்கள் அன்று வழக்கத்திற்கு மாறாக ஒலிப்பெருக்கிகளின் சத்தத்தால் அதிர்ந்து கொண்டு இருந்தன. மக்களும் தங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாய் ஊரெங்கும் தேனீக்கள் போல சுறுசுறுப்பாய் சுற்றிக் கொண்டு இருந்தனர்.
ஊரே களைக் கட்டி இருக்கின்றது என்றால் கோவிலை பற்றி கேட்கவா வேண்டும். சுற்றியும் சந்தை, பொங்கல் வைப்பவர்கள், மின்விளக்குகள் என்று அந்த இடமே அமர்க்களமாய் இருந்தது.
“என்ன கனி. இந்த வட்டம் நீ பொங்கல் வைக்கலையா?”.பொங்கல் வைக்கும் கூட்டத்தில் இருந்து அம்மாவிற்கு விசாரிப்பு வந்தது.
“இல்ல மாரி. இந்த தடவை வைக்கலை. அடுத்த வருசம் தான் இனி பாக்கணும்” என்று கூறிவிட்டு கோவிலின் உள் அம்மா நுழைந்தார். பின் தொடர்ந்தே நாங்களும் நுழைந்தோம்.
“நல்லா சாமி கும்புடுங்க கண்ணுகளா… எல்லோரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கோங்க” என்றவாறே அம்மா சாமி கும்பிட ஆரம்பித்தார்.
தங்கச்சி குறும்பை ஆரம்பித்தாள்.
“ஆமாம் ஆமாம்… இந்த தடவையாவது என்னை எல்லா தேர்வுலையும் தேர்ச்சி பண்ணி விடு சாமினு வேண்டிக்கோ. அப்படியாவது ரெண்டு வருசமா எழுதிக்கிட்டு இருக்கிற அந்த ஒரு பாடத்துல தேர்ச்சி ஆகிறியானு பார்ப்போம்” என்றாள் நக்கலாய்.
தங்கைகளிடம் இந்த ஒரு பிரச்சனை தான். எப்படி படிக்கிறாளுகனு தெரியாது. ஆனா எப்படியோ நம்மள விட நல்லா படிச்சி வீட்டில நம்ம மதிப்பிற்கு வேட்டு வச்சிடுவாளுக.
“ஹ்ம்ம்ம்… நீ எல்லாம் படிச்சி என்னத்த கிழிக்க போறியோ… அங்க பாரு உன்ன விட மூணு வயசு சின்ன கழுத எப்படி படிக்குதுனு. நீயும் தான் இருக்கியே” னு வீட்டில அப்பாவிடம் அப்பாவியாய் நல்ல பேர் எடுத்துவிட்டு நம்ம சோத்துக்கு வேட்டு வைப்பதில் இவளுகளுக்கு ஒரு தனி பட்டமே தரலாம்.
அவளைத் திரும்பி முறைத்தேன்.
“என்ன விட நல்லா படிக்கிறேனு ஆணவத்துல பேசாத. எங்க சுத்தினாலும் வீட்டுக்கு தான வந்து சேருவ. அங்க வச்சிக்கிறேன் உனக்கு.” என்றேன்.
நக்கலாய் முகத்தை சுழித்து விட்டு பத்திரமாய் அப்பாவின் அருகே போய் நின்று கொண்டாள்.
“பயந்தான்கோளி..” என்று முணுமுணுத்துக்கொண்டே நானும் சாமி கும்பிடலாம் என்று திரும்பினேன்.
அங்கே அவள் நின்று கொண்டு இருந்தாள்.
இதுவரை அவளை என் ஊரில் பார்த்தது இல்லை. நிச்சயம் புதியவள் தான். இருக்கட்டும். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் இவ்வளவு அழகாகவும் யாராவது இருப்பார்களா?.
பார்த்த உடன் வரும் காதலில் அன்று வரை எனக்கு நம்பிக்கை இருந்தது இல்லை. ஏன்! தேவதைகளின் மீதும் தான்.
ஆனால், இவ்வளவு அருகில் ஒருத்தி நின்று கொண்டு இருக்கையில் நம்பாமல் இருக்க முடியவில்லை. எங்கோ ஒரு பட்டாம்பூச்சி சிறகை ஆட்ட எங்கோ ஒரு இடத்தில் பூகம்பம் நேருமாம். இங்கோ, மெதுவாய் அவள் இமைகள் துடித்துக் கொண்டு இருந்தன… என் உலகமோ நொறுங்கிக் கொண்டு இருந்தது.
