Saturday, June 30, 2012

விலைமாது


ராமன் வேசமிட்டிருக்கும்
பல ராட்சசனுக்கு
என்னை தெரியும்.

பெண் விடுதலைக்காக போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.

என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரகளும் உண்டு.

சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.

திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.

பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?

பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?

காயிந்த வயிற்றுக்கு
காட்டில் இரை தேடும்
குருவியைப் போல்
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.

கட்டில் மேல் கிடக்கும்
இன்னொரு கருவியைப் போலத் தான்
என்னை கையாளுகிறார்கள்.

நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்
பகலில் அது பணமாக மாறும்.
பின்தான்
என் குடும்பத்தின் பசியாறும்.

நிர்வாணமே என்
நிரந்தர உடையானல்தான்
சேலை எதற்கென்று
நினைத்ததுண்டு.
சரி
காயங்களை மறைப்பதற்கு
கட்டுவோம் என்று
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.

என் மேனியில் இருக்கும்
தழும்புகளைப் பார்த்தால்
வரி குதிரைகள் கூட
வருத்தம் தெரிவிக்கும்.

எதையும் வாங்க வசதியில்லாத
எனக்கு
விற்பதற்க்காவது இந்த
உடம்பு இருக்கிறதே!
நாணையமற்றவர் நகங்கள்
கீறி கீறி என்
நரம்பு வெடிக்கிறதே!

வாய்திறக்க முடியாமல்
நான் துடித்த இரவுகள் உண்டு

எலும்புகள் உடையும் வரை
என்னை கொடுமைப் படுத்திய
கொள்கையாளர்களும் உண்டு.

ஆண்கள்
வெளியில் சிந்தும் வேர்வையை
என்னிடம் ரத்தமாய்
எடுத்து கொள்கிறார்கள்.

தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
கீறல் படாத வேசி தேகமில்லை.

என்னை வேசி என்று
ஏசும் எவரைப் பற்றியும்
கவலைப் பட்டதே இல்லை..

ஏனெனில்
விதவை - விபச்சாரி
முதிர்கன்னி - மலடி
ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.

இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.

முதுமை என்னை
முத்தமிடுவதற்க்குள்
என் மகளை மருத்துவராய்
ஆக்கிவிட வேண்டும்.
என் மீது படிந்த தூசிகளை
அவளை கொண்டு
நீக்கி விட வேண்டும்.

இருப்பினும்
இந்த சமூகம்
இவள்
மணிமேகலையை என்பதை மறந்துவிட்டு
மாதவியின் மகள் என்பதை மட்டுமே
ஞாபகம் வைத்திருக்கும்.

இறுதியாக
இரு கோரிக்கை.

என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.

என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது.

----தமிழ்தாசன்--- (முக புத்தகம் )

நான் சராசரி



நான் சராசரி

நான் பெரிய சமூக நல விரும்பி இல்லை. அவசியம் இல்லாதவற்றில் மூக்கை நுழைப்பது, பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது போன்றவை எனக்கு சிறு வயதிலிருந்தே போதனை செய்யப்பட்டுள்ளது. நாம் உண்டு நம் வேலையுண்டு என்றிருப்பதே நன்மை பயக்குமென மிகத் தெளிவாக என் மனதில்  ஆழப்பொதிந்துள்ளது. என் சொந்த பிரச்சனைகளை நான் யாரிடமும் விவாதிப்பதில்லை. பொதுப்பிரச்சனைகளை மிக நெருக்கமானவர்களிடம் மட்டும் எப்போதாவது அது குறித்த செய்திகள் பார்த்தால் பேசுவதுண்டு. “இவனுங்க எப்பவுமே இப்படித்தான் சார்! இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க! இப்படித்தான் சுட்டுத்தள்ளனும்..சவூதி’ல மாதிரி தண்டனை வரணும் இங்கயும்! போன்ற சூடான விவாதங்களைக் கூட பிரயாணத்தில் பக்கத்தில் இருந்து வேடிக்கை மட்டும் தான் பார்ப்பேன். அவர்கள் கருத்து வேண்டி என் பக்கம் பார்த்தால் கூட நான் முகத்தை திருப்பிக்கொள்வேன்.

எனது அதிகபட்ச சமூகப்பொறுப்பினை நான் எனது பதிவிலோ முகபுத்தகத்திலோ பதிவாக அல்லது  செய்தி நிலையாகவோ   பிரகடனப்படுத்திக் கொள்வேன். அல்லது அன்னா ஹசாரே போன்ற அமைதி/அஹிம்சை போராட்டத்திற்கு எனது ஆதரவை தெரிவித்து மெழுகுவத்தி ஏற்றுவேன். லோக் பால் ஒரு சர்வரோக நிவாரணி என நம்புவேன். அப்படின்னா என்ன எனறு கேட்பவர்களுக்கு விளக்கமளிக்க முடியாமல் திணறுவேன். கடைசியாக சொல்லுவேன் அது வந்தா லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்காது. நம்ம காசு மிச்சம் என்று.

வாழ்வாதார போராட்டங்கள் எப்போதும் எனக்கு மிகையாக தோன்றும். இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் அண்டை நாட்டில் நடந்து கொண்டிருந்தாலும் அது என்னைப் பெரிதாக பாதிக்காது. என் நாட்டிலேயே சுனாமியோ பூகம்பமோ எது நிகழ்ந்தாலும் எனக்கு நிகழாதவரை ஒரு செய்தியே. குடிநீர் வேண்டி பெண்கள் தெருமுனையில் போராட்டம் என்றால் கூட நான் வேறுவழியில் விலகிப் போய்விடுவேன். காவலர்கள்,  அரசாங்க அதிகாரிகளை சந்திக்க நேர்ந்தால் அடக்கமாக நடந்துகொள்வேன். பின்னால் போய் கேவலமாக திட்டுவேன். அரசாங்க  வாகனம் செல்கிறது என மணிக்கணக்காக சாலையில் காக்க வைத்தால் கூட யார் போகிறார்கள் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்கமாட்டேன். எனக்கு வேலை முடிய வேண்டுமென்றால் சபித்துக்கொண்டே லஞ்சம் கொடுக்க தயங்க மாட்டேன். வேலையை விட்டுட்டு யார் அலைவது என அதை நியாயப்படுத்திக் கொள்ளவும் செய்வேன்.

எனது கோபங்களை வெறுப்புகளை கொலைவெறியை, கொப்பரை கழுவில்(wash basin) சிக்கிக்கொண்ட பூச்சியையும் கழிவறையில் கரப்பான்பூச்சியையும் தண்ணீர் ஊற்றிக்கொன்றோ, இரவு முழுக்க கத்திக்கொண்டிருக்கும் நாய்க்குட்டிகளை காம்பவுண்டில் இருந்து துரத்தியோ, வயதான பிச்சைக்காரருக்குக் கூட சில்லறை இல்லை என தவிர்த்தோ பாக்கிங் செய்து வரும் பிளாஸ்டிக் குமிழ்களை உடைத்தோ, பழைய பேப்பர்களை சுக்குநூறாக கிழித்தோ தீர்த்துக்கொள்வேன்.

20 குழந்தைகள் சாப்பிடும் செலவில் நான் ப:பே செல்வேன். கொடுத்த காசுக்கு நாசூக்காக சாப்பிடுகிறேன் பேர்வழி என நாகரிகம் கடைப்பிடிப்பேன். ஓட்டுப் போட மாட்டேன். எந்த ஆட்சி வந்தாலும் குறைப்பட்டுக்கொள்வேன். என்னைப் பொறுத்த வரையில் அரசியல் ஒரு சாக்கடை. எனது அடிப்படை உரிமைகள் சில மழுங்க அடிக்கப்படுவது தெரிந்தும் பெரிதாக வருத்தப்பட மாட்டேன். என்கவுண்ட்டர்களுக்கு சப்போர்ட் செய்வேன். பெட்ரோல் விலை ஏறினால் பஸ்ஸில் போவேன். பஸ் டிக்கெட் விலை ஏற்றினால் ஷேர் ஆட்டொ மாறுவேன். இந்த நாட்டில் வாழ முடியாது என சொல்லுவேன். மனித உயிருக்கு இங்கு மதிப்பே இல்லை என சலித்துக்கொள்வேன். ஆனாலும் ஒரு விபத்தைப் பார்த்துக் கூட என் வாகனம் நின்றிருக்காது. டிராபிக்கை குறை சொல்வேன். ஆனால் சமயம் கிடைக்கும் போது நானும் சிக்னல்கள் மீறுவேன். பின்னால் இருப்பவர்கள் நிற்க விடமாட்டார்கள் என சாக்கு சொல்வேன்.

க்ளோபல் வார்மிங்’ஆ? சூரியன் அழிந்துவிடுமா? பூமி மூழ்கிவிடுமா? அதன் முழு கொடுமைகள் ஆரம்பிக்கும் வரையில் நான் உயிரோடு இருப்பேனா தெரியாதே. என் எத்தனாவது தலைமுறை அப்போது இருக்குமோ? அதற்குள் வேறு கிரகத்தில் வாழ கற்றுக்கொண்டுவிடுவார்கள் என அதை டீலில் விட்டுவிடுவேன். மின்சார தட்டுபாடா ? மின்சாரத்தை சேமிக்க எவ்வித வழிமுறைகளையும் கையாளாமல் மின்வெட்டை குறை சொல்லுவேன். இன்வெர்ட்டர் இன்ஸ்டால் செய்து எனக்கு வேர்க்காமல் பார்த்துக்கொள்வேன். எல்லாவற்றிற்கும் உடனடித்தீர்வு ஒன்றைத் தான் என் மனம் தேடும்.

பறவைகள் வாழும் சதுப்பு நிலங்களில், ஏரிகளில் குப்பை கொட்டுவேன். குப்பை நிரம்பி ஒரு குப்பை மேடான பின்பு அதை நிரப்பி ஒரு ப்ளாட் கட்டப்படும். அதிலும் அன்றைய மார்க்கெட்டின் குறைத்த ரேட்டில் ஒன்றை வாங்கிப்போடுவேன். அழிந்து வரும் பறவைகள், காடுகள், மிருகங்கள் குறித்த எந்த ஒரு பிரக்ஞையும் என்னிடத்தில் இருந்துவிடாது. என் தலைமுறைக்கு சொத்து என்ன விட்டுசெல்கிறேன் என வருத்த‌ப்படும் அளவுக்குக் கூட எம்மாதிரியான உலகத்தை விட்டுச் செல்கிறேன் என யோசிக்கமாட்டேன்.

என்னைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. என்னை என குடும்பம், சமூகம் வளர்த்திருப்பது இப்படித்தான். கூடங்குளம் பற்றிய ஒரு கவியரங்கத்திற்குப் போகிறேன் என சொன்னதற்கு என் அம்மாவின் குழப்பமான ஒரு பார்வை ஆயிரம் கேள்விகளையும் பயங்களையும் பறைசாற்றும். வர்ரதுக்கு மணி ஆகிடுமா என்பதிலிருந்து யோசிக்கமுடியாத ஒரு புள்ளி வரை அது நீளும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு என் பயாலஜிக்கல் கிளாக் வேலை செய்கிறதோ இல்லையோ அலைபேசி அழைக்க ஆரம்பித்துவிடும். பெண்ணாக  இருந்தால் இவ்வகையான வரையறைகளுக்கு அழுத்தமான நியாயங்களைக் கற்பித்துவிடும்.

இப்படி நாளும் பொழுதும் கழிந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில், சராசரித்தனங்களுக்கு அப்பாற்பட்டு சில கருத்துக்களை பதிந்து வைக்க, பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். எப்போதும் அதற்காகவே இயங்கி கொண்டிருப்பவர்கள் சொல்வது ஒரு வகையில் புளித்துப்போயிருக்கும் நேரங்களில், சமயத்தில் சராசரிகள் சொல்வது எடுபடக்கூடும். இவனே சொல்கிறானே என்று. அப்படி ஒரு சராசரியின் குரலாக,


புலம்பலை தொடர்கிறேன்…




கண்ணுக்கு மை அழகு


Women version -

கண்ணுக்கு மை அழகு.. கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு.. அவருக்கு நான் அழகு  (3)

மழை நின்ற பின்னால்லும், இலை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும், கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண் மீன்கள், இரவோடு தான் அழகு
இமை கொட்டும் விண் மீன்கள், இரவோடு தான் அழகு
இளமாறன் கண்ணுக்கு, எப்பொதும் நான் அழகு…

கண்ணுக்கு மை அழகு.. கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு.. அவருக்கு நான் அழகு

ஆனந்த மஞ்சத்தில், அவிழ்ந்தாலும் குழல் அழகு
அடையாள முத்தத்தில், அழிந்தாலும் போட்டு அழகு
பெண்ணோடு கடல் வந்தால் பிறை கூட பேரழகு
பெண்ணோடு கடல் வந்தால் பிறை கூட பேரழகு
என்னோடு நீ இருந்தால், இருள் கூட ஒர் அழகு..

கண்ணுக்கு மை அழகு.. கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு.. அவருக்கு நான் அழகு

  Male version

கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு..

