Wednesday, August 24, 2011

சேரமான் பெருமாள் ஒரு இஸ்லாமியரா?

சேரமான் பெருமாள்
சேரமான் பெருமாள் நாயனார்.

இவர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சுந்தரரின் உற்ற நண்பர். சேர நாட்டை ஆண்டவர். சிவனை மறவாத சிந்தையுடையவர். இவர் தினமும் தம்முடைய சிவபூஜையின் முடிவில் நடராஜப் பெருமானாரின் சிலம்பொலி கேட்டு மகிழும் பாக்யம் பெற்றவர். ஒரு நாள் நீண்ட நேரமாகியும் சிலம்பொலி கேட்கவில்லை என்பதால் ’இனி உயிரை மாய்த்துக் கொள்வதே தக்கது’ என எண்ணி உடைவாளைத் தம் கழுத்திற்குக் கொண்டு சென்றார்.

அப்போது திடீரென சிலம்பொலி மிகுதியாகக் கேட்டார்.

”தில்லையில் சுந்தரன் நம்மைத் தீந்தமிழில் பாடி வழிபட்டான். அதிலேயே யாம் மூழ்கி விட்ட காரணத்தால் காலதாமதம் ஆயிற்று” என அசரீரியாய் அருளினார் சிவபெருமான்.

அதைக் கேட்ட சேரமான் உடனே தில்லை சென்று நடராஜர் மீது பொன் வண்ணத் தந்தாதி பாடி வணங்கினார். சுந்தரரைச் சந்தித்து அவருடன் நட்பு பூண்டார். திருவாரூர் மும்மணிக்கோவை என்பதும் சேரமான் இயற்றியதே!


யானையில் சுந்தரர்
சேரமானைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரரும் சேரமான் பெருமானும் வானுலகம் சென்றனர். இறைவனிடத்திலிருந்து வந்த தேவ வாகனமாகிய வெள்ளை யானையில் சுந்தரர் செல்ல, ஒரு வெள்ளைக் குதிரை மீது ஏறிச் செல்கிறார் சேரமான். இதை அறிந்த ஔவை தானும் விரைவாகக் கைலாயம் செல்ல வேண்டி, விநாயகருக்கான பூஜையை வேகமாக முடிக்க விழைய, விநாயகர் அவரைத் தடுத்து வழக்கம் போல் பூஜை செய்யும் படியும் தாம் அவர்களுக்கு முன்னால் ஔவையைக் கொண்டு சேர்ப்பதாகவும் கூறினார். அவ்வாறே ஔவை விநாயகர் அகவல் பாடி முடித்ததும், விநாயகர் தம் துதிக்கையால் அவரைத் தூக்கிக் கைலாயம் சேர்ப்பித்தார்.

தமிழகத்தில் உள்ள பல ஆலயங்களிலும் இவ்வரலாறு குறித்த சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன. ஆனால் அது சுந்தரர் அல்ல ஒரு சூபி ஞானி என்றும், அவரோடு இணைந்து சேரமான் மெக்கா சென்று விட்டார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. சேரமான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு சூஃபி ஞானியாகி விட்டார் என்றும் ஒரு கருத்து உள்ளது. ஒரு சிலர் அது ”பள்ளி பாண பெருமாள்” என்னும் சேர மன்னர், அவர் சேரமானுக்கு 200 ஆண்டுகள் பின்பு வாழ்ந்தவர், அவரே இஸ்லாத்தை ஏற்று மெக்காவுக்குப் பயணமானார் என்றும் கூறுகின்றனர். கேரளாவில் அவர் எழுப்பிய மசூதியும் உள்ளது. அதுவே இந்தியாவில் முதன் முதலாக இஸ்லாமியர்களுக்கு என்று ஏற்பட்ட மசூதியாகக் கருதப்படுகிறது. சேரமான் மசூதி என்பதே அதன் பெயர். சேரமான் மாலிக் நகர் என்றும் அங்கே உள்ளது.


சேரமான் மசூதி

அறிவிப்பு

சேரமான் மாலிக் நகர்
ஆனால் ’சேரமன்னர் வரலாறு’ என்ற நூலை எழுதிய ஒளவை துரைசாமிப் பிள்ளை இது முற்றிலும் தவறான செய்தி என்கிறார். சேர மன்னர் மக்கா சென்றது பற்றிய விவரங்கள், கேரளோற்பத்தி மற்றும் கேரள மான்மியம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் அது காலத்தால் பிந்தியது, பெரிய புராண காலத்திற்கு மிக மிகப் பிற்பட்டது. ஆகவே அதனை ஆதாரமாக ஏற்க இயலாது என்கிறார் பிள்ளை.


சேரமான் தர்கா, ஓமன்
அரேபியாவில் உள்ள கடற்கரை நகரான ஜாபரில் அப்துல் ரஹ்மான் சாமுரி என்பவரின் கல்லறை உள்ளது. கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமியராக மாறிய ஒரு ஹிந்து மன்னனின் கல்லறை அது என்று கூறப்படுகிறது. ஓமனில் ஒரு கேரள இந்து மன்னரின் சமாதி இருப்பதாகவும் அது சேரமான் பெருமாளுடையது என்றும் நம்பப்படுகிறது. ஒரு சில ஆய்வாளர்கள் சேக்கிழார் குறிப்பிடும் சேரமான் பெருமாள் வேறு. இஸ்லாத்தை ஏற்று மெக்கா சென்ற சேரமான் வேறு என்று குறிப்பிடுகின்றனர்.


இந்தியாவின் முதல் மசூதி, கொடுங்காளூர், கேரளா
ஆக, சேரமான் என்ற பெயரில் பல மன்னர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதும் அவர்களில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது. ஆனால் பெரிய புராணம் கூறும் நபர், கேரள மானுவல் கூறும் நபரும் ஒரே ஆளாக இருக்கும் வாய்ப்பு இல்லை என்பதே எனது கருத்து என்றாலும் இதனை ஆய்வாளர்கள்தான் இறுதி முடிவை ஆராய்ந்து தெரிக்க வேண்டும்.

ஓமனின் உள்ள சேரமான் சமாதி பற்றிய விவரங்களுக்கு… http://www.aulia-e-hind.com/dargah/Intl/Oman.htm

No comments:

Post a Comment