அவளோ அவளின் இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டு இருந்தாள். நானோ இறைவன் புரிந்து கொள்வான் என்று என் இஷ்ட தேவதையை தரிசித்துக் கொண்டு இருந்தேன். இறைவனோ எங்கள் இருவரையும் கண்டு புன்னகைத்து கொண்டு இருந்தான்.
“சக்தி! சாமி கும்பிட்டது போதும். வா போகலாம்” என்று தொலைவில் எங்கோ தங்கையின் குரல் கேட்க திடுக்கிட்டு சுய நினைவிற்கு வந்தேன். விடுக்கென்று கோவிலில் இருந்த திருநீரை எடுத்து பூசி விட்டு நானும் கிளம்ப ஆரம்பித்தேன். அதே நேரம் அவளின் குடும்பமும் கிளம்புவதற்கு தயார் ஆகி கொண்டு இருந்தனர்.
ஹ்ம்ம்ம்… இனி மேல் இவள பத்தி விவரத்தை எப்படி சேகரிக்கிறதுனு யோசிச்சிக்கிட்டே கோவிலுக்கு வெளியே வரும் போது அவளின் தந்தை எங்களை கூர்ந்து கவனிப்பதை கவனித்தேன்.
இது என்னடா திடீர்னு நம்மள பார்க்கிறார்… என்ன விஷயம்னு நான் யோசிக்கிறதுக்கு முன்னாடியே புன்னகைத்தவாறே எங்களை நோக்கி வர தொடங்கினார்.
“டேய் சண்முகம்…!!!”
என் தந்தையின் பெயரைச் சொல்லி அழைத்து இருந்தார்.
என்னுடைய தந்தை நின்று ஓசை வந்த திசை நோக்கி திரும்பி பார்த்தார்.
சிறிது நேரம் அதே யோசனை. பின் அதே புன்னகை.
“முருகா… நீ எங்கடா இங்க.. பார்த்து எத்தன வருசம் ஆச்சி..உன் கல்யாணத்துல பார்த்தது” என்று கூறியவாறே அவரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
பழைய நண்பர்களாம்.
பிரச்னை இல்லை. என் வேலை கொஞ்சம் எளிதானது. உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டேன்.
“என்னை இந்த மாசம் தான்டா உன் ஊருக்கு மாற்றம் செஞ்சி இருக்கானுங்க.. நானே உன் வீட்டுக்கு வரணும்னு இருந்தேன்” என்று அவளின் தந்தை விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே இரண்டு குடும்பத்தினரும் அவர்களின் அருகிலே வந்து விட்டு இருந்தோம்.
என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பார்த்து புன்னகைத்தவாறு அவள்.
வார்த்தைகளற்று நான். என்ன பேசலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே,
“இது யாரு உங்க பொண்ணா… என்ன பண்றா?” என்றார் என் அன்னை.
முற்றிலும் அன்னியமான சூழலில் உரையாடல்களை ஆரம்பித்து வைப்பதற்கு அன்னைகளை விட சிறந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. சந்தித்த 10 நிமிடங்களில் நெருங்கிய தோழிகளைப் போல உரையாட ஆரம்பித்து இருந்தனர் எங்கள் இருவர் அம்மாக்களும்.
“ஆமா.. இப்ப தான் +2 முடிச்சிட்டு முடிவுக்காக காத்துக்கிட்டு இருக்கா” என்றார் அவளின் அன்னை.
“உன் பேரு என்னமா?” என்றார் என் அன்னை அவளை நோக்கி.
புன்னகைத்தாள்.
“மலர்!” என்றாள்.
கோவிலைச் சுற்றி இருந்த மலர்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் பெருமூச்சி விட்டன.
“சரி உங்க பசங்களை பத்தி ஒண்ணுமே சொல்லலையே” என்றார் அவளின் அன்னை.
“பெரியவன் பேரு சக்தி… ரெண்டாம் ஆண்டு விவசாயம் படிச்சி முடிக்க போறான்.. சின்னவ … பிரியா… இப்ப தான் 10ம் வகுப்பு முடிச்சி இருக்கா… இவளும் முடிவுக்காக தான் காத்துக்கிட்டு இருக்கா…” என்று முடித்தார் என் அன்னை.