இளமைக்கு நடை அழகு, முதுமைக்கு நரை அழகு
கள்வர்க்கு இரவு அழகு, காதலர்க்கு நிலவழகு
நிலவுக்கு கரை அழகு, பறவைக்கு சிறகழகு
நிலவுக்கு கரை அழகு, பறவைக்கு சிறகழகு
அவ்வைக்கு கூன் அழகு, அன்னைக்கு சேய் அழகு

கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு..

விடிகாலை விண் அழகு, விடியும் வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்றழகு, தென்னைக்கு கீற்றழகு
ஊருகு ஆறு அழகு, ஊர்வலதில் தேர் அழகு
ஊருகு ஆறு அழகு, ஊர்வலதில் தேர் அழகு
தமிழுக்கு ழ அழகு, தலைவிக்கு நான் அழகு..

கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு..
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு..

வைரமுத்துவின் வைர வரிகள் 

மஞ்சள் ஆறு


சீனாவின் சோகம் மஞ்சள் ஆறு !! ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்து இருக்கிறார்கள் !!!

மஞ்சள் ஆறு (சீன மொழி: 黃河, ஹுவாங் ஹ) சீனாவின் 2-வது நீளமானதும் உலகின் 6-வது நீளமானதும் ஆகும். மேற்கு சீனாவின் சிங்ஹாய் (Qinghai) மாகாணத்திலுள்ள பாயன் ஹர் மலைத்தொடரில் தோன்றி 9மாகாணங்கள் வழியாக 5,464 கிமீ (3,398 மைல்) தொலைவு ஓடி பொகாய் கடலில் கலக்கிறது. மஞ்சள் ஆற்றுப் படுகை கிழமேற்காக 1900 கிமீ (1,180 மைல்) மற்றும் வடக்கு தெற்காக 1100 கிமீ (684 மைல்) வரை பரவியுள்ளது. இதன் படுகையின் மொத்தப்பரப்பு 742,443 சதுரகிமீ (290,520 சதுர மைல்).

மஞ்சள் ஆறு சீன நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இங்கேயே வட சீன நாகரிகம் தோன்றியது. இவ்வாற்றுப்பகுதி பழங்காலத்தில் மற்ற பகுதிகளை விட மிகவும் செழிப்பாக வளம் மிகுந்து இருந்தது. ஆனால் அடிக்கடி இவ்வாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சீனாவின் துயரம்என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது

பழங்கால சீன இலக்கியங்களில் மஞ்சள் ஆறானது ஹெ (He (河)) என்று குறிக்கப்படுகிறது. அதற்கு தற்போதையசீன மொழியில் ஆறு என்று பொருள். (பழங்காலத்தில் ஆறு என்பதை குறிக்க 川 மற்றும் 水 என்ற வடிவத்தை பயன்படுத்தினர்). மஞ்சள் ஆறு என்ற பதம் முதலில் மேற்கு ஹான் வம்சத்தில் (206 BC–AD 9)) உருவான ஹானின் புத்தகம் என்பதில் குறிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் ஆறு சில முறை சேற்று நீரோட்டம் என கவித்துவமாக குறிப்பிடப்படுவதுண்டு. 'மஞ்சள் ஆறு தெளிவாக ஒடும் போது' என்று சீனத்தில் சொலவடை நடக்க இயலாத செயல்கள் குறித்து சொல்லப்படுவதுண்டு.
பெயர் காரணம்

இவ்வாற்று நீர் மஞ்சளாக இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. மஞ்சள் ஆற்றின் மேல் மற்றும் நடு பகுதியானது காற்றடு வண்டல் மேட்டு நிலப்பகுதியை கடந்து வருகிறது. இந்த காற்றடு வண்டலே மஞ்சள் நிறத்திற்கு காரணமாகும்.

மஞ்சள் ஆற்று பண்பாடு

சீன நாகரிகம் மஞ்சள் ஆற்றும் படுகையிலேயே தோன்றியதாக நம்பப்படுகிறது. இது 'தாய் ஆறு' எனவும் 'சீன நாகரிகத்தின் தொட்டில்' எனவும் சீனர்களால் குறிப்பிடப்படுகிறது. நெடிய சீன வரலாற்றில் மஞ்சள் ஆறு சீனாவின் வரம் மற்றும் சாபம் என முரண்பாடாக கருதப்பட்டுள்ளது. எனவே இதற்கு சீனாவின் பெருமை மற்றும் சீனாவின் துயரம் என முரண்பாடான பட்டப்பெயர்கள் உண்டு.

மஞ்சள் ஆறு ஏற்படுத்திய சேதம்

ஆற்றின் நிறம் மஞ்சளாக இருக்க காரணம் இது நன்கு தூளான சுண்ணாம்பு வண்டலை காற்றடு வண்டல் மேட்டு நிலத்தில் இருந்து தன் ஓட்டத்தில் கொணர்வதே ஆகும். நூற்றாண்டுகளாக படியும் வண்டல் மற்றும் கரையினால் ஆற்றில் வெள்ளம் ஏற்படுகிறது. உலகின் மோசமான வெள்ளப்பெருக்குகளை ஏற்படுத்தியது மஞ்சள் ஆறாகும். 1887 மற்றும் 1931ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனர்.

1938ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி இரண்டாம் சீன ஜப்பானிய போரின் போது சியங் கை செக் (Chiang Kai-Shek)தலைமையிலான சீன தேசிய துருப்புகள் ஆற்றின் கரைகளை உடைத்து பெரிய வெள்ளத்தை உருவாக்கினர்.வெள்ளம் உருவாக்கியதின் நோக்கம் ஜப்பானிய துருப்புகளின் முன்னேற்றத்தை தடுப்பதாகும். இந்த வெள்ளத்தில் 54,000 சதர கிமீ பரப்பு மூழ்கியது மேலும் 500,000–900,000 வரையான உயிர்கள் பலியான .ஜப்பானிய தரப்பில் பலியான துருப்புகளின் விபரம் தெரியவில்லை. இந்த வெள்ளம் ஜப்பானி துருப்புகள் ஜின்ஜோகு (Zhengzhou) நகரத்தை கைப்பற்றுவதை தடுத்தாலும் அவர்கள் அப்போதய சீனாவின் தலைநகரான வுஹேனை (Wuhan) கைப்பற்றுவதை தடுக்க முடியவில்லை

தனிச் சிறப்புப் பண்பு

மஞ்சள் ஆறு 1.6 மில்லியன் டன் வண்டலை ஓர் ஆண்டுக்கு காற்றடு வண்டல் மேட்டுநிலத்திலிருந்து கொணர்கிறது.
1972ல் முதலில் உலர்ந்தது பின் அடிக்கடி கீழ்பகுதி ஆறு உலர்ந்தது குறிப்பாக ஜினான் (Jinan) முதல் கடலை அடையும் பகுதி உலர்ந்தது. 1997ம் ஆண்டில் 226 நாட்களுக்கு உலர்ந்து காணப்பட்டது. குறைந்த நீர் வரத்துக்கு காரணம் அதிகமான விவசாய பயன்பாட்டுக்கு நீர் எடுக்கப்படுவதே ஆகும். 1950ம் ஆண்டில் எடுக்கப்பட்டதை விட தற்போது ஐந்து மடங்கு நீர் அதிகமாக எடுக்கப்படுகிறது. 1999ம் ஆண்டு கணக்கின் படி இதன் நீரை ஆதாரமாக கொண்டு 140மில்லியன் மக்களும் 74,000 சதுர கிமீ(48,572 சதுர மைல்) நிலமும் பயன்பெறுகின்றன. ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழைக்காலத்தில் இதில் நீர் வரத்து அதிகமாக இருக்கும். அக்காலத்தில் ஓர் ஆண்டில் செல்லும் அளவில் 60% அளவு நீர் வரத்து இருக்கும். மார்ச் மற்றும் ஜூன் மாதங்களிலேயே விவசாயத்திற்கு அதிக அளவிலான நீர் தேவைப்படும். வெள்ளக்கட்டுப்பாடு, மின்சார உற்பத்தி மற்றும் தேவையான காலத்தில் நீரை பயன்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக இதன் குறுக்கில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதிகளவில் சேரும் வண்டலின் காரணமாக இவற்றின் ஆயுள் காலம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். முன்மொழியப்பட்ட தெற்கு-வடக்கு நீர் மாற்றல் திட்டப்பணியின் படி யாங்சே ஆற்றின் நீரானது பல திட்டங்கள் மூலம் மஞ்சள் ஆற்றுக்கு திருப்பிவிட திட்டமாகியுள்ளது. மேற்கில் இரண்டு ஆறுகளும் அருகில் உள்ள பகுதி, ஹான் (Han)ஆற்றின் மேல் பகுதி , பெரும் கால்வாய் என மூன்று திட்டங்கள் இதில் உள்ளன.

மஞ்சள் ஆற்றின் மிக அதிகளவிலான வண்டல் குறைவான நீர் வரத்து உள்ள காலங்களில் ஆற்றின் அடியில் படிகிறது. இதன் காரணமாக ஆற்றின் உயரம் அதிகரிக்கிறது. மிக அதிக நீர்வரத்து உள்ள காலங்களில் வெள்ளம் உருவாகி அவை ஆற்றின் கரையை உடைத்து அருகிலுள்ள நிலங்களில் பாய்கிறது. மேலும் வெள்ளம் வடிந்த பின்பும் ஆற்றின் அடி உயர்ந்து இருப்பதால் ஆறானது பழைய பாதைக்கு திரும்பாமல் வேறு பாதையை தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. தற்காலத்தில் கரையின் பலத்தை மேம்படுத்தி வெள்ளத்தை கட்டுப்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன.
மஞ்சள் ஆற்றின் கழிமுக பரப்பு 8,000 சதுர கி.மீ(3,090 சதுர மைல்). எனினும் 1996ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் இது குறைந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு மண் அரிப்பே முதன்மையான காரணமாக கூறப்பட்டுள்ளது

நன்றி முக புத்தகத்தில்  இருந்து 

Wednesday, June 27, 2012

திராவிட மொழி


உலகத்திலேயே அதிகமாகப் பேசப்படும் மொழி மண்டரின் (சீன மொழி)
மேலும் , சீன மொழியானது பல வகைகளாகப் பேசப்பட்டாலும் அம்மொழிகள் அனைத்திற்கும் எழுத்துருவம் ஒன்றே !
அதேபோல சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ்மொழியும் பல வகைகளாகப் பிரிந்து போனது ,
அதைதான் திராவிட மொழிகள் என்று கூறுவார்கள் ,
திராவிட மொழியானது ஆதியில் தமிழில் இருந்து பிரிந்து சென்ற மொழிகளே ஆகும் ,
தற்காலத்தில் பயன்படுத்தப்படும் தமிழும் ஆதி தமிழில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சிக் கண்டதே ஆகும் .
ஆதி தமிழ்மொழியில் இருந்து பிறந்த மொழிகளில் ஒன்றுதான் மலையாளம் ,
மலையாள மொழியை ஆரம்பத்தில் மணிப்பிரவள மொழி என்று அழைத்தனர் ,
மணி என்ற தமிழ் சொல்லும் பிரவளம் என்னும் வடச்சொல்லும் ,
மலையாள மொழி தமிழும் வடமொழியும் கலந்த ஒரு மொழி என்று குறிக்கிறது .
உண்மையில் சேர நாட்டில் பேசப்பட்ட தமிழைத் தான் மலை நாட்டு தமிழ் என்று அழைத்தனர் ,
இம்மொழியானது வடமொழியினால் அதிக அளவு தாக்கப்பட்டு ஒரு தனி மொழியாகத் திரிந்தது ,
ஆய்வுகள் மலையாளத்தில் 80க்கும் அதிகமான சதவீத வடமொழி கலப்பு இருப்பதாகக் கூறுகின்றன .
மலையாளம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனி ஒரு மொழியாக அறிவிக்கப்பட்டது .
கிரந்த எழுத்துகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்து தன் மொழிக்கு ஓர் எழுத்துவடிவம் உருவாக்கி ,
தமிழில் இருந்து பிரிந்து தற்பொழுது தனி ஒரு மொழியாக மலையாளம் திகழ்கிறது .

அதேபோல தமிழர்களின் வழக்கு தமிழ் (பேச்சுத் தமிழ்) , உரைநடை தமிழுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வேறுபட்ட தனி ஒரு மொழி போலத் தோன்றுகிறது.
எடுத்துகாட்டாக : நா போய்ட்டு வரேன் , நான் போய் வருகிறேன்/நான் சென்று வருகிறேன் .

மேலும் தமிழ்மொழி ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு விதமாகப் பேசப்படுகிறது ,
அதுமட்டுமா ? தமிங்கிலம் (Tanglish) தான் தற்பொழுது மிகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது !
இந்த சூழ்நிலை இப்படியே தொடருமானல் தமிழிலிருந்து மலையாளம் போன்ற மொழிகள் பிரிந்தது போல ,
தமிழிலிருந்து இன்னொரு புது மொழி மீண்டும் பிறந்தாலும் பிறந்து விடும் .
நம் தமிழை நாம் தான் காக்க வேண்டும் ,
வேலியே பயிரை மேய்வது போல ,
நம் தமிழை நாமே சிதைக்கக் கூடாது ,
முடிந்தவரை தமிழை முறையாகப் பேசுவோம் ,
இளமை குன்றாத அழகு தமிழைப் போற்றுவோம் !!

# முடிந்தவரை தமிழை உரோமிய எழுத்துகளில் (Roman Letters) எழுதுவதைத் தவிர்ந்து கொள்ளுங்கள் .

தவறேதும் இருந்தால் திருத்தவும் .