“விவசாயமா?…” என்றாள் அவள் ஆச்சரியமாய்.
“ஆமாம் மா… ஏன் ஆச்சரியத்தோடு அப்படி கேட்குற?”
“இல்லை … இப்ப எல்லாம் எல்லாரும் பொறியியல் இல்லை மருத்துவம்னு தான் எடுத்துப் படிக்கிறாங்க… விவசாயம் என்கிறது கொஞ்சம் வித்தியாசமா இருந்திச்சி அதான்” என்றாள்.
“இவங்க அப்பாவும் அத தான் சொன்னாப்பில.. ஆனா இவன் தான் கேட்க மாட்டேன்னு சொல்லிட்டான்… இத்தனைக்கும் மதிப்பெண் எல்லாம் நெறைய தான் வச்சி இருந்தான்… ஆனா எனக்கு வயல்ல வேலை செய்றது தான் பிடிச்சி இருக்குனு சொல்லிட்டான்” என்றார்.
“சரிக்கா…” என்று கூறி மீண்டும் புன்னகையைச் சூடிக் கொண்டாள்.
விவசாயமானு கொஞ்சம் அதிர்ச்சியாக அவள் கேட்ட போது தப்பான முடிவு எடுத்து விட்டோமா என்று என் மனசு பதறியதை அவள் அறிந்து இருக்க வாய்ப்பில்லை தான். ஆமாம் இந்த காலத்தில் நான் படிக்கும் படிப்பிற்கு மதிப்பில்லை தான். ஆனால் என் கனவுகள் வேறு. ஒரு வேளை அவள் கனவுகள் வேறாக இருக்குமோ?… எனக்கு ஏற்றவளாக இவள் இருக்க மாட்டாளோ? என்ற எண்ணங்கள் என்னுள் மிக வேகமாக கிளம்ப ஆரம்பித்தன.
“சரி நீ என்னமா படிக்கலாம்னு இருக்க” தொடங்கினார் என் அன்னை.
“ஹ்ம்… இவளும் பொறியியல் இது எல்லாம் வேண்டாம்ணு சொல்லிட்டா… ஏதோ ஒரு படிப்பு சொன்னாளே… அது என்னடி”
“ஹோம் சைன்ஸ் மா” என்றாள்.
“ஆமாம்… அந்த படிப்பு தான் படிக்க போறாளாம்” என்று முடித்தார் அவளின் அன்னை.
தென்றல் கொஞ்சம் என்னை தீண்டி விட்டு போனது.
பெரியவர்கள் அனைவரும் ஒன்று கூடி பழங்கதைகள் பேசி கொள்ள ஆரம்பித்தனர்.
நானோ வார்த்தைகள் எல்லாம் தொலைத்து விட்டு புதுக்கதைகள் பேசுவதற்காக மொழிகளைத் தேடிக் கொண்டு இருந்தேன்.
அவளோ மௌனமாய் விழிகளில் புதுக்கவிதைகள் புனைந்துக் கொண்டு இருந்தாள்.
“நீ சரி இல்லையே” என் காது அருகே ஒரு குரல் எனக்கு மட்டும் கேட்கும் மாதிரி ஒலித்தது.
திரும்பினேன். என் தங்கை ஒரு புருவத்தை உயர்த்தியவாறு என்னைப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
“என்ன…!!!”
“நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்… அந்த பொண்ணயே பார்த்துக்கிட்டு இருக்கியே… அப்பாகிட்ட சொல்லட்டுமா” என்றாள் புன்னகைத்துக் கொண்டே.
அவர் அவர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, என்னை பார்க்கிறதையே வேலையா வச்சிக்கிட்டு அலையுறா என்று முணுமுணுத்துக்கொண்டே,
“என்ன வேண்டும்” என்றேன்.
“சந்தையில ஏதாவது வாங்கி கொடு” என்றாள்.
சலித்துக்கொண்டே “சரி வா..” என்று சொல்லி கிளம்ப தயாரானேன்.
“அம்மா… நாங்க சந்தைக்கு போய்ட்டு வந்திருறோம்” என்று எங்கள் அம்மாவிடம் சொல்லிவிட்டு சந்தோசத்துடன் கிளம்ப ஆரம்பித்தாள் பிரியா.