Tuesday, June 19, 2012

கோயம்பேடு காய்கறிச் சந்தை


மலையெனக் குவியும் காய்கறிகள்: கோயம்பேடுக்கு ஒரு செல்கை:


சென்னைப் பெருநகர மக்களின் அன்றாட காய்கறித் தேவையைப் பூர்த்தி செய்யும் மிகப் பெரிய சந்தை கோயம்பேடு காய்கறிச் சந்தை. இரண்டு நாட்கள், கோயம்பேடு பற்றிய அறிய சென்றிருந்தோம். இந்தியாவில் மிகப் பெரிய சந்தையாகத் திகழும் இந்தக் கோயம்பேடு சந்தைதான், பல ஆண்டுகளுக்கு முன்னால் பாரிமுனை அருகில் கொத்தவால்சாவடி சந்தை என்ற பெயரில் இயங்கி வந்தது. இப்போது சென்னையின் புறநகரில் அமைந்திருந்தாலும் புறநகர் பேருந்து நிலையம் இங்கு உருவாக்கிய பிறகு இப்போது சென்னையின் இதயமாக- ஒரு பெரும் நகரத்தின் குறியீடாகத் திகழ்கிறது. தினமும் எண்ணூறு சரக்குந்துகளில் காய்கறிகள் இங்கு வருகிறது. 295 ஏக்கர் பரப்பளவில் காய்கறி, பழம் மற்றும் பூக்கள் விற்பனைக்கு என இங்கு 3,194 கடைகள் செயல்படுகின்றன. சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும் சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்லும் இடமாகத் திகழ்கிறது இச் சந்தை.


ஆந்திரா, கர்நாடகா, (கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்துதான் கொண்டுவரப்படுகின்றன. தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. ஏறத்தாழ நானூறு லாரிகளில் அங்கிருந்து மட்டும் வருகிறது. தமிழன் தலையில் தான் விளைவித்த காய்கறிகளை வைத்து பணம் பார்க்கும் கர்நாடகம் – காவிரி தண்ணீர் தருவதில் மட்டும் தொடர்ந்து முரண்டுபிடிப்பது ஏனோ.) மராட்டியம் போன்ற வெளி மாநிலங்களிருந்தும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் இந்தச் சந்தைக்குக் கொண்டுவரப்படுகிறது. இந்தக் காய்கறிகள்தான் சிறு வியாபாரிகள் மூலம் சென்னை முழுதும் விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு கொடுக்கிறது இந்தக் கோயம்பேடு காய்கறி சந்தை.


கோயம்பேடுக்கு அருகில் வசிப்பவர்கள் இங்கே வந்து தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொள்கிறார்கள். சென்னையின் இதர பகுதி மக்களுக்கு- அந்ததந்த பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் இங்கு அதிகாலையிலேயே வந்து காய்கறிகளை கொள்முதல் செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். மொத்தத்தில் சென்னையின் அனைத்து பகுதி மக்களுக்குமான காய்கறி தேவையை பூர்த்தி செய்கிறது கோயம்பேடு.


நள்ளிரவு இரண்டு மணி முதல் வண்டிகளில் காய்கறிகள் வரத் தொடங்குகின்றன. நீண்ட வரிசையாக காத்திருந்து ஒவ்வொரு லாரியாக சந்தை வளாகத்துக்கு உள்ளே வந்து காய்கறிகள் இறக்கப்படுகிறது. காய்கறி ஏற்றி வரும் வண்டிகளுக்காக தேநீர் அருந்தி கொண்டும் – உரையாடிக் கொண்டும் காத்திருக்கின்றனர் சுமை தூக்கும் தொழிலாளர்கள். ஒவ்வொரு லாரிக்கும் நான்கு ஐந்து பேர் என சுமை தூக்கும் தொழிலாளர்கள் காய்கறி மூட்டைகளை இறக்குகின்றனர். இவர்கள் மூட்டை கணக்கில் பணம் பெறுகிறார்கள். பெரும் இரைச்சல் மிகுந்த நகரமான சென்னை மாநகரம் நிசப்தமாக இருக்கும் வேளையில் மிக சுறுசுறுப்பாகவும் சுவாரசியமாகவும் இந்தப் பணி நடக்கிறது.


லாரிகளுக்கும் கடைகளுக்கும் வேகமாக நடந்து விளைந்த காய்கறிகளை முதுகு வளைந்து ஏந்திச் செல்லும் அந்தத் தொழிலாளர்களுக்கு சுமையின் அழுத்தம் சுகமாக இருக்கிறது போலும். இருந்தாலும் நள்ளிரவு வேளையின் இதமான காற்று மூட்டை தூக்கும் தொழிலாளர்களின் வியர்வையை துடைத்து விடுகிறது. பொழுது புலர புலர, வரிசையில் நின்ற சரக்குந்துகளும் ஒவ்வொன்றாக வெளியே விலகிப் போகிறது. காலை ஆறு மணிக்கெல்லாம் அனைத்து வகைக் காய்கறிகளும் கடைகளுக்குள் அடைக்கலம் அடைந்து விடுகிறது. இந்தக் காய்கறிகள் எப்படி வருகின்றன என்பதை அறிந்துகொள்ள ஒரு மொத்த வியாபாரியிடம் பேசினோம்.


தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் வரும் காய்கறிகள், இங்கு முகவர்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. வெளி மாநில மொத்த வியாபாரிகள் தங்கள் முகவர்களை கோயம்பேட்டிலேயே தங்க வைத்து அவர்கள் மூலம் வியாபாரம் செய்கின்றனர். அந்த முகவர் கொள்முதல் செய்த காய்கறிக்கான தொகையைப் பெற்று காய்கறிகளை அனுப்பி வைத்தவருக்கு பணத்தைக் கொடுத்து விடுவார். தமிழகத்திலேயே உள்ள பெரும் நிலக்காரர்கள் தங்கள் காய்கறிகளை தங்கள் உறவினரோ நண்பரோ இங்கு கடை வைத்திருந்தால் நேரிடையாக அவர்களுக்கு அனுப்பிவைத்து விடுகிறார்கள்.


இப்படி வந்து குவியும் காய்கறிகளை வாங்க வந்துகொண்டே இருக்கும் வியாபாரிகள், நுகர்வோர் என காலை ஐந்து மணி முதலே களைகட்டத் தொடங்கிவிடுகிறது அந்த அகன்ற வளாகம். வளாகத்தின் வாயிலில் சிறு வியாபாரிகளின் கூட்டம் அங்காங்கே காணப்படுகிறது. ஆமாம் பணம் குறைவாகவோ அல்லது பணம் இல்லாதவர்கள்- வட்டிக்கு விடுவோரிடம் மணிக் கணக்கு அடிப்படையில் வட்டிக்கு பணம் பெற்று காய்கறிகளை வாங்குகிறார்கள். ஆயிரம் ரூபாய் கேட்டால் வட்டிக்குத் தருவோர் நூறு ரூபாய் பிடித்தம் செய்துகொண்டு தொள்ளாயிரம் ரூபாய் தருவார்கள். ஒரு மணி நேரம் கழித்து பணம் பெற்ற சிறு வியாபாரி ஆயிரம் ரூபாய் தர வேண்டும். இது நியாயமல்ல என்றாலும் இப்படி பணம் தருவதற்கே வட்டிக்கு விடுவோர் தயங்குகிறார்கள். தொடர்ந்து தன்னிடம் பணம் பெற்று சரியாக பணம் கொடுப்பவருக்கே முதலிடம் தருகிறார்கள். புதியவர் யாராவது பணம் கேட்டால் வட்டிக்குக் கொடுப்பவருக்கு தெரிந்தவர் சிபாரிசு செய்யவேண்டும். பணம் பெற்றவர்கள் காய்கறிகளை விற்று பணத்தை திரும்ப செலுத்தி தனக்குக் கிடைத்த சிறு லாபத்தோடு வீடு செல்கிறார்கள்.


சந்தைக்கு உள்ளே கடை வைத்திருப்போருக்கு இந்த நிலைமை இல்லை. கடைக்கு அரசிடம் விண்ணப்பித்து அனுமதி கிடைத்து விட்டால் போதும். காய்கறி வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கிறது. தினமும் ஆயிரம் ரூபாய்க்கும் கூடுதலாக லாபம் பார்க்கிறார்கள் இந்த வியாபாரிகள். காய்கறி கடைகள் மட்டும் ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. பண்டிகைக் காலங்களில் கூடுதல் வருமானம் கிடைக்கிறது இவர்களுக்கு. எங்கோ ஒரு விவசாயி விளைவித்த காய்கறிகள் எத்தனை பிரிவினருக்கு வேலை ஏற்படுத்தி தருகிறது என்ற பெருமிதம் இங்கு கண்ட காட்சிகள் நமக்குத் தருகிறது. ‘இந்தியாவின் இதயம் கிராமங்கள்தான்’ என்ற வார்த்தைகள் எவ்வளவு சரியானவை என்று எண்ணிக்கொண்டே வெளியே வந்தபோது அழுகிய காய்கறி, பழங்களின் கழிவுகள் அனைத்தும் மலை போல் குப்பைகளாய்த் தேங்கிக் கிடக்கின்ற காட்சி கவலையை ஏற்படுத்தியது.


இதுபற்றி கோயம்பேடு வியாபாரிகள் சங்க செயலாளரிடம் விசாரித்தோம். குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு விடப்படுகிறது. அவர்கள், வாரத்தின் அனைத்து நாட்களிலும் குப்பைகளை எடுப்பதில்லை என்று குறை கூறுகிறார்கள் வியாபாரிகள். இவைகளை உடனுக்குடன் அள்ளாமல் விட்டு விடுவதால் குப்பைகள் மக்கி துர்நாற்றம் அடிக்கிறது. மழை நேரத்தில் இந்த சந்தை வளாகமே சகதிக்காடாகி நடக்கும் இடமெல்லாம் சாக்கடையாக காணப்படுவதை நாமும் கண்டிருக்கிறோம். தினமும் பல்லாயிரக் கணக்கானோர் நடமாடும் இந்த வளாகத்தை இன்னும் சுகாதாரத்தோடு வைத்திருந்தால் கோயம்பேட்டின் பெருமை அதிகமாகப் பேசப்படும்.

படித்ததில்-பிடித்தவை


படித்ததில்-பிடித்தவை


*****************************
 பொண்ணுங்களைப் பசங்க ரெண்டே வகையாத்தான் விவரிக்கிறார்கள்...
1.என்னா பொண்ணுடா அவ?

2.பொண்ணாடா அவ?
 
*****************************

பெயருக்குப் பின்னால் அப்பா பெயரோடு தொலைந்து போகும் தோழிகள்...
கணவர் பெயரோடு பேஸ் புக்கில் திரும்பக் கிடைக்கிறார்கள்.

********************************

நான் எந்த பாதையில் செல்ல வேண்டுமென்பதை முன்னாள் செல்லும் ஸ்கூட்டியே நிர்ணயிக்கிறது..!
 
***************************
 
வெறுப்பை மறைத்து சிரிப்பை அலுவலகத்திலும்.,
 சிரிப்பை மறைத்து வெறுப்பை வீட்டிலும் உமிழ்கிறேன்!

******************************
 
என்னது? மெழுகுவர்த்தியின் பயன்பாட்டை அதிகப் படுத்திய அம்மாவுக்கு,
இன்னும் மெழுகுச் சிலை வைக்கவில்லையா?

**********************************

நீங்கள் எங்கே வசித்தாலும், பார்த்த மாத்திரத்தில்  உங்களை  உங்கள் ஊரோடு இணைக்க வல்லவை ஜவுளிக்கடை கட்டைப் பைகள்!

**********************************

தவறுகளுக்கான காரணங்கள் நியாயமாகவே இருக்கின்றன., நாம் செய்தால் மட்டும்.

*************************************

வேலைவெட்டி இல்லாத ஆணை கல்யாணம் செய்ய பெண் முன் வராத வரை.,
சம உரிமை என்பது வெறும் கூச்சல்!

**************************************

குளிரை அனுபவிக்கிறேன்னு ஊட்டியில போய் ஹீட்டர் போட்டு கிட்டு தூங்குபவனே மனிதன்!!!

**************************************

புத்தாண்டில் ஒன்றும் மாறப்போவதில்லை... என்பது திங்கட்கிழமை அலுவலகத்தில் கால் வைத்தவுடனேஉரைத்துவிட்டது.!

****************************************
 தோல்வியின் விரக்தியில் கடவுளைச் சபிக்கும் உங்களில் எத்தனை பேர்,
வெற்றியின் பெருமிதத்தில் நன்றி சொல்லியிருப்பீர்கள்?

***********************************

ரஜினி., சில படங்களில், ஒரே பாடலில் பெரிய ஆளாகிவிடுவார்!
அவர் மருமகன், உண்மையிலேயே, ஒரே பாடலில் பெரிய ஆளாகிவிட்டார்.
 
*************************************

 பத்து மணி நேரம் தூங்குவது சோம்பேறித்தனம் அல்ல.
ஒரு மணி நேரம் தூங்காமல் சும்மாவே படுத்திருப்பது தான் சோம்பேறித்தனம்.