“இருடி.. இந்த அக்காவையும் கூட கூட்டிட்டு போ… நம்ம ஊர் சந்தைய இவங்க பார்த்து இருக்க மாட்டாங்க… என்னமா போயிட்டு வறியா?” என்றார் என் அம்மா.
அவள் திரும்பி அவளின் அம்மாவைப் பார்த்தாள். அவர் சம்மதம் தெரிவிக்கவே
“சரிக்கா” என்று கூறி அவளும் சந்தைக்கு வர கிளம்பினாள்.
என் மூளையில் மின்னல் வெட்டியது.
என்ன இன்னிக்கு எல்லாமே நல்லாதவே நடக்குதே என்று சந்தோசப்பட்டுக் கொண்டு இருக்கும் போதே ஒரு சின்னக்கல் பறந்து வந்து தலையில் அடித்தது.
நண்பர்கள்…
சரியா எப்ப எவன் வரக் கூடாதுனு நினைப்போமோ அப்ப சரியா வந்து நிப்பானுங்க. அந்தக் கல்லைப் பொருட்படுத்தாது கிளம்ப ஆரம்பித்த போது சரியாக அடுத்த கல் அம்மாவின் மேல் வந்து விழுந்தது.
“என்னடா சக்தி… உன் கூட்டம் வந்திரிச்சி போல இருக்கு… நீ வேணும்னா கெளம்பு… ஏற்கனவே உன்ன ரொம்ப நேரம் இங்க இருக்க வச்சாச்சி.. நீ கெளம்பு…”
“அப்ப பிரியாவ சந்தைக்கு கூட்டிட்டு போறது?” என்று இழுத்தேன்.
“அது நான் போயிப்பேன் சக்தி… நீ காச மட்டும் குடு” என்றாள் நேரம் அறிந்து என் அருமை தங்கச்சி.
வேறு ஒன்றும் சொல்ல இயலாதவனாய் காசை கொடுத்து விட்டு அவள் புன்னகைத்துக் கொண்டே என் தங்கையுடன் சந்தைக்கு போவதை பார்த்துவிட்டு கடுப்புடன் கல் எறிந்தவனை தேடி கிளம்பினேன்.
டேய்… நான் என்ன பண்ணினேன்னு இப்ப என்ன அடிக்க வர என்று கத்திக்கொண்டே அவன் வயல் வரப்புகளில் எல்லாம் ஓடியதும் அவனை நான் துரத்தியதும் ஏதோ நேற்று நடந்தது போல இன்றும் ஞாபகம் இருக்கின்றது. அதற்குள் 2 வருடங்கள் ஓடிப் போய் விட்டது. வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் இன்னும் அந்த இடங்கள் எல்லாம் அப்படியே இருந்தன.
இடி இடிக்கும் சத்தம் கேட்கவே நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன். மேகம் எல்லாம் மீண்டும் ஒன்று கூடிக் கொண்டு இருந்தன. மழை மீண்டும் வரும் போல் இருந்தது. அது வருவதற்குள் வீடு போய் சேர வேண்டும் என்று விரைவாக நடக்க ஆரம்பித்தேன் ஊரை நோக்கி.    (To be Continued...)

விடியல் எப்பொழுது?


வானத்தை வெறித்துப் பார்த்தவாறு தனது வீட்டு வாசலில் அமர்ந்து இருந்தான் செல்வன்.
இரவினை அலங்கரிக்கும் நட்சத்திரங்கள், ஒற்றை நிலா, அந்த நிலவொளியில் மேலும் அழகுக் கூடி மிளிரும் அவன் வளர்த்த ரோசாக்கள் என்று அவன் வாழ்வில் ஒரு காலத்தில் மிகவும் முக்கியமானதாய் கருதிய பலவும் இன்றும் மாறாது இருந்தன.
அவனும் மாறாது தான் இருந்தான்.
ஆனால் அவனை அறியாது கடந்த சில தினங்களில் பல மாற்றங்கள் அவன் ஊரினில் நடந்து இருந்தன. அந்த மாற்றங்கள் தான் அவனுக்கு புரியவில்லை.
ஏன் இந்த மாற்றங்கள்?.