**************************************
சென்னையில் நிழலுக்கு ஒதுங்குகிரவர்களை விட,
காதலுக்கு ஒதுங்குகிரவர்களே அதிகம்.

*****************************

வாழ்க்கையில், நாம தப்பு பண்ணிட்டா ஒரு பத்து நிமிஷம் கண்ண மூடிகிட்டு பொறுமையா யோசிக்கணும்...
பழிய யார் மேல போடலாம்னு...

********************************

வளர்ச்சி என்பது... அப்பாவின் திட்டுக்கு கடுப்பாவதில் தொடங்கி...
மானேஜரின் திட்டுக்கு அமைதியாக நிற்பதில் முடிகிறது.

*********************************

கோபத்தை கட்டுபடுத்த , அது வரும்போது ஒன்னு முதல் பத்து வர தல கீழா என்னனுமாம். கேக்கும்போதே செமகோவம் வருது!

***********************************

தேர்வில்... தெரியாத விடைக்கு தலையை சொரிபவனை விட.,
முன்னிருப்பவனின் முதுகை சொரிபவனே தேர்ச்சியடைகிறான்!

***********************************

பொண்ணுங்க., நான் தூங்க போறேன்னு ஸ்டேடஸ் போட்டா கூட 100 கமண்ட்ஸ், 500 லைக் வருது.
ஆம்பளைங்க., நான் தொங்க போறேன்னு போட்டா... கயிறு இருக்கா இல்ல வாங்கி தரட்டா ன்னு தான் பதில்வருது.

***********************************

உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
உங்களாலேயே அதை இரகசியமாய் வைக்க முடியாத பொது, மற்றவர்களால் எப்படி முடியும்?

****************************************

உண்மையை உளறிவிட்டேனே என்கிற போதுதான்
உண்மையிலேயே உளறிவிடுகிராய்!

Monday, June 18, 2012

சிவலிங்கம்



சிவலிங்கம் ச்சே "அதை"யா குறிக்கிறது? இல்லை இதோ உண்மையை பாருங்கள் :::


நீங்க கும்புடுறீங்களே சிவலிங்கம்! அது "அதையா" குறிக்கிறது???

லிங்கம் என்றால் "SYMBOL", (or) "குறியீடு" என்று பொருள்!
சிவ-லிங்கம் என்றால் சிவ-குறியீடு! Siva-Symbol! சிவபெருமானைக் குறிக்கும் சின்னம்! அம்புட்டு தான்!

படம் வரைந்து பாகங்களைக் "குறி" என்று சொல்லும் போது நமக்கு ஒன்னும் அப்படித் தோனுவதில்லையே! அப்புறம் ஏன் "லிங்கம்" என்று சொல்லும் போது மட்டும் இப்படி?

சிவ-லிங்கம் என்பது சிவ-குறியீடு! இதுக்கு மேல சொல்லுறது எல்லாம் அதீதக் கற்பனை!


சிவலிங்கம் பற்றிய ஒரு பொய்யை, ஓராயிரம் புத்தகமாப் போட்டு amazon.com-இல் துரைமார்களோ இல்லை நம்மூர் high profile சாமியார்களோ வெளியிட்டுருவாங்க! அதைப் படிச்சிட்டு, நமக்கே சந்தேகம் வரும் நிலை வந்துடிச்சிப் பார்த்தீங்களா? போதாக்குறைக்கு தமிழ் சினிமாவின் மகத்துவம்!

முதலிரவுக் காட்சிகளில்...அப்பிடீ ஒரு சைடுல...சிவலிங்கத்தைக் காட்டுவாங்க! எந்தப் படம்-பா அது? கார்த்திக்-ரஞ்சிதா-ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு லவ் ஸ்டோரி!
ரொம்ப அறிவாளித்தனமா, இலை மறை காய் மறையாச் சொல்லிட்டதா இயக்குனர் பெருமை பட்டுக்கிடுவாரு! நம்ம கமல் சாரும் இன்னும் சில இயக்குனர்களும் பல படங்களில் இந்த "டெக்னிக்"கைப் பயன்படுத்தி இருக்காங்க! :-)

சிவலிங்கம் பார்க்க "அப்பிடி" இருக்கோ இல்லையோ, இப்படிச் சொல்லிச் சொல்லி, "அப்பிடியே" பார்க்க நாமளும் பழகிக்கிட்டோம்!
அட ஆமாம்-ல! "அப்பிடித் தான்-ல" இருக்கு; நம்ம முன்னோர்கள் எல்லாரும் படா கில்லாடியா இருந்திருக்காங்கப்பா-ன்னு கல்லூரி நண்பர்கள் கூட நமட்டுச் சிரிப்பு சிரிச்சிக்கிட்டு Time Pass ஆகும்! இத வச்சியே கல்லூரியில் கும்மி அடிக்கும் அதி தீவிர சிவபக்த குழாங்களும் உண்டு! :-)

சிவ-லிங்கம் என்றால் சிவக்-குறியீடு-ன்னு பார்த்தோம்!
ஏன் அப்படி ஒரு லிங்க வடிவம்? அந்த வடிவத்தில் என்ன தான் சொல்ல வராங்க என்பதைக் கொஞ்சம் எளிமையா, எல்லாருக்கும் புரியிறா மாதிரி பார்க்கலாம்


இறைவனைப் பரப்பிரம்மம் என்று சொல்வதுண்டு! எதையும் கடந்து நிற்பவன் பரம்=கடவுள்!


* ஹீரோ போல, முருகனும் கண்ணனும் அழகாகச் சிரித்தால் = உருவம்!
* உருவமே இல்லாத, குறியீடே இல்லாத, ஏதோ ஒரு சக்தி நிலை = அருவம்!
* உருவமும் உண்டு, அருவமும் உண்டு! (அ) உருவமும் இல்லை, அருவமும் இல்லை = அப்பிடின்னா அதுக்குப் பேரு என்னா? = அருவுருவம்!

சிவலிங்கம் என்பது அருவுருவம்!

உருவமாகப் பார்த்தால் இறைவனும் மனுசனைப் போலத் தான்! கை கால் காது மூக்கு-ன்னு எல்லாம் கடவுளுக்கும் இருக்கும் போல! காதுல பாட்டு கேப்பாரா? மூக்குல மூச்சு விடுவாரா-ன்னு நெனச்சிக்குவோம்!

"உருவம்-னா வெறும் மனுச உருவம் மட்டும் தானா? மரம், செடி, விலங்கு, பறவை எல்லாம் கூட உருவம் தான்! அந்த உருவத்துல எல்லாம் கடவுள் இருக்க மாட்டாரா?"-ன்னு சில பேரு குறுக்குக் கேள்வி கேப்பாங்க!
ஹிஹி! அதான் தண்டகாரண்யத்து மரமாய், மீனமாய், ஆமையாய், வராகமாய், நரசிம்மமாய், வாமன-ராம-கண்ணன்னு மனுசன்களாய் பல உருவத்தில் இறைவனைக் காட்டினாங்க!

சரி...உருவம் பற்றிச் சொன்னீங்க! இறைவன் அருவமாகவும் இருக்காருன்னு சொல்லிக் குழப்புறாங்களே!
உருவமே கெடையாதுன்னு சொல்லுறத நம்புறதா?
உருவமா இருக்குறத நம்புறதா? எதைப்பா நம்புறது?

கேள்வி எல்லாம் நல்லாத் தான்  இருக்கு ... கேள்விக்குப் பதில், இன்னொரு கேள்வி தான்!
தண்ணி உருவமா? அருவமா? இதுக்குப் பதில் சொல்லுங்க பார்ப்போம்!

* நீராவியா இருந்தா = அருவம்! கண்ணுக்குத் தெரியாது!
* பாத்திரத்துல புடிச்சி வச்சா = உருவம்! கண்ணுக்குத் தெரியும்!
எந்தப் பாத்திரத்துல தண்ணியைப் பிடிக்கறோமோ, அந்த உருவத்தையே தண்ணியும் எடுத்துக்குது? அதே போலத் தான் இறைவனும்!

கோயில்-ல ஏன் தீர்த்தம் கொடுக்கறாங்க-ன்னு ! ஞாபகம் இருக்கா?
நாராயணன்-நாரம் என்பது நீர்! = நாரம் + அயணம்
இறைவன் நீரைப் போலவே அருவமாகவும் இருக்கிறான்! பிடித்து வைத்த பாத்திரத்தில் உருவமாகவும் இருக்கிறான்!

இறைவன் உருவமாய் இருக்கலாம்! ஆனால் உருவம் மட்டுமே இறைவன் இல்லை!
இறைவன் அருவமாய் இருக்கலாம்! ஆனால் அருவம் மட்டுமே இறைவன் இல்லை!

இதை அவ்வப்போது நாம் உணர்ந்து கொள்ளணும்! அதுக்குத் தான் உருவமும் இல்லாத, அருவமும் இல்லாத....அருவுருவம் என்னும் ஒரு குறியீடு!

வைணவ ஆலயங்களில் தீர்த்தம் என்பது ஒரு அருவுருவம்!
அதே போல் சைவ ஆலயங்களில் லிங்கம் என்பது அருவுருவம்!

லிங்க உருவத்தைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருங்கள்! மனம் குவியும்! அதன் Geometry அப்படி!
எப்படி மேலைநாடுகளில் Crystal Gazing-இல் மனத்தை ஒருமைப் படுத்துகிறார்களோ, அதே போல் வழிபாடு/ தியான முறைகளுக்குப் பயன்படுத்துவதற்கு சிவலிங்க உருவம் நம் பண்பாட்டில் அமையப் பெற்றது!

சிவபெருமான், யோகி மற்றும் குரு வடிவானவர்! எனவே அவரைக் குறிக்கும் லிங்கமும் யோகம் மற்றும் தியான வடிவமாக இருக்கு!

லிங்கம்=லிங்+கம்
*லிங்=லியதே=எல்லாப் பொருளும் அங்கு லயிப்பது, ஒன்றுபடுவது! (merge)
*கம்=கமயதே=எல்லாப் பொருளும் அங்கிருந்தே எழுவது! (emerge)
இப்படி merge-emerge, ஒடுங்கி-எழுவது தான் சிவலிங்க சொரூபம்!

சிவலிங்கம் பற்றிய பல குறிப்புகள் லிங்க புராணத்தில் சொல்லப்படுகின்றன. சிவ புராணம், ஸ்கந்த புராணம் எல்லாவற்றிலும் லிங்கம் குறித்த கதைகள் உள்ளன.

துர்வாச முனிவரின் சாபத்தினால் ஈசனுக்கு உருவம் இல்லாத லிங்க வழிபாடு,
ப்ரம்மனும் விஷ்ணுவும் அடி முடி காணாத அளவுக்கு ஓங்கிய தீப்பிழம்பு தான் லிங்க உருவம் ஆனது
....என்று பல "புராணக் கதைகள்" வழங்கினாலும், அவையெல்லாம் வெறும் கதைகளே!

ஆனால், லிங்கம் என்பது மிக உயர்ந்த அருவுருவக் குறியீடு என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை!

பிரதானம் பிரகருதிர் யதாஹுர் லிங்கம் உத்தமம்
கந்த, வர்ண, ரசாஹிர், சப்த, ஸ்பரிசதி வர்ஜிதம்
வாசனை, நிறம், சுவை, ஓசை, தீண்டல் என்று எல்லாம் கடந்த குறியீடாகச் சிவலிங்கத்தைச் சொல்கிறது!

திருமூலர் லிங்க வடிவம் ஏன் என்பதைப் பல அழகிய தமிழ்ப் பாடல்களில் விளக்குகிறார்!
இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே!
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே என்பது புகழ் பெற்ற திருமந்திரம்!

இது வரைக்கும் சொன்னது புரிஞ்சுதோ புரியலையோ,
சிவலிங்கம் "அதை"க் குறிக்கவில்லை என்பது மட்டுமாவது புரிஞ்சிருக்கும்-னு நினைக்கிறேன்! :-)
வாங்க சிவலிங்கத்தின் அமைப்பைக் கொஞ்சம் பார்க்கலாம்!


சிவலிங்கத்தில் சிவபெருமான் மட்டுமில்லை! மும்மூர்த்திகளும் இருக்காங்க!

* லிங்கத்தின் அடிப்பாகம் பிரம்ம பீடம் = வட்ட வடிவம்!
* அதன் மத்திய பாகம் விஷ்ணு பீடம் = கூம்பு (cone) வடிவம்!
அலங்காரம் செய்யப்பட்டிருந்தால், சிவாலயங்களில் இவை இரண்டும் சட்டென்று நம் கண்ணுக்குத் தெரியாது!

அதற்கு மேல் எல்லாரும் காண்பது தான் சிவ-சக்தி பீடம்! இதுவே இரண்டு பாகமாக இருக்கும்!

* மேலே உருளையான (cylinder) பாகத்தைத் தான் லிங்கம் என்று சொல்லுவார்கள்! அது சிவ சொரூபம்!
* அதன் கீழ் பரந்த வட்ட வடிவமான (round) பாகத்தை ஆவுடையார் என்று வழங்குவார்கள்! அது சக்தி சொரூபம்!
பீடம் அம்பாயாம், சர்வம் சிவலிங்கஸ்ச சின்மயம் என்பது இதை விளக்கும் சிவ புராண மந்திரம்!

திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யும் போது, வழிந்தோடும் நீர் ஆவுடையார் வழியாகவே கொள்ளப்படும்!
ஆவுடையாருக்கு யோனி என்ற பெயரும் உண்டு!:)
இந்தப் பெயரே, இன்று பல விபரீத பொருட்களைச் சிவலிங்க தத்துவத்துக்குக் கற்பிக்கவும் காரணமாகவும் அமைந்து விட்டது!

யோனி என்பதற்கு வழி, இடம் என்பது பொருள்!
ஆத்ம யோனி ஸ்வயம் ஜாதோ, வைகான சம-காயனக
தேவகீ நந்தன ஸ்ரஷ்டா-ன்னு விஷ்ணு சகஸ்ரநாமத்துல கூட "ஆத்ம யோனி"-ன்னு வரும்!
ஆத்ம யோனி-ன்னா ஆத்மா செல்லும் பாதை! இதுக்கு விபரீதமா என்ன பொருளைச் சொல்வீங்க? ஆத்மாவுக்கு ஏதுங்க "யோனி"? :-)

வடமொழியின் பல குறைபாடுகளுள் இதுவும் ஒன்று!பல பொருட்களையும் ஒரே சொல்லில் சொல்ல வந்தா இப்படித் தான் ஆகும்!
தமிழில் இது போன்ற பெரிய குறைபாடு இல்லை! ஒருபொருட் பன்மொழி-ன்னு எல்லாம் நல்ல வேளை இருக்கு!

நாற்றம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு மணம் என்று பொருள்! ஆனா இன்னிக்குப் பேச்சு வழக்கில அதுக்குப் பொருளே வேற! அது போலத் தான்!
நாற்றத் துழாய் முடி-ன்னு பாட்டில் வருதே! முகைமொக்குள் உள்ள நாற்றம் போல்-னு வள்ளுவர் கூடச் சொல்றாரு!

ச்சே...துர் நாற்றம் வீசும் மல்லி மொட்டு போலத் தான் காதலும் - அப்படின்னு வள்ளுவர் சொல்லுறாருப்பா - அப்பிடியா பொருள் கொள்வோம்?  அன்னிக்கி என்ன பொருளில் வழங்கினாங்களோ, அப்பிடித் தானே எடுத்துக் கொள்வோம்? அதைப் போலவே தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்!

ஆவுடையார்=சக்தி பீடம், லிங்கம்=சிவ பீடம்-னு பார்த்தோம்!

ஆக்கல்-அளித்தல்-அழித்தல் என்னும் முத்தொழிலில்,
எல்லா உயிர்களும் ஆவுடையாரில்-சக்தியில் ஒடுங்கி (merge),
லிங்கத்தில்-சிவத்தில் விரியும் (emerge)!
= இது தாங்க எளிமையான சொற்களில் சிவலிங்க தத்துவம்!
இதுக்குத் தான் இத்தனை சொற் குழப்பம், வார்த்தை விளையாட்டு!

சிவலிங்கம் "அதைக்" குறிக்கவில்லை என்பதற்கு இன்னும் பல சான்றுகள் சொல்லி விளக்கலாம்!

எல்லாச் சிவலிங்கத்திலும் ஆவுடையார் (யோனி) இருக்காது!
மேல் பாகமான வெறும் லிங்கம் மட்டுமே கூட உண்டு!
நர்மதை நதியில் இயற்கையாகக் கிடைக்கும் பாணலிங்க கற்கள் இந்த வகையைச் சேர்ந்தது தான்! அந்தக் கற்களுக்கு மேல் பாகம் மட்டும் தான் இருக்கும்!

பகுத்தறிவுப் பாணியில் சொல்லனும்னா, நம்ம இராவணன் வழிபட்ட ஆத்ம லிங்கம் கூட இந்த வகை தான்!
இராவணன் தான் பெரிய மானஸ்தன் ஆயிற்றே! "அப்படி" எல்லாமா அவன் கடவுளை வழிபடுவான்? :-)


காளஹஸ்தியில் வெறும் ஆவுடையார் மட்டும் தான்! மேலே லிங்கமே இருக்காது!
வைத்தியநாதத்தில் லிங்கம் மட்டும் தான்! கீழே ஆவுடையாரே இருக்காது!

அப்போ லிங்கம்-யோனி-ன்னு தப்பு தப்பா வெள்ளைக்கார கனெக்சன் எல்லாம் கொடுக்க முடியாதே! அப்போ என்ன சொல்வீங்க? :-)

அடுத்த முறை ஆலயம் செல்லும் போது,
சிவலிங்க தத்துவம் மிகவும் உயர்ந்த தியான தத்துவம் என்பதை உணர்ந்து கொண்டு,
மன நிம்மதியுடன், மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
சஞ்சலமே தேவையில்லை! சங்கரமே தேவை!

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது!

அறி-யாதவர் கூறும் சொற்கள், அறியாச் சொற்களே!
அனைத்துக்கும் பரம்பொருளான பெருமாளே, தன் யோக நித்திரையின் போது, கைகளில் சிவலிங்கத்தை வைத்துக் கொள்கிறான்! ஒடுங்கி-விரியும் முத்தொழிலின் தத்துவத்தை உணர்த்தவே இப்படி!
பெருமாள் கையில் சிவலிங்கம் இருக்கும் இந்த அழகிய திருக்கோலத்தை இன்றும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் காணலாம்!

சைவ-வைணவத்தில் பேதமும் இல்லை!
சிவலிங்கம் என்பது வெறும் காமமும் இல்லை!


ஹரி ஓம்! சிவோஹம்!!
நன்றி இந்து சமயம்

Saturday, June 16, 2012

காட்விட் பறவை


அதிசிய காட்விட் பறவை பற்றிய தகவல் !!!



பறவையை கண்டே விமானம் உருவாக்கப்பட்டது.ஆன...ால் என்னதான் செயற்கை பொருட்களை வைத்து மனிதன் விமானத்தை உருவாக்கினாளும் பறவைகளை மிஞ்ச முடியாது என்பதை காட்விட் நிருபித்துள்ளது உணவில்லாமல் 11 ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் பறவை ஓய்வே எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து 11 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். தலை கிறுகிறுத்துவிடும். ஆனால் அந்தச் 'சாதனையைப்' புரிகிறது, 'காட்விட்' என்ற பறவை, தொடர்ந்து எட்டு நாள் பறக்கும் இப்பறவை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தனது உடல் எடையில் 0.41 சதவீதம் அளவு உணவைக் கிரகித்துக் கொண்டு புயல் வேகத்தில் பயணத்தை மேற்கொள்கிறது.

ஒவ்வொரு இலையுதிர்க் காலத்திலும் அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்துக்கு இந்த எட்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறது காட்விட்.இந்தப் பறவையானது இடைவிடாது தொடர்ந்து பறக்கிறது. ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ ஒருமுறை கூட பயணத்தை முறிப்பதில்லை. வசந்த காலம் வந்ததும் மறுபடி நியூசிலாந்தில் இருந்து அலாஸ்காவுக்கு 11 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்கிறது.

ஸ்வீடனின்லண்ட் பல்கலைக்கழகம் சுற்றுச்சூழலியல் பேராசிரியர் ஆண்டர்ஸ் ஹெடன்ஸ்ட்ராம், எப்படி இந்தப் பறவை இனத்தால் இவ்வளவு தூரம் இடைவிடாமல் பறக்க முடிகிறது என்று வியந்தார், அதுகுறித்து ஆராய்ந்தார்.

தொடர்ச்சியாக நீண்ட துரத்துக்குப் பறப்பதில், மனிதனால் உருவாக்கப்பட்ட விமானங்களை விட மிகச் சிறந்தது இந்தப் பறவை என்கிறார் ஆண்டர்ஸ்.தொடர்ந்து நீண்ட தூரம் பறந்த விமானத்துக்கான சாதனைக்குரிய கின்டிக் ஸெபர். அது ஓர் ஆளில்லாத சூரியசக்கி விமானம். அது தொடர்ந்து 82 மணி நேரம் காற்றில் பறக்கும். அதவது தொடர்ந்து மூன்றரை நாட்களுக்குப் பறந்து கொண்டே இருக்கும். ஆனால் காட்விக் பறப்பதோ தொடர்ச்சியாக எட்டு நாளைக்கு.

ஆனால் இந்தப் பறவையை இடைநிற்காமல் தொடர்ந்து11 ஆயிரம் கிலோமீட்டர் பறக்க வைப்பது எது? எப்படி 8முழு நாட்களும் இவை உறக்கம் உணவின்றிச் சமாளிக்கின்றன?அதற்கான ஒரு விளக்கம், மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இவை பறப்பதற்க்குக் குறைவான சக்தியையே பயன்படுத்துகின்றன என்பது. இப்பறவைகள் தாம் பறக்கும் ஒவ்வெரு மணி நேரத்துக்கும் ஒரு முறை தனது உடல் எடையில் 0.41 சதவீத அளவை உணவாகக் கிரகித்துக் கொள்கின்றன என்கிறார் ஆன்டர்ஸ்.

"மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இது மிக மிகக் குறைவான அளவு" என்று விளக்குகிறார் ஆண்டர்ஸ். இது தவிர வேறு சில காரணங்களும் இருக்கின்றன. முழுப் பயணத்துக்கும் சக்தியை எடுத்துச் செல்லும் வகையில் பறவையின் உடல் எடையும் அளவும் சரியான விகிதத்தில் இருப்பது முக்கியாமான ஒன்று. 'காட்விட்' பறவைக்குச் சக்தியை அளிப்பது கொழுப்பும், புரதமும்தான். காற்றின் எதிர்ப்பைக் குறைக்கும் 'ஏரோடைனமிக்' உடல் அமைப்பும் உதவுகிறது என்று தெரியவந்திருகிறது.

மற்று ஒருபறவை ஆராய்ச்சியாளராகிய ராபர்ட், "காட்விட்ச்' பறவையின் உடலில், "சேட்டிலைட் டிரான்ஸ் மிட்டர்'களை அமைத்தார். அந்த, "டிரான்ஸ் மிட்டர்' ராபர்ட் டின் கம்ப்யூட்டருக்கு, பறவை பறக்கும் திசையிலிருந்து சிக்னல்களைக் கொடுத்தபடி இருந் தது. அந்த பறவை பறக்கத் துவங்கியது. அப்பறவை, ஒன்பது நாட் களில் 11 ஆயிரம் கி.மீ., பறந்தது. "இந்த பறவைகளின் நீண்ட தூர பயணம் மிகப்பெரிய சாதனை, இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை' என, ராபர்ட் தெரிவித்துள்ளார்.

அக்னி 5

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா செலுத்திய அக்னி 5'ன் சிறப்பம்சங்கள்.



அக்னி 5 ஏவுகணையால் 5,000 கி.மீ. வரை பயணிக்க முடியும் (உண்மையில் 8,000 கி.மீ. தூரத்தை கடக்க வல்லது என்கிறது சீனா). இன்டர் காண்டினென்டல் பேலிஸ்டிக் மிஸைல்' (Inter-Continental Ballistic Missile-ICBM) எனப்படும் இந்த ஏவுகணை, ஏவப்பட்டவுடன் முதலில் பூமியிலிருந்து 40 கி.மீ. உயரத்தை அடையும். அத்தோடு அதன் முதல் ஸ்டேஜ் ராக்கெட் தனியே கழன்றுவிடும். இதையடுத்து அதன் இரண்டாவது ராக்கெட் செயல்பட்டு அதை மேலும் 150 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும். பின்னர் அதன் 3வது ராக்கெட் இயங்கி அதை மேலும் 800 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும்.

3வது கட்ட ராக்கெட் செயல்பட ஆரம்பிக்கும்போது இந்த ஏவுகணையின் வேகம் ஒலியை விட 24 மடங்கு அதிகமானதாக இருக்கும். அதாவது, போர் விமானங்களை விட சுமார் 30 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும். இந்த உயரத்தை அடைந்த பின்னர் ஏவுகணையில் உள்ள கம்ப்யூட்டர்கள், செயற்கைக் கோள் மற்றும் ரேடியோ சிக்னல்கள் உதவியோடு, அதை தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை நோக்கித் திருப்பும். இதையடுத்து அடுத்த 18 நிமிடங்களில் இந்த ஏவுகணை 5,000 கி.மீ. தூரத்தைக் கடந்து குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கும்.

இந்த ஏவுகணையால் பாகிஸ்தான், சீனாவின் எந்தப் பகுதியையும், கிழக்கு ஐரோப்பாவையும், வடக்கு-கிழக்கு ஆப்பிரிக்காவைத் தாக்க முடியும். நிகோபார் தீவுகளில் இருந்து இதை ஏவினால் ஆஸ்திரேலியாவைக் கூட தாக்கலாம். திபெத் பகுதியில் இந்தியாவுக்கு எதிராக ஏவுகணைகளை சீனா நிறுத்தி வைத்துள்ள நிலையில், இந்த அக்னி 5, சீனாவுக்கு எதிரான மிகப் பெரிய தற்காப்பாக இருக்கும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் மட்டும் தான் இந்த வரை ஐசிபிஎம் ஏவுகணைகள் உள்ளன. இப்போது இந்தத் திறனைப் பெற்றுள்ள 5வது நாடு இந்தியாவாகும். இந்தியா முதலில் தயாரித்த அக்னி-1 ஏவுகணை 700 கி.மீ. தூரத்தைக் கடக்க வல்லதாக இருந்தது. இதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த ஆராய்ச்சிகளை நடத்தி அதன் தூரம் 5,000 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அக்னி ரகத்தைச் சேர்ந்த முந்தைய ஏவுகணைகளுக்கும் அக்னி- 5 ஏவுகணைக்கும் இடையே மிக மிக முக்கியமான வித்தியாசம் உண்டு. அது re-entry technology எனப்படும் பூமிக்கு வெளியே போய்விட்டு திரும்ப உள்ளே நுழையும் தொழில்நுட்பம்.