எப்பொழுதும் பள்ளி முடிந்து வரும் அவனை பாசத்துடன் விளையாட வரவேற்கும் அவன் வீட்டிற்க்கு எதிரே இருந்த மைதானத்தை அவனிடம் இருந்து பிரிக்கும் வண்ணம் புதிதாய் அந்த வேலி எதற்கு?.
எப்பொழுதும் அமைதியாக இருக்கும் அவனுடைய ஊரில் திடீர் என்று தோட்டாக்கள் முழக்கம் இடுவது ஏன்?
எப்பொழுதும் அவனுடன் விளையாடும் அவனுடைய நண்பர்கள் சிலரை கடந்த சில நாட்களாக காணவில்லையே?. 
எப்பொழுதும் புன்னகையோடு பாசத்தோடு வரவேற்கும் அவனின் நண்பர்களின் தாய்மார்கள் இப்பொழுது ஏன் கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கின்றனர்?… 
ஏன்?
எல்லாவற்றுக்கும் மேலாக இப்பொழுது புதிதாய் ஊரடங்கு உத்தரவு என்று சொல்கின்றனர். இருட்டிய பின்பு யாரும் வீட்டின் வெளியே செல்லக் கூடாதாம். 
இரவில் மைதானத்திலுள்ள ஏரியில் நிலவின் பிரதிபலிப்பை அவன் பார்த்து ரசிப்பதில் அந்த வேற்று மொழி பேசும் மனிதர்களுக்கு என்ன தீங்கு வந்து விடும் என்றும் அவனுக்கு புரியவில்லை.
எட்டே வயதான அவனுக்கு அந்த கேள்விகளுக்கு எல்லாம் விடைத் தெரியவில்லை. அவனுக்குத் தெரிந்தவரை அந்த வேற்று மொழி பேசுபவர்கள் அவர்களுக்கு எதிரிகள். அவனது ஊரினை பிடிப்பதற்கு வந்து இருப்பவர்கள். அவ்வளவே!!!
இதிலும் ஒரு குழப்பம் அவனுக்கு.
ஏன் அவன் ஊரினை பிடிக்க வந்து இருக்கின்றார்கள்?.
அவனுடைய ஊரில் அப்படி என்ன இருக்கின்றது?. பொதுவாக பொன்னும் பொருளும் அதிகம் உள்ள ஊரைத் தானே பிறர் பிடிக்க வருவர்… அவனது ஊரில் மகிழ்ச்சியைத் தவிர அவனுக்கு தெரிந்து வேறு பொருட்கள் இல்லையே… பின் ஏன் இந்த துப்பாக்கி தூக்கிய நபர்கள் அவனது ஊரினை பிடிக்க வந்து இருக்கின்றனர்.
அவர்களது புன்னகை, பொன்னையும் பொருளையும் விட அவ்வளவு விலை மதிப்பு உயர்ந்ததா?.
அதற்காகவா அவனது ஊரினில் உள்ள அனைத்துப் புன்னகையையும் அவர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கின்றனர்.செல்வனுக்கு புரியவில்லை. அந்தக் கேள்விகளுக்கு விடையினை யோசித்தவாறே அவன் அவன் வீட்டு வாசலில் அமர்ந்து இருந்தான்.
“அண்ணா….”
வீட்டினுள் இருந்து அவன் தம்பி இளங்கோவின் குரல் கேட்டது.செல்வன் திரும்பி வீட்டினுள் பார்த்தான். அவனுடைய மூன்று வயதுத் தம்பி அவர்களின் அன்னை படுத்து இருந்த படுக்கையின் அருகே அமர்ந்து இருந்தான்.
செல்வன் எழுந்து பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாய் இருந்த அவனின் அன்னையின் அருகிலே சென்றான். அவனுடைய அன்னை தாகத்தால் விக்கிக் கொண்டு இருந்தார்கள்.
“அண்ணா… அம்மாவுக்கு தண்ணி…” என்றான் இளங்கோ.
செல்வன் வீட்டினுள் சுற்றியும் பார்த்தான். தண்ணீர் வைத்து இருந்த பானைகள் எல்லாம் காலியாக இருந்தன.
செல்வன் மணியைப் பார்த்தான்.இரவு 11:30 என்று கடிகாரம் காட்டிக் கொண்டு இருந்தது.
மீண்டும் திரும்பி அவனது அன்னையைப் பார்த்தான்.