மற்ற ஏவுகணைகள் செலுத்தியவுடனே எதிரி நாட்டு திசை நோக்கி பயணித்து குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும். அவை 'க்ரூயிஸ்' (cruise missiles) ரக ஏவுகணைகள். ஆனால், அக்னி-5 பேலிஸ்டிக் மிஸைல் ரகத்தைச் சேர்ந்தது. அதாவது, ஏவப்பட்டவுடன் பூமிக்கு மேலே பல நூறு கிலோ மீட்டர்கள் பயணித்துவிட்டு, பின்னர் வானிலியிருந்து பூமி நோக்கித் திரும்பி, எதிரி நாட்டு இலக்கை நோக்கி பாயும் ஏவுகணை இது.

இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஏகப்பட்ட சிக்கல்கள். ஆனால், இந்த தொழில்நுட்ப உதவியை வெளிநாடுகளில் இருந்து பெற சர்வதேச சட்டமான Missile Technology Control Regime தடுக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்றாலும், ரீ-எண்ட்ரி தொழில்நுட்பத்தை பிற நாடுகளிடமிருந்து இந்தியாவால் பெற முடியவில்லை.

இதனால் அந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவே உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அதை செய்தும் காட்டிவிட்டனர் நமது DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவின் விஞ்ஞானிகள்.

இந்த ஏவுகணைத் தயாரிப்புக்கான பல தொழில்நுட்பங்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவிடமிருந்து (ISRO) வந்துள்ளதை மறுக்க முடியாது. அக்னி ஏவுகணையின் திட எரிபொருள் ராக்கெட்டுகள், செயற்கைக் கோள்களை ஏவ இஸ்ரோ தயாரித்த எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி. ராக்கெட்களின் அடிப்படையில் அமைந்தவை தான் என்கிறது குளோபல் செக்யூரிட்டி என்ற சர்வதேச பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி மையம்.
நன்றி: tamil.oneindia

Monday, June 11, 2012

புகை பிடிப்பதால் 25 நன்மைகள்


புகை பிடிப்பதால் 25 நன்மைகள்

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை.

அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.

நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.

நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி வந்தாலும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையால் எல்லா அசிங்கங்களையும் மறைத்து புகை மேகத்துக்குள் இருப்பது. தேவலோகத்தில் இருப்பது போல, மேகத்துக்கிடையே சஞ்சரிப்பது போன்ற அனுபவம் தரும்.

சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும் ஒன்றும் பெரிதாக தெரியாது.

சிகரெட் புகைக்குள் எப்போதும் மறைந்திருந்தால் கடன் காரர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.

சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக்கொள்ளலாம். முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.

எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின்வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும்.

சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம் இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும் கலந்து தயாரித்தால். தனியாக கொசு வர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.

பிரச்சனைகள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்தித்து தலையை புண்ணாக்க வேண்டியதில்ல. டென்சனே தேவையில்லை ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால் போதும்.

தீக்குச்சியை உரசும் போது கோபத்தை வெளிப்படுத்தலாம், தீக்குச்சி எரிவதை ஒரு வினாடி ரசித்து அதில் எதிரியின் அழிவைக் கற்பனை செய்து ஆசுவாசப்படலாம், சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல் ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம். எஞ்சிய துண்டு சிகரெட்ட நசுக்கித் தள்ளி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளலாம்.

சிகரெட் பிடித்து லொக் லொக் கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கலாம். பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம்.

அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்து விடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும் . பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.

தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத் தடியுடன் நடக்கும் நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட உதவும்.

இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும் பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்த்த வேண்டியதில்லை.
வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.

எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய் விடும்.

வேண்டாத விருந்தாளியை விரட்ட புகையை அவர்கள் முகத்துக்கு நேரே அடிக்கடி ஊதி விட்டால் போதும்.

புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையை பார்க்கும் போது பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக்கொண்டு அதன் பக்கமே போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும்.

மிகவும் அத்தியாவசியமாக இருந்தாலொழிய யாரும் அருகில் வந்து பேச்சுக் கொடுத்து தொல்லை பண்ன மாட்டார்கள்.

சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைகளை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம்.

வாழ்வின் பிற்பகுதியில் டாகடர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி அள்ளி தந்து வள்ளலாகலாம்.

சிகரெட் பாக்கெட்,காலி தீப்பெட்டி,எரிந்த தீக்குச்சி,சிகரெட்டின் எஞ்சிய துண்டுகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்து வைத்து சாதனை படைக்கலாம். கலைப் படைப்புகள் உருவாக்கலாம்.

வீட்டில் இறைந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளை சின்னக் குழந்தைகள் விரும்பி எடுத்து விளையாடுவதால் அவர்களுக்கு வேறு விளையாட்டுப் பொருட்கள் வாங்கத் தேவையில்லை.

மக்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் புகை பிடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம். கூட்டத்தில் தனியாக தெரியலாம்.

சில்லரைத் தேவைப்பட்டால் சட்டென ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி சில்லரை பெற்றுக் கொள்ளலாம்.

நாட்டில் பொறுப்பற்ற மக்களின் ஆயுளை குறைத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.

சிகரெட் பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருப்பதை கருத்தில் கொண்டு புகை பிடிப்பவர்கள் யாரும் இனி யாரைக்கண்டும் சங்கோஜப்படத் தேவையில்லை. நாம் எக்கேடு கெட்டாலும் பிறருக்கு உதவுகிறோமே நிம்மதியுடன் தொடருங்கள் சேவையை.

Sunday, June 10, 2012

உன் மடி தேடி


துயரத்தின் நீண்ட நிழல்கள்
என்னைத் தீண்டும் போதெல்லாம்
உன் மடி தேடி
சரண்டைந்தவனாக இருக்கிறேன்

நான் யாரென்று அறியாத
முதல் அழுகையின் போதும்

பித்து பிடித்தவன் என
பள்ளி நண்பர்கள்
கேலி செய்த போதும்

முதன்முறையாக தேர்வுகளில்
தோற்றபோதும்


முதல் காதலியால்
தகுதியற்றவன் என
நிராகரிக்கப்பட்ட போதும்

பிழைக்கத் தெரியாதவன் என
கூட வேலை பார்க்கும் ந(ண்)பர்கள்
திட்டியபோதும்

என்னுடைய எல்லாமென நம்பியிருந்த
துணையைத் தொலைத்த போதும்

அம்மா..

உன் மடி தேடி
சரண்டைந்தவனாக இருக்கிறேன்

Saturday, June 09, 2012

Tamil Tounge Twister!! Try it


Song and the meaning is given below :

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே !!!!!

Meaning  :

அந்த பாடலுக்கான விளக்கம் இதுவே.

திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,
திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுடைய
தத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதென்று
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத – தொண்டனே!
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – மரணத்தோடும்
உதி – ஜனனத்தோடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும் ….

Friday, June 08, 2012

நாஸ்கா கோடுகளும் மர்மமும்


நாஸ்கா கோடுகளும் மர்மமும்!!

செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை நடத்தமுடிவதைப் பற்றிய ஆராய்ச்சிகள், நொடிப்பொழுதில் கோடிக்கணக்கானோர் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ளும் தொலைத்தொடர்பு வளர்ச்சி, மனிதனே தேவையில்லாத அளவிற்கு ரோபோக்களின் பயன்பாடு என்று இது வரை மனிதகுலம் பார்த்திராத அளவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. எந்த விசயமாக இருந்தாலும் அறிவியல் சார்ந்த பதிலைத் தர விஞ்ஞானிகளும் தவறுவதில்லை.

அப்படிப் பட்ட விஞ்ஞானிகளின் அறிவிற்கே சில சமயம் சவால் விடும் படியாக அமைந்து விடுகிறது முன்னோர்களின் படைப்புகள்!! எத்தனை சூத்திரங்களைக் கொண்டு அனுகினாலும் முன்னோர்கள் போட்ட முடிச்சுகளில் உள்ள மர்மத்தையும் சிக்கலையும் அவிழ்க்க முடிவதில்லை!! அப்படி ஒரு முடிச்சு தான் பெரு நாட்டு நாஸ்கா மக்கள் வரைந்த கோடுகள்!!

கோடுகள் வரைவதில் அப்படி என்ன பெரிய மர்மம்? நாம் ஏடுகளில் வரையாத கோடுகளா, ஓவியங்களா என்ற கேள்வி நம் மனதில் எழாமலில்லை. இவர்கள் வரைந்த கோடுகளின் பிரம்மாண்டமும், வரைந்த முறையும் தான் பிரமிப்பிற்குக் காரணம். இரும்புத்தாதுப் பொருட்கள் நிறைந்த நாஸ்கா நிலத்தில செந்நிறத்தில் கூழாங்கற்கள் பரவிக்கிடக்கின்றன. இந்தக் கூழாங்கற்கள் அகற்றப்படும் இடம் வெளிர் நிறமாக மாற, இதே முறையில் கோடுகளை வரைந்துள்ளனர்.

இரண்டு கால்பந்தாட்ட மைதானங்கள் அளவிற்கு உள்ள இடத்தில் ஒரு குரங்கு வரையப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் ஆரம்பிக்கும் கோடு சிறிய காதுகள், தலை, கால்கள், அளவான உடல், ஆறேழு சுற்று சுற்றிய வால் என சீராக வரையப்பட்டு ஆரம்பித்த இடத்திலேயே முடிகிறது. பாடப்புத்தகத்தில் ஒரு ஓவியத்தை சீராக வரையவே நாம் சிரமப்படும் வேளையில், எப்படி பிரம்மாண்டமான கோடுகளைத் தீட்ட முடிந்தது? இந்தக் குரங்கின் முழு உருவத்தைப் பார்க்க வேண்டுமென்றால் குறைந்தது ஒரு கிலோமீட்டர் உயரத்திற்குச் செல்ல வேண்டும். அதுவும் இப்பொழுது இருப்பதைப் போல உயரத்தில் இருந்து கண்கானிக்கும் கருவிகள், கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் அளவெடுக்கும் கருவிகள் எதுவும் இல்லாத 2000 ஆண்டுகளுக்கு முன்பு!

நாஸ்கா கோடுகள் அமைந்திருப்பது பெரு நாட்டில் உள்ள நாஸ்கா மற்றும் பால்பா என்ற இரண்டு இடங்களுக்கு நடுவிலான 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வறண்ட பீடபூமியில்!! இந்தப் பீடபூமியில் காற்று, மழை சுவடே இல்லாததால் 2000 ஆண்டுகளாகியும் அழியாமல் உள்ளன.

குரங்குகள், பறவைகள், சிலந்திகள், சூறாமீன்கள், பல்லிகள் என பெரிய உருவங்களும், முக்கோணம், நாற்கரம் போன்ற வடிவங்களும் ஏராளமான நீண்ட கோடுகளும் பீடபூமி முழுவதும் வரையப்பட்டுள்ளன. நாஸ்காக் கோடுகளை ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்கள், "எப்படி பல நூறு மீட்டர்கள் தொலைவில் இருந்து வரும் 60 கோடுகளை ஒரே புள்ளியில் இணைத்திருக்கிறார்கள்" என்று வியக்கிறார்கள்.

விண்கலன்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும் தெளிவாகத் தெரியும் படியான ஆயிரக்கணக்கான கோடுகளை எதற்காக நாஸ்கா மக்கள் வரைந்திருக்கிறார்கள்? இந்தக் கோடுகள் கூறும் அர்த்தமென்ன?

மரியா ரெய்சி என்ற ஆராய்ச்சியாளர் தன் வாழ்நாள் முழுவதையும் நாஸ்கா கோடுகளை ஆராய்ச்சி செய்வதற்கே அர்ப்பணித்துள்ளார். நாஸ்கா கோடுகள் வின்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களையும், சூரியன் மற்றும் சந்திரனின் உதயத்தையும் அஸ்தமனத்தையும் குறிப்பதாகக் கூறியுள்ளார்.

இவருடைய ஆராய்ச்சி முடிவையும் தீர்வாக ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை. வேற்று கிரக உயிரினங்கள் வந்திறங்க உதவுவதற்கே இந்த கோடுகள் வரையப்பட்டுள்ளதென்று சிலரும், இறைவனை வழிபடுவதற்கும் தங்கள் இருப்பிடத்தைத் தெரிவிப்பதற்காகவும் வரையப்பட்டது என்று சிலரும், மிக நீளமான ஆடைகளின் இழைகளை நெய்வதற்காக இந்தக் கோடுகள் வரையப்பட்டதென்றும் சிலர் கூறுகிறார்கள்.

நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் தங்கள் தீர்வை வெளியிட்டாலும், நாஸ்காவின் மர்மம் மட்டும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

சுற்றுலாப் பயணிகளுக்கு கால் நூற்றாண்டாகத் திறந்துவிடப்பட்டுள்ளது. பெரிய அளவிளான பலூன்களில் ஏறி ஒரு கிலோமீட்டர் உயரத்தில் பறந்தபடியே இந்தக் கோடுகளையும் உருவங்களையும் பார்க்க முடியும்.

நம் முன்னோர்கள் நம்மை விடவும் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு நாஸ்கா கோடுகள் ஒரு எடுத்துக்காட்டு தான்!!
மேலும் அறிய

திவனாகு!!



திகைக்க வைக்கும் திவனாகு ஒரு வரலாற்று சின்னம் !!

உலகின் மிகப் பழைய நகரங்களுள் ஒன்று. நாலாயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் நகரம். வியக்கவைக்கும் கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் நகரம் என சொல்லிக்கொண்டே போகலாம் "திவனாகு"வைப் பற்றி!!

திவனாகு!!

தென்னமெரிக்க நாடான பொலிவியாவில் அமைந்த ஒரு வரலாற்றுத் தலம் தான் திவனாகு. பொலிவியாவின் தலைநகரம் 'லா பாஸி'ற்கு அருகிலும், உலகிலேயே உயரமான இடத்திலமைந்த (ஏரியான) டிடிகாகா ஏரிக்கு அருகிலும் அமைந்திருக்கிறது இந்நகரம். திவனாகு மக்களைப் பற்றிய எழுத்துப்பூர்வமான சான்றுகள் எதுவும் கிடைக்கா விட்டாலும், அவர்கள் நிர்மானித்த நகரமும், சூரையாடலிற்குப் பிறகு எஞ்சி நிற்கும் கட்டடங்களும் அவர்களின் சிறப்பை உலகிற்கு உரைக்கிறது.

அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த மண்பாண்டங்கள், எழில்மிகு சிற்பங்கள், தூண்கள், சிதைந்த பிரமிட்கள் என எஞ்சி நிற்கிறது திவனாகு. சில தூண்கள் 100 டன்கள் எடை கொண்டதாகவும், ஒன்றோடு ஒன்றாக சேர்த்து திடமாக நிற்கும் படியாகக் (ஆங்கில எழுத்து H வடிவத்திலான) கற்களை செதுக்கி கட்டடங்களை வடித்துள்ளார்கள். 10 மைல் தொலைவில் எந்த விதமான கல்குவாரிகள் இல்லாத போதும் எப்படி மிகப்பெரிய கற்களைச் சேர்த்திருப்பார்கள் என்பது வியப்பாகவே உள்ளது.

எகிப்து, மெக்சிகோ போன்ற இடங்களில் இருப்பதைப் போல பிரமிட்களும் திவனாகு நகரத்தின் 'அகாபானா' என்ற இடத்தில் அமைத்திருக்கிறார்கள். ஆனால் அவை யாவும் காலத்தின் மாறுதல்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் சிதைந்த நிலையில் உள்ளது.

விரகோகா - திவனாகு மக்களின் கடவுளான விரகோகாவை வழிபடுவதற்காக, நகரின் பிரதானமாக ஒரு வாயிலை எழுப்பியுள்ளார்கள். படைக்கும் கடவுளாக சூரியன் சந்திரன் என அகில உலகத்தையும் உருவாக்கியவர் என்று திவனாகு மக்களால் கருதப்பட்டிருகிறார், விரகோகா. சூரியனைத் தலைக்கவசமாகவும் கையில் ஆயுதங்களை ஏந்தியபடியான சிலைகளைப் பார்க்கும் பொழுது உலகெங்கிலும் உள்ள மக்கள் எப்படி ஒரே மாதிரியான எண்ண ஓட்டங்களைக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

தொல்லியல் ஆய்வாளர்கள், திவனாகு மக்கள் கி.பி.1000 வரை இந்நகரத்தில் வாழ்ந்து வந்ததாகக் கருதுகின்றனர். டிடிகாகா ஏரிக்கரையில் விவசாயம் செய்தும், நல்ல விளைச்சலால் மற்ற நாடுகளுடன் வணிகம் செய்ததாகவும் கருதுகின்றனர். கி.பி. 600 முதல் கி.பி.700 வரை இவர்களின் தாக்கம் இன்றைய பெரு, பொலிவியா மற்றும் சிலி போன்ற நாடுகளிலும் இருந்திருக்கிறது.காலநிலை மாற்றத்தால் சரியான மழை பெய்யாததாலும் நீராதரங்கள் பொய்த்துப்போனதாலும் திவனாகு மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.

இந்நகரம், 15ம் நூற்றாண்டில் இன்கா மன்னர்கள் கண்டுபிடிக்கும் வரை தொடர்பில்லாமல் இருந்திருக்கிறது. இன்கா அரசின் அழிவிற்குப் பிறகு 19ம் நூற்றாண்டில் பிற்பகுதி வரை மீண்டும் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.

புதையல் தேடுபவர்களாலும், புதிதாக வீடுகளைக் கட்டுபவர்களாலும், ஸ்பானிஸ் படையெடுப்புகளாலும் சிதைக்கப்பட்ட இந்நகர்ம் இன்று பொலிவியா அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. முன்னோர்களின் வரலாறு எதுவும் இல்லாத பொலிவியா நாட்டு மக்கள் திவனாகு நகரையும் அவர்கள் விட்டுச்சென்ற கால்தடத்தையும் தேட ஆரம்பித்துள்ளனர்.

இந்நாட்டு மக்களைப் பார்க்கும் பொழுதும் "நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்றவற்றை எப்படிப் பாதுக்காக்கிறோம்" என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. வெயிலில் இருப்பவர்களுத்தானே தெரியும் நிழலின் அருமை?


இந்த இடத்தைப் பற்றிய தகவல்கள் உள்ள தளங்கள் கீழே..

http://www.archaeology.org/interactive/tiwanaku/
http://www.crystalinks.com/tiahuanaco.html
http://en.wikipedia.org/wiki/Tiwanaku

Wednesday, June 06, 2012

நான் என்பது யார்?


நான் என்பது யார்..? நான் என்பதை அறிய முயலும் அந்த நான் யார்...?
|
அன்பர்களுக்கு என் பணிவான வணக்கம். இன்று நாம் பார்க்க விருக்கும் பதிவு, நமது வாசகர்களில் ஒரு அன்பர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தது. நம் அனைவரும் தெரிந்துகொள்ள இங்கே பகிரப்படுகிறது.


அண்ணாமலையில் இன்றும் அற்புதமான ஆன்மீக அதிர்வுகளை ஏற்படுத்தும், மகத்தான இடம் ரமணர் ஆஷ்ரமம். மயில்களின் அகவலும், அண்ணாமலையின் கம்பீர அழகும், உங்கள் மனதில் என்றும் அகலாத ஓவிய கல்வெட்டாய் நிற்கும். இங்கு உள்ள தியான மண்டபத்தில், மனம் ஒருமுகப்படும் பரவசத்தை, நான் பலமுறை வியந்து அனுபவித்து இருக்கிறேன். அந்த மகானின் வாழ்வில் நடந்த , ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை , உங்கள் அனைவரிடம் பகிர்ந்துகொள்வதில், நான் பெருமைப் படுகிறேன்...


அவரது உபதேசங்களில் ஒரு நான்கு மட்டும் கீழே கொடுத்து இருக்கிறேன். இதை, நீங்கள் மனதில் அசை போட்டாலே , ஒரு பரவச நிசப்தத்தில் அமிழ்வது உறுதி.

நான் என்பது யார்..? நான் என்பதை அறிய முயலும் அந்த நான் யார்...? தேட ஆரம்பிங்க தங்கங்களே...!


படிச்சு முடிச்ச பிறகு, உங்களோட ஒரே ஒரு கெட்ட விஷயத்தை , உங்களால நிறுத்த முடிஞ்சா, அதுவே இந்த கட்டுரையின் மிகப் பெரிய வெற்றி...! அண்ணாமலையார் ஆசீர்வாதம்!  வாங்க உள்ளே போவோம்..!

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதானால் எந்தப் பயனும் இல்லை.

கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட  கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.


தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.

குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.

ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம்.  ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ள அதுவே மிகவும் முக்கியம்.

‘ஒருவன் தன்னைத் தான் அறிந்து கொள்ளுதலே, இறைவனை அறிந்து கொள்வதற்கு முதற்படியாகும்’ என்ற ஞான உபதேசத்தை அருளியவர் பகவான் ரமணர். பாலப் பருவத்திலேயே திருவண்ணாமலையைத் தேடி வந்து தஞ்சம் புகுந்தவர். தனது இறுதிக் காலம் வரை அண்ணாமலையை விட்டு நீங்காதவர்.

ரமணர் விருபாஷிக் குகையில் தங்கி இருந்த காலம். ஒரு நாள் மாலை வேலையில் திரளாக பக்தர்கள் கூட்டம் வந்திருந்தது. வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக ஸ்ரீ பகவானை தரிசித்துக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் திடீரென மழை பொழியத் துவங்கியது. மெதுவாக ஆரம்பித்த மழை பேய் மழையாகக் கொட்டித் தீர்த்தது. தரிசிக்க வந்தவர்கள் யாரும் கீழே இறங்கிச் செல்ல முடியாத நிலை.

மாலை கடந்து இரவும் வந்து விட்டிருந்தது. இரவு எட்டு மணியைக் கடந்து விட்டதால் ஒவ்வொருவருக்கும் நல்ல பசி ஏற்பட்டது. ஆனால் அத்தனை பேருக்கும் போதுமான உணவு கையிருப்பில் இல்லை. பகவானின் அடியவரான பழனிசாமிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பகவானின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பகவானும், ‘சரி, சரி மழை விடுவதாகத் தெரியவில்லை. இவர்களோ பாவம் பசிக்களைப்பில் இருக்கிறார்கள். அதனால் இருக்கும் உணவை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடு’ என்றார்.

உடனே பழனிசாமி உணவை  சிறு சிறு உருண்டையாக உருட்டி வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கத் தொடங்கினார். அவர்களும் அந்தச் சிறு கவளங்களை ரமணப் பிரசாதமாக நினைத்து வாங்கி உண்டனர். மூன்று பேருக்கு மட்டுமே வைத்திருந்த அந்த உணவு கிட்டத்தட்ட முப்பது பேர்களுக்கு சிறு சிறு உருண்டைகளாக்கிப் பகிர்ந்தளிக்கப்பட்டது. சற்று நேரத்தில் அனைவருக்கும் வயிறு நிறைந்து விட்டதுடன் அறுசுவை உணவு உண்ட திருப்தியும்  ஏற்பட்டது. தண்ணீர் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு வயிறு நிறைந்திருப்பதைக் கண்டு ‘எல்லாம் ரமணரருள்’ என்று எண்ணித் தொழுதனர் பக்தர்கள்.

எல்லாவற்றிற்கும் காரண சூத்ரதாரியான ரமணரோ ஒன்றும் பேசாமல் எங்கோ மௌனமாய் நோக்கிக் கொண்டிருந்தார். எதிலும் பற்றற்று இருப்பது தானே ஞானிகளின் இயல்பு.


 சதா ஞான நிலையிலேயே பகவான் இருந்து வந்த போதிலும் ஆசிரம வாழ்வில் அவருடைய நகைச்சுவை உணர்விற்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை.

ஒருநாள்…  விடியற்காலை மூன்றுமணி இருக்கும். மகரிஷியை பார்க்கச் சிலர் ஆசிரமத்திற்கு வந்தனர்.  ஆசிரமத்தில் யாரையும் காணாததால், அவர்கள் நேரே சமையல் நடக்கும் இடத்திற்குச் சென்றனர். அங்கே ஆசிரம சமையல் பாத்திரங்களை ஒருவர் மெதுவாகக் கழுவிக்கொண்டிருந்தார். அவரிடம்,  ‘ஐயா இங்கே பகவான் ரமணர் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டனர்.

அதற்கு அந்த மனிதரும், ’ஓ, ரமணரா, இதோ இருக்கிறாரே, இதுதான் ரமணர்’ என்று சொல்லி, தான் கழுவிக் கொண்டிருந்த அண்டாவை அவர்களிடம் காண்பித்தார். வந்தவர்களோ அவருக்குக் காது கேட்காதோ என நினைத்துக் கொண்டு, மீண்டும் அதையே கேட்டனர்.

அதற்கு அந்த மனிதர் மீண்டும் தன் கையில் இருந்த அண்டாவைக் காட்டி,  ‘பாருங்கள்,  இதுதான் ரமணர். ரமண மகரிஷி என்று பேர் கூடப் பொறித்திருக்கிறார்களே, உங்களுக்குத் தெரியவில்லையா?’ என்றார்.
வந்தவர்கள்,  இவர் யாரோ சித்த சுவாதீனமில்லாத மனிதர் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டு தரிசன ஹாலுக்குச் சென்று அமர்ந்து கொண்டனர்.
பொழுது விடிந்தது. சற்று நேரத்தில் ‘பகவான் வருகிறார், பகவான் வருகிறார்’ என்ற குரல் கேட்டது.