அவனின் அம்மா தண்ணீர் வேண்டாம் என்பதுப் போல் தலையை அசைத்துக் கொண்டு இருந்தார்.
செல்வன் திரும்பி வாசலை நோக்கினான். ஏரி அவனது வீட்டினில் இருந்து மிகத் தொலைவினில் இல்லை. அருகில் தான் இருந்தது. என்ன, நடுவிலே ஒரு வேலி ஏரியை மறைத்துக் கொண்டு இருந்தது. போதாகுறைக்கு இந்த ஊரடங்கு உத்தரவு வேறு. இந்த நேரம் வெளியிலே தென்பட்டால் சுடுவார்கள். அவ்வளவு தானே!!!
அவன் முடிவு செய்து இருந்தான்.மாட்டினால் தோட்டாக்கள் கிடைக்கும். சரி பிரச்சனை இல்லை.ஆனால் அவன் போகவில்லை என்றால் நிச்சயம் அவன் அன்னை உயிர் வாழ்வதற்கு வாய்ப்புகள் கடினம் தான்.
தோட்டாக்களா அல்லது அன்னையா?. நிச்சயம் அன்னைதான்.
செல்வன் கிளம்பத் தயார் ஆனான்.
“இளங்கோ… அந்தக் கோப்பையை எடுத்துக் கொண்டு வா… நாம் சென்று தண்ணீர் கொண்டு வருவோம்” என்று அவனது தம்பியை அழைத்துக் கொண்டு கவனமாக வீட்டை விட்டு வெளியேறினான் செல்வன். அவனது தம்பி இளங்கோவும் அண்ணனின் சொல்லைக் கேட்டு அண்ணனைத் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தான்.
செல்வனுக்குத் தெரிந்து வேலியைக் கடப்பதற்கு ஒரு இடம் இருந்தது. ஒரு புதர் மறைவில் வேலியின் அடியே ஊர்ந்து மைதானத்தின் பக்கம் போகும் வழி இருந்தது.செல்வன் இளங்கோவை அழைத்துக் கொண்டு அந்த புதரின் அருகிலே சென்றான்.
“இளங்கோ… இந்த புதரின் பின்னாடியே பத்திரமாக பதுங்கி இரு. நான் போய் தண்ணி பிடித்து வந்து விடுகின்றேன்” என்று இளங்கோவை பத்திரமாக புதரின் மறைவில் இருத்தி விட்டு வேலியின் அடியில் நுழைந்து மைதானத்திற்குள் நுழைந்தான் செல்வன்.மெதுவாய் ஏரியை நோக்கிச் சென்றான்.
நிலவொளியில் ஏரி மின்னிக் கொண்டு இருந்தது. ஆனால் அவன் மிகவும் நேசித்த இயற்கையை நின்று ரசிக்க நேரம் இல்லாமல் செல்வன் தான் கொண்டு வந்து இருந்த கோப்பையினில் நீரினைப் பிடித்து விட்டு தான் வந்த வழியிலேயே திரும்பி வேலியை நோக்கிச் செல்லலானான்.
வேலியை நெருங்கியப் பின் செல்வன் அவன் தண்ணீர் பிடித்து வந்து இருந்த கோப்பையை இளங்கோவிடம் கொடுத்து விட்டு மீண்டும் வேலியின் அடிப் பகுதி வழியாக அவன் வீடு இருக்கும் பகுதிக்கு செல்ல முயன்ற பொழுது தான் அவன் பயந்து கொண்டு இருந்த விசயம் நடந்தது.
எங்கிருந்தோ இருந்து இருளைக் கிழித்துக் கொண்டு வந்த தோட்டா ஒன்று அவனின் காலைப் பதம் பார்த்தது.
எப்பொழுதும் இதை எதிர்ப் பார்த்து இருந்த செல்வன் அவன் வலியால் கத்தினான் என்றால் அவன் தம்பியும் மாட்டிக் கொள்வான் என்பதால் செய்கையால் இளங்கோவை வீட்டிற்க்கு போகும் படி சொல்லிவிட்டு “இறைவா! அவர்கள் எங்களைப் பார்த்து இருக்க கூடாது. ஏதோ சத்தம கேட்டே சந்தேகத்தின் பெயரில் இங்கு சுட்டு இருக்க வேண்டும். என்னுடைய தம்பி பத்திரமாக வீடு போய்ச் சேர உதவி செய்” என்று வேண்டிக் கொண்டே பல்லைக் கடித்துக் கொண்டு அசையாது வலியைத் தாங்கிக் கொண்டான்.