அனைவரும்  மரியாதையுடன் எழுந்து நின்று பார்த்தனர், அங்கே பாத்திரம் தேய்த்த அந்த மனிதர் வந்துகொண்டிருந்தார்.
அவர் தான் பகவான் ரமணர் என்று அறிந்து கொண்டதும் அவர்களுக்கு வியப்பு தாளவில்லை. அதே சமயம், பகவான் ஏன் தங்களிடம் அப்படி நடந்து கொண்டார் என்று அறிய விரும்பினர்.  அவரை அணுகிக் காரணம் கேட்டனர்.
அதற்கு பகவான்,  ‘நான்தான் ரமணன்னு நெற்றியில எழுதி ஒட்டிக் கொண்டா இருக்க முடியும்.?’ என்று கேட்டார், புன் சிரிப்புடன். பின், ‘நான் என்பது இந்த உடலல்ல; இதைத் தான் நான் இத்தனை வருடங்களாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன். அப்படிச் சொல்லியும் என்ன பயன், எல்லோரும் அதை  உணராமல் இருக்கிறீர்களே!’ என்றார் வருத்தத்துடன்.

தங்களுக்காக வாழாமல் பிறர்க்காகவே வாழ்ந்ததால்தான் அவர்கள் மகான்கள் என்று போற்றப்படுகின்றனர்.

மகான்களின் பெருமை பேசவும் இனிதே!

விவசாயத்தின் முதுகெலும்பு


ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின், இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு: ஒன்று குருகுலக் கல்வி; மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.

அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான, ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையை பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை, பிரிட்டிஷாரை சார்ந்திருக்கவும், அவர்களுக்கு சாதகமாகவும் மாற்ற நினைத்தார். அவருடைய ஆய்வின்படி, இந்திய கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள் தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும். இப்பசுக்களை அழித்துவிட்டால், விவசாயம் அழிவுப்பாதையை நோக்கி திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக் கொல்லி மருந்துகளுக்காகவும் ஆங்கிலேயர்களை சார்ந்து இருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.நமது பசுக்களின் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக் கொல்லியாகவும் காலம், காலமாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வந்தது.பசுக்கள் அழிந்தால், இந்தியர்கள், உரத்திற்கும், பூச்சிக் கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரை சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார். இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.

நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு, 54 குவிண்டால் அளவுக்கு சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். இதை அறிந்து, 1760ல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்ல, பசுவதை கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். முதல் பசுவதைக் கூடம் நிறுவப்பட்டு, நாளொன்றுக்கு, 30 ஆயிரம் பசுக்கள் வீதம், ஒரு ஆண்டில் ஒரு கோடி பசுக்களை கொன்றார். அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன், இதேபோல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்கள் உணவு என்ற போர்வையில் கொல்லப்பட்டன.அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள் தொகையை விட, பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதன்மூலம் ஆரோக்கியமான உணவு உற்பத்தி நடந்தது. 1910ம் ஆண்டு நம்நாட்டில், 350 பசுவதைக் கூடம் இரவும், பகலும் இயங்கின. பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததும், நாம் ரசாயன உரத்திற்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவானது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன.

நம்நாடு சுதந்திரம் அடைந்த பின், பசுமை புரட்சி என்ற பெயரில், பெருமளவு ரசாயன உரங்களை பயன்படுத்தி, உற்பத்தியை பெருக்கினோம். அதன் பக்க விளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.ஒருமுறை காந்தியிடம், ஒரு பத்திரிகை நிருபர் கேட்ட கேள்விக்கு, அவர் கூறிய பதில், "இந்தியா சுதந்திரம் அடையும் அந்த நாளில், இந்தியாவில் உள்ள அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும்' என்றார். 1929ம் ஆண்டு, நேரு ஒரு பொதுக் கூட்டத்தில், "நான் இந்தியாவின் பிரதமரானால், இங்குள்ள பசுவதைக் கூடங்களை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்' என்றார்.இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால், 1947க்குப் பின், 350 பசுவதைக் கூடங்கள் என்ற நிலையில் இருந்து, 36 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் என்ற நிலைக்கு, "முன்னேறி' விட்டோம். இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக் கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் பசுக்கள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான பசுக்கள் கொடூரமாக கொல்லப்படுகின்றன. டில்லியில் மட்டும், 11 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குகின்றன. இங்கு மட்டும் நாளொன்றுக்கு, இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன.நமது நாட்டு பசுக்களின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய கால்நடைகள், நல்ல உடல் சக்தியுடன், நோய் எதிர்ப்பு திறன், வெயிலை தாங்கும் சக்தி பெற்றவை. மாபியா கும்பல், அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக் கணக்கான பசுக்களை சந்தைகளில் வாங்கி, வதைக் கூடங்களுக்கு அனுப்பி வருகிறது. இதற்கு போலீஸ் துறையும் உடந்தையாக செயல்படுகிறது. வடமாநிலங்களில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் கிராம மக்களிடம் இருந்து பறித்துச் செல்லப்படுகின்றன.

விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தக கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன. கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்து கொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே வருகிறது. முந்தைய ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் என்ற திட்டத்தில், இருந்த புறம்போக்கு நிலங்களும் மறைந்துவிட்டன.விளைநிலம் குறைந்தால் என்ன, குறைந்த நிலம், அதிக மகசூல் என்ற நோக்கில் அறிவியலாளர்கள் உள்ளனர். உணவுப் பொருட்களை விளைவிப்பதைவிட, இறக்குமதி செய்து கொள்வது எளிது என, அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இதன் பாதிப்புகளை அனுபவிக்கப்போவது, வருங்கால சந்ததிகள் தான்.

அறிவியலாளர்கள் மற்றும் பிராணிகள் நல அமைப்பினர்களின் புள்ளி விவரப்படி, நம் நாட்டில் உள்ள, 73 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவிற்கு உடல் உழைப்பை நமக்கு கொடையாக அளிக்கின்றன. இந்த உழைப்பின் மூலம், இதேஅளவு சக்தியை உற்பத்தி செய்ய ஆகும் நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருட்களை சேமிக்கின்றன.இக்கால்நடைகளால் ஒரு ஆண்டுக்கு, 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்கு கிடைக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய். இச்சாணம் கிடைப்பதால், 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால், மரங்கள் அதிக அளவிற்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கை சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

இந்த, 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால், நமக்கு, 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும். அவற்றை இயக்குவதற்கு, 2 கோடியே, 37 லட்சத்து, 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலை பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவிவெப்பமயமாதல் அதிகரிக்கும்.இயற்கை நமக்கு தந்த செல்வங்களான, கால்நடைகளை கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை, சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.இன்று, ரசாயன உரம் இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம்.

அதுமட்டுமின்றி பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் இறக்குமதி செய்கிறோம்.ஒரு நவீன மாடு வதை கூடத்திற்கு, அதை சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு, இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். தண்ணீர் தட்டுப்பாடும், எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம்நாட்டில் இயற்கையின் கொடையாக கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களை கொல்வதை, இனிமேலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

நன்றி:
டாக்டர் கே.வெங்கடேசன் - செயலர், தமிழ்நாடு பிராணிகள் நல அமைப்பு, மதுரை.

Tuesday, June 05, 2012

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்


மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

எனக்கு மிக பிடித்த கலைஞன்


எனக்கு மிக பிடித்த கலைஞன்..........

கமல்ஹாசன் - சில சாதனைகள், சில தகவல்கள்!

• நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.- விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது.

• இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார்.

• இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

• கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார்.

• கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் கையளிக்கப் பட்டது.

• கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தகம் செய்திருக்கிறது.

• கமல்ஹாசனின் கனவுப்படைப்பான மருதநாயகம் இங்கிலாந்து மகாரானி எலிஸபெத்-2 அவர்களால் துவக்கப்பட்டது.

• உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன்.

• கமல்ஹாசன் மற்றும் அவரது நற்பணி இயக்கத்தினர் இதுவரை 10000 ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். 10000 கிலோ அரிசியை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

• 100 கோடி ரூபாய் தருகிறோம் என ஒரு அரசியல் கட்சி அழைத்தும் அதை துச்சமாக மதித்தவர் கமல்ஹாசன்.

• இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன்.

• 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று மாபெரும் சாதனை புரிந்தவர் கமல்ஹாசன்.

• கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது.

• கமல்ஹாசனுக்கு மற்ற கலையுலக வித்தகர்களால் வழங்கப்பட்ட பட்டங்கள் "காதல் இளவரசன்" - ஜெமினி கணேசன், "புரட்சி மன்னன்" - கே. பாலச்சந்தர், "சூப்பர் ஆக்டர்" - பஞ்சு அருணாசலம், "கலைஞானி" - டாக்டர் கலைஞர், "உலக நாயகன்" - கே.எஸ். ரவிக்குமார்.

• The Fuel Instrument Engineers (FIE) Foundation, (Ichalkaranji, Maharashtra ) எனும் அமைப்பு நம் காலத்தில் வாழும் சிறந்த இந்தியர் எனும் விருதை கமல்ஹாசனுக்கு வழங்கி இருக்கிறது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் 5 பேர் மட்டுமே (டாடா உட்பட)

• சென்னை ரோட்டரி சங்கமும் கமல்ஹாசனுக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

• டாக்டர் ஏ.டி. கோவூர் தேசிய விருது சிறந்த மனிதாபிமானம் மற்றும் சமூகசேவைகளுக்காக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை வழங்கியவர்கள் Bharatheeya Yukthivadi Sangham (Rationalist Association of India ).

• மதுரையில் திரைப்படத் துவக்க விழா செய்த ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. விருமாண்டிப் படத்துக்கான துவக்க விழா மதுரையில் நடைபெற்றது.

• கமல்ஹாசனுடன் இன்டெல் நிறுவனம் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் எண்டெர்டெயிண்ட்மெண்டை அறிமுகப்படுத்த பணியாற்றி வருகிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் கமல்ஹாசன் ஒருவருடன் மட்டுமே இதுபோல ஒரு பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

• ஒரே ஆண்டில் 5 சில்வர்ஜூப்ளி திரைப்படங்களை அளித்தவர் கமல்ஹாசன் மட்டுமே. எந்த ஒரு நடிகராலும் இந்த சாதனையைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அந்தப் படங்கள் : 1982 - ஜன. 26 - வாழ்வே மாயம் (200 நாள்), பிப். 19 - மூன்றாம் பிறை (329 நாள்), மே 15 - சனம் தேரி கஸம் (175 நாள்), ஆக. 14 - சகலகலா வல்லவன் (175 நாள்), அக். 29 - ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்)

• கமல்ஹாசன் நடித்த மரோசரித்திரா பெங்களூரின் கவிதா தியேட்டரில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதே படம் சென்னை சபையர் திரையரங்கில் 600 நாள் ஓடியது. மரோசரித்திரா இந்தியில் "ஏக் துஜே கலியே" என்ற பெயரில் எடுக்கப்பட்டு அங்கும் 350 நாள் ஓடியது.

• அகில இந்திய ரசிகர் மன்ற மாநாட்டினை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நடிகர் நடத்தியது என்றால் அந்தப் பெருமை கமல்ஹாசனையே சாரும். இவர் 1985ல் கோவையில் இந்த மாநாட்டினை நடத்தினார்.

• கமலுக்கு தனது பிறந்தநாளான நவம்பர் 7ஐ கொண்டாடுவதில் ஒரு சங்கடம் உண்டு. ஏனெனில் இதே தேதியில்தான் அவரது தந்தையார் மறைந்தார்.

• இவரது நூறாவது படமான ராஜபார்வையில் நடிக்கும்போது இவரது வயது 27.

• டைம்ஸ் பத்திரிகை இவர் நடித்த நாயகன் திரைப்படத்தை உலகின் சிறந்த 100 படங்களுக்குள் வகைப்படுத்தியிருக்கிறது.

• உடல்தானம் செய்த முதல் நடிகர் டாக்டர் கமல்ஹாசன் தான். சென்னை மருத்துவக்கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று இதைச் செய்தார்.

• இந்தியத் திரைப்படங்களிலேயே முதன்முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசனின் 100வது படமான ராஜபார்வையில் தான்.

• தமிழில் மார்பிங் தொழில்நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் தான்.

• ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைத்து மேக்கப் போடப்பட்ட முதல் இந்தியப்படம் "இந்தியன்"

• கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முதன்முதலாக ஒரு இந்தியத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது என்றால் அது கமல்ஹாசன் நடித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில் தான்.

• ஹாலிவுட் படமொன்றில் மேக்கப் அசிஸ்டண்டாகப் பணிபுரிந்து அந்தப் படத்தின் டைட்டிலிலும் கமல்ஹாசனின் பெயர் வந்திருக்கிறது.

• சென்னையில் முதன்முதலாக ஆயிரம் காட்சிகள் தொடர்ந்து அரங்குநிறைந்து ஓடிய படம் சகலகலா வல்லவன்.

• கொடைக்கானலில் இருக்கும் ஒரு குகையை கண்டுபிடித்து அதில் குணா படத்தின் படப்பிடிப்பை நடத்தியதால் அந்த குகைக்கே "குணா குகை" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

• கமல்ஹாசனுக்கு இதுவரை 34 முறை படப்பிடிப்புகளில் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது. டூப் போட்டு கும்மி அடிக்கும் மற்ற நடிகர்களில் வித்தியாசமானவர் நம் கமல்.

• தமிழ் திரையுலக சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் கமல்ஹாசன்.