இளங்கோவும், அண்ணன் சொன்னால் சரி என்றே அந்த கோப்பையை எடுத்துக் கொண்டு வீட்டினை நோக்கி செல்ல ஆரம்பித்தான். செல்வனின் எண்ணப்படி அவனைச் சுட்டவர்கள் சந்தேகத்தின் பெயரிலையே சுட்டதினால் இளங்கோ இருந்த பக்கம் அவர்களின் கவனத்தைச் செலுத்தாது அவர்களின் பார்வையைச் செல்வன் இருந்த வேலியின் பக்கமே செலுத்தியிருந்தார்கள். இதனால் இளங்கோ பத்திரமாக வீடு போய் சேர்ந்தான்.
“அம்மா … தண்ணீ..” என்றவாறே அவன் கொண்டு வந்து இருந்த தண்ணீர்க் கோப்பையை விக்கிக் கொண்டு இருந்த அவனின் அன்னையின் அருகிலே வைத்தான்.
இரண்டு பேராகச் சென்றவர்கள் ஒரு குண்டுச் சதத்திற்கு பின்னால் ஒருவராக வந்து இருக்கின்றார்கள் என்பதைப் பார்த்ததுமே அவர்களின் அன்னைக்குப் புரிந்து விட்டது.
“ஐயோ… நானே என்னுடைய பையனின் மரணத்திற்கு காரணம் ஆகி விட்டேனே… இந்த பாழாப் போன விக்கல் என்னுடைய உயிரை எடுக்காது என்னுடைய பையனின் உயிரை எடுத்து விட்டதே” என்று எண்ணியவாறே அவள் கண் கலங்கியது. தொண்டைக்குழி வரை வந்து நின்ற சோகம் அவளின் வாய் வழியாக சத்தமாக வெளியேறாது , கண்களின் வழியாக கண்ணீராக வெளியேறிக் கொண்டு இருந்தது.
“அம்மா .. அழாதே…!!! அண்ணா … அம்மா அழுதுப் பாரு…” என்று இளங்கோக் கூறி விட்டு வழக்கம் போல அவனது அண்ணனைத் தேடித் திரும்பிப் பார்த்தான். அப்பொழுது தான் அவன் அண்ணன் இன்னும் வீட்டிற்க்கு வரவில்லை என்பதை உணர்ந்தான்.
“அம்மா … அண்ணா வரல″ என்றுக் கூறிவிட்டு அவன் திரும்பி வீட்டு வாசலை நோக்கி நகர ஆரம்பித்தான்.
“இளங்கோ போகாதே..” என்று சொல்ல முயன்றும் சொல்ல இயலாத அவளின் முடியாமையை எண்ணி அவளின் கண்ணீர் இன்னும் கொஞ்சம் அதிகமானது.
இளங்கோ அவன் அண்ணன் முன்பு அமர்ந்து இருந்த அதே வாசலில் அமர்ந்து அவனின் அண்ணனை காண காத்து கொண்டு இருக்க ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் சற்றுத் தொலைவில் தோட்டாக்கள் மீண்டும் வெடிக்கும் சத்தம கேட்டது. 
.....................பின் ஒரே அமைதி..............................
அண்ணனை எதிர்ப்பார்த்து இளங்கோ அண்ணனின் ரோசக்களைப் பார்த்தவாறே காத்துக் கிடந்தான்.
அவனின் அன்னையின் கண்ணீரால் அவன் கொண்டு வந்து இருந்த தண்ணீர்க் கோப்பை நிரம்பி வழிந்துக் கொண்டு இருந்தது.
விடியலை எதிர்பார்த்து அந்த ஊர் காத்துக் கொண்டு இருந்தது. ஒரே கேள்வி தான் அந்த மக்களுக்கு,விடியல் எப்பொழுது?….
அன்பையும் உறவையும் புதைத்து விட்டு இவர்கள் வேறு எதை அறுவடைச் செய்யப் போகிறார்கள்.
ரோசாக்களைப் சிதைத்துவிட்டு முட் தோட்டங்களால் மட்டும் என்ன பயன்…
விடியல் எப்பொழுது